« Home | கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? » | திலீபனின் இறுதி உரையிலிருந்து... » | கேணல் சங்கர் » | திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987 » | திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09.1987 » | திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987 » | திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987 » | திலீபனுடன் எட்டாம்நாள்.-22.09.1887 » | திலீபனுடன் ஏழாம் நாள் -21-09-1987 » | திலீபனுடன் ஆறாம் நாள் -20-09-1987 »

மறுபக்கத்தின் நேர்முக தரிசனம்

-சி.இதயச்சந்திரன்-

தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு வகையான பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார். படையினரின் மனவலுவை அதிகரிக்க விமல் வீரவன்சவை களமுனையிலுள்ள படையினருக்கு பிரசங்கம் நிகழ்த்த அனுப்பி வைத்தார். முன்பொரு காலத்தில் படையிலிருந்து தாமாக விலகாவிட்டால் குடும்பத்தையே அழிக்கப்போவதாக கூறிய ஜே.வி.பி.யின் வழித்தோன்றல் புதிய அவதாரத்துடன் படையினர் முன்தோன்றி சிங்கள தேசியம் பேசினார்.

ஜனாதிபதி எதிர்பார்த்தபடி படையினர் உற்சாகமூட்டப்பட்டாலும் அவருக்குக் கிடைத்த இரகசிய செய்திகள் பெருங் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜே.வி.பி.யின் ஆதிக்கம் படையினர் மத்தியில் அதிகரித்து விட்டதாம்.

சிங்கள அதி தீவிரவாதத்தை நோக்கிய மஹிந்தவின் நகர்வுகள் இனவாத சக்திகளான ஹெல உறுமய ஜே.வி.பி. போன்றவற்றையும் சமமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது. அதேவேளை இத்தீவிர இனவாதிகள் சந்திக்கத் தேவையற்ற இன்னுமொரு விடயத்தையும் ஜனாதிபதி முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

அரசை ஆளும் தலைவருக்கு வண்டி ஒட்டச் சக்தி தேவை. சுனாமி என்கிற அதிர்ஷ்ட லாபச் சீட்டில் கிடைத்த பணம் கரைந்துவிட்டது. இனிமேல் இணைத்தலைமை நாட்டு சக்கரவர்த்திகளின் தயவு அதிகம் தேவை. தேசிய அரசு அமைக்க முயல்வது போன்றொரு பாவனை, படுகொலைகளை விசாரிக்க சர்வதேச நிபுணர் குழு போன்ற பல திருகுதாளங்களைப் போடத் தொடங்கி விட்டார் ஜனாதிபதி.

சிங்கள மக்களின் மேலாதிக்க உணர்வுத் தளத்தினை ஆக்கிரமித்திருக்கும் ஜே.வி.பி., பிக்குமார் முன்னணியையும் புதிய கட்சி தொடங்கவிருப்பதாக கூறப்படும் சந்திரிகா பண்டாரநாயக்க பரம்பரையினரையும் மீறி தனது அரசியல் இருப்பினை தக்க வைக்க பெரும் போராட்டத்தையும் நாட்டு மக்களின் சமூக பொருளாதார வாழ்வினை சராசரி நிலைக்கு வைத்திடத் தேவையான பொருளியல் வளம் தேட வேண்டிய இன்னுமொரு போராட்டத்தையும் ஜனாதிபதி செய்யவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.

சிங்கள மக்களுக்கு துட்டகெமுனுவாகவும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் உலகப் போராளியான சர்வதேசத்திற்கும் தனது பிளவுற்ற ஆளுமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.

இந்நிலையில் கூர்மையடையும் அரசாங்கத்தின் அக முரண்பாடுகள் விடுதலைப் புலிகள் உற்று நோக்குகிறார்கள். சம்பூர் பின்னகர்வு சர்வதேசத்திற்கு போடப்பட்ட பொறியாகவிருந்தாலும் அவ்வெற்றியினால் கிளர்ந்தெழுந்துள்ள சிங்கள இன மேலாண்மைச் சக்திகளின் அதீத ஆக்கிரமிப்பு வெளிப்பாடுகளையும் புலிகள் எடை போடுகிறார்கள்.

புலிகளைக் குளிர்விக்கவும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தவும் சகல ஆய்வாளர்களும் முனைவதாக சில ஆதங்கங்கள் வெளிப்படுகின்றன. அத்துடன் உலக விடுதலைப் போராட்டங்களிலிருந்து கற்ற பாடங்களை மற்றவர்களுக்கு போதிப்பது அவசியமானதாகவும் சிலரால் கூறப்படுகிறது.

வெகுஜன அரசியல் என்பது வெகுஜன போராட்டத்தினூடே தோற்றம் பெறும். இடதுசாரிகள் கூறும் வெகுஜன அரசியல் போராட்டத்தில் வடிவமானது வர்க்க முரண்பாட்டின் முழுமையை அடித்தளமாகக் கொண்டிருக்கும்.

இருப்பினும் சமூகத்திலுள்ள முற்போக்கான புத்திஜீவிகள், குட்டி பூர்சுவாக்கள் என்று பலரும் அவ்வகையான வெகுஜன போராட்டங்களில் இணைந்திருப்பார்கள். இன அடக்கு முறைக்குள்ளாகும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்ட வெகுஜன அரசியலில் ஒட்டுமொத்த மக்களும் பங்கு கொள்வார்கள்.

அடக்கி ஆளும் அரசிற்கு அடக்கப்படும் இனத்தின் முழுத் தொகுதியுமே அதன் இன மேலாதிக்கத்தின் இலக்காக அமையும். வர்க்க பேதமற்ற பாட்டாளி வர்க்க அரசு இவ்வுலகில் உருவாக்கப்படுகிறதோ இல்லையோ, சிறுபான்மை இனத்தினை வர்க்க பேதமற்ற வகையில் ஒடுக்குவதற்கு பெருந் தேசிய இனவாத அரசுகள் எப்போதும் முன்னிற்கின்றன.

பெருந்தேசிய மேலாண்மைக்கு வர்க்க பேதம் கிடையாதென்பதே வரலாற்று உண்மை. வர்க்கப் புரட்சி வெடிக்கும்வரை தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒரு மூலையில் மூட்டை கட்டி வை என்பதே பழமைவாத இடதுசாரிகளின் வெற்றுக் கோஷமாக முன்பு இருந்தது.

அந்த பலவீன கோஷம் நீர்த்துப்போய் பல காலமாகிவிட்டது. தேசிய விடுதலைப் போருக்கான பல வெகுஜன அமைப்புக்களின் போராட்ட முன்னெடுப்புக்கள் எம்மண்ணில் நிகழ்ந்துள்ளன. தற்போது புலம்பெயர் நாடுகளில் கவனஈர்ப்புப் போராட்டங்களாக நீண்டு கொண்டு செல்கின்றன.
தாயக மண்ணில் நிகழ்ந்த வெகுஜன போராட்டங்களில் முன்னின்று உழைத்த பலர் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலக விடுதலைப் போராட்டங்களை இதனுடன் ஒப்பிட்டுக் கூறுவதால் மக்கள் விழிப்படைவார்களென்று யாரும் கருதினால் மிக நல்ல உதாரணமாக எல்சல்வடோரைக் குறிப்பிடலாம்.

மக்கள் படையணியின் உருவாக்கம் வெகுஜன அரசியல் போராட்டத்தினூடு தோற்றம் பெற்றதென்பதைக் கருத்தில் கொள்ளலாம். மக்கள் சீனத்தில் செம்படையின் எழுச்சி மாவோவின் நீண்ட பயணத்தினூடு உருவானது வரலாறு. அதன் நேரடிப் பிரதியாக ஈழத் தேசிய விடுதலைப் போராட்ட வெகுஜன அணி திரட்டல்களை ஒப்பிட முடியாது.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னான காலங்களில் முகிழ்ந்த வெகுஜன ஒன்றியங்கள், கிராமிய படையணிக் கட்டுமானங்கள், பரந்துபட்ட மக்களை அணிதிரட்டும் பொங்கு தமிழ் நிகழ்வெழுச்சிகள் போன்றவை போராட்டத்தின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன.

அத்தோடு மக்களை அரசியல் மயப்படுத்தும் நோக்கோடு தமிழீழ தேசியத் தொலைக்காட்சி ஊடகத்தின் வரவும் நிலைவரம் போன்ற அரசியல் ஆய்வு நிகழ்ச்சிகளும் புலிகளின் குரல் வானொலியூடாக சர்வதேச உள்நாட்டு சமகால அரசியல் கருத்தாடல்களும், கிராமிய மட்டத்தில் கருத்தரங்குகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன.

அரசியல் மயப்படுத்தலின் அளவுப் பரிமாணம் மக்கள் மத்தியில் கருத்து ரீதியிலான எவ்வகை பண்புநிலை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதென்பதை மக்களின் ஒழுங்குபடுத்தப்பட்ட எழுச்சி நிகழ்வுகளினூடாக உணர முடியும். இவற்றைக் கடந்த நிலையிலேயே ஆயுதம் ஏந்திய ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் படையணி உருவாகும்.

தேசிய விடுதலைப் போராட்டத்தில் தோற்றமும் இப்படையணி வர்க்கப் புரட்சிக்கான செம்படையின் அரசியல் பண்புகளிலிருந்து வேறுபட்டாலும் சமுதாயத்தின் அடுத்த பாய்ச்சலிற்கான முற்போக்குப் பண்புக் கூறுகளையும் அது உள்வாங்கியே நகரும்.

அடுத்ததாக பலஸ்தீன மக்களின் போராட்டத்திலிருந்து கற்பதற்கு ஏராளமான விடயங்கள் உண்டென்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்பு எரித்திரியா, வியட்னாம், தென் ஆபிரிக்கா போன்ற பல நாடுகளில் அனுபவங்களை பல ஆய்வாளர்கள் விரிவாக பகிர்ந்து கொண்டுள் ளார்கள். இருப்பினும் பலஸ்தீனப் போராட்டம் இன்னமும் நிறைவுறாத நிலையில் அதன் கடந்த கால வரலாற்றினை அலச முற்பட்டாலும் நிகழ்கால மாற்றங்கள் பல அழுத்தங்களினால் திசை மாறிப் போவதையும் ஆய்விற்குட்படுத்த வேண்டும்.

பலஸ்தீன ஆயுதப் போராட்டம் புறக்காரணிகளால் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இன்டிபாடா (ஐவெகையனய) என்கிற கல்லெறிப் போராட்டம் உருவானதன் அடிப்படையைப் ஆராய்ந்தால், அதில் நாம் கற்றுக்கொள்ள அதிக விடயங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

பலஸ்தீன தேசியத்தை 'பற்றாவும்" இஸ்லாமிய தேசியத்தை 'ஹமாஸ{ம்" அரசியல் கருத்துருவமாக ஏற்றுக்கொண்ட நிலையில் ஆட்சி அதிகாரப் போட்டியில் பங்குகொண்ட இருவரும் பலஸ்தீன மக்களிடையே பிளவினை ஏற்படுத்தியமையே யதார்த்த நிலையாகும். பலமான இரண்டு எதிரிகளுக்கு எதிராக போராடும் இவர்கள் தம்மிடையே பகை முரண்பாடுகளை வளர்த்ததாலேயே மூன்றாவது சக்தியின் அழுத்தங்கள் அதிகரித்தன.

இன்று தேசிய அரசொன்றை அமைக்க பற்றாவும் ஹமாஸ{ம் முயற்சிப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. அத்தேசிய அரசை உருவாக்கும் முயற்சி, மேற்குலகின் பொருளாதார உதவிகளைப் பெறுவதனை அடிப்படையாகக் கொண்டதான நகர்வாகவே கருத வேண்டியுள்ளது.

இத்தேசிய இணக்கமானது பலஸ்தீன விடுதலையை நோக்கி நகரும் முற்போக்கான முன்னகர்வாகக் கொள்வது தவறான பார்வையாகும்.

பலஸ்தீன மக்களிற்கான பொருளாதார உதவிகளை அண்டைய அரபு நாடுகள் முன்னைய காலங்களில் வாரி வழங்கின. தற்போது இவ்வாறான உதவி அருகி இருப்பதன் காரண காரியத்தை வர்க்க நலனுடன் இணைத்துப் பார்ப்பதை விட பிராந்திய எண்ணெய் சந்தைப் போட்டியின் தளத்திலிருந்து அணுகுவதே பொருத்தமானது.

ஏகாதிபத்தியங்களின் சந்தைப் போட்டியினுள் சிக்கியிருக்கும் எண்ணெய் வள அரபுலகம், தமக்கிடையே இருக்கும் முரண்பாடுகளைக் கையாள்வதற்கு முதலீட்டாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது என்பதே யதார்த்தபூர்வமானதாகும். அகதி முகாம்களில் பல தலைமுறைகளை உருவாக்கிய பலஸ்தீன போராட்டம், மக்கள் ஆதரவிருந்தும் அதன் இலக்கை அடைய இயலாமல் தடுமாறுவது வெகுஜன அரசியல் முன்னெடுப்பற்ற போக்கினால் உருவாதெனக் கொள்ளலாமா?

தமிழீழ தேசிய விடுதலைப் போரை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ் சமூகம் தனது வரலாற்று ரீதியிலான அரசியல், சமூக, பொருளாதார ஆளுமைக்குள் நாடாளுமன்ற ஜனநாயக போராட்ட வழிமுறைச் சக்திகளையும் வர்க்க ரீதியிலான இடதுசாரிப் போராட்ட இயக்கங்களையும் பன்முகத் தன்மை கொண்ட ஆன்மிகத்தை நோக்கிய முற்போக்கும் சிந்தனையாளர் (மு.தளையசிங்கம் போன்றோர்) கூட்டத்தையும் உள்வாங்கிக் கொண்டே முன்னோக்கி நகர்ந்துள்ளது.

இப்போராட்டத்தினூடு உலக அரசியல் கருத்துத் தளத்தில் புதிய செய்தியொன்று சொல்லப்படும் நாள் வெகு தொலைவில்லை. அச்செய்திகள் போராட்ட முன்னெடுப்பாளர்களின் அரசியல், இராணுவ வலுவோடு, மக்கள் படையணியின் பலமும் இணைந்ததொரு முழு வீச்சின் பரம்பல் போராட்ட வரலாறுகளின் புதுப் பரிமாணத்தை வெளிப்படுத்ததான் போகிறது.

இந்த எதிர்வு கூறலை மிகைப்படுத்தப்பட்ட ஒரு படி நிலையாகக் கொள்பவர்கள் ஏகாதிபத்தியங்களின் உச்ச கட்ட வளர்ச்சி நிலையில் தேசிய இன முரண்பாட்டிற்கான தீர்வு எப்படி அமையுமென்கிற புதிய கோட்பாட்டினை தரிசிக்கத்தான் போகிறார்கள்.

ஏகாதிபத்தியங்களின் படி நிலை வளர்ச்சியின் உச்சம் பற்றி லெனின் வரையறுத்த தத்துவார்த்த ரீதியான எதிர்வு கூறலை இன்று நாம் உணர்கின்றோம். அதேபோன்று தேசிய இன முரண்பாட்டுத் தத்துவத்தை நடைமுறை சிக்கல்களின் பல கூறுகளை ஏகாதிபத்தியங்களின் அழுத்தங்களோடு சேர்த்து எதிர்கொள்கிறோம். அவை உலகிற்கு புதிதாகவே இருக்கும்.

தமிழீழ போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள பாலஸ்தீனத்திற்கு பல விடயங்கள் உண்டு. அவர்களின் தவறுகளிலிருந்து கற்று தமக்கேயுரித்தான அரசியல் நகர்வுகளை தமிழ்த் தேசம் நுண்ணிய முறையில் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்திய நலனுக்குள் கரைந்து போகாமல் போராட்டத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலை முன்னகர்த்தியதும் இதே போராட்ட சக்திகள்தான். சர்வதேசமென்று கூறப்படும் மேற்குலகின் தடை அச்சுறுத்ததலையும் மீறி தடை செய்தவர்களை கண்காணிப்புக் குழுவிலிருந்து அகற்றி உறுதியுடன் செயற்பட்டவர்களும் இதே சக்திதான்.

பலஸ்தீனத்திற்கு இருபெரும் எதிரிகள். ஈழப் போராட்ட வரலாற்றில் பிராந்திய நலனில் அக்கறை கொண்ட யாவரும் எதிரியாகத்தான் காணப்பட்டுள்ளனர்.

தடை செய்தவர்களை ஒதுக்கியதும் அதே கூட்டணியில் இடம்பெற்ற சிலர் தடை செய்தது தவறாகப் போய் விட்டதென கவலை கொள்ள வைத்ததும் இதே சக்திதான். யாரோடு பேசினாலும் இலக்கிலிருந்து தடுமாறாத சமரசம் கொள்ளாத இலட்சிய வேட்கையைப் புரிந்து கொள்ள வெளிநாட்டு வரலாறுகளை மட்டுமல்ல, எமது போராட்ட வரலாற்றினையும் கற்க வேண்டும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (24.09.06)
நன்றி: தமிழ்நாதம்.

Labels: , ,

//இப்போராட்டத்தினூடு உலக அரசியல் கருத்துத் தளத்தில் புதிய செய்தியொன்று சொல்லப்படும் நாள் வெகு தொலைவில்லை. அச்செய்திகள் போராட்ட முன்னெடுப்பாளர்களின் அரசியல், இராணுவ வலுவோடு, மக்கள் படையணியின் பலமும் இணைந்ததொரு முழு வீச்சின் பரம்பல் போராட்ட வரலாறுகளின் புதுப் பரிமாணத்தை வெளிப்படுத்ததான் போகிறது.

இந்த எதிர்வு கூறலை மிகைப்படுத்தப்பட்ட ஒரு படி நிலையாகக் கொள்பவர்கள் ஏகாதிபத்தியங்களின் உச்ச கட்ட வளர்ச்சி நிலையில் தேசிய இன முரண்பாட்டிற்கான தீர்வு எப்படி அமையுமென்கிற புதிய கோட்பாட்டினை தரிசிக்கத்தான் போகிறார்கள்.
//

அப்படி நடந்தால் பெரிய சந்தோசம் தான்.
ஆனால் நிலைமை என்னவோ தலைகீழாகத்தான் தெரிகிறது.

அனானி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

Post a Comment