Monday, August 28, 2006

ஊடகத் தணிக்கை

கோகர்ணன்
மறுபக்கம்


கெபிதிகொல்லாவ கிளேமோர் தாக்குதலை யாருமே நியாயப்படுத்த முயலவில்லை. இவ்வாறான அலுவல்களில் எது சரி, எது பிழை என்ற தெளிவு அதற்குப் பொறுப்பானவர்கட்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த இயலாது என்கிற தெளிவாவது இருந்தது. எனவே தான் அதற்கு யாருமே உரிமை கோரவில்லை அண்மை வரையிற் கூட. இராணுவமோ அரசாங்கமோ தம்மீது குற்றம் விழாமல் விளக்கங்களைத் தருவதிலே கவனங் காட்டின. திருகோணமலை வாலிபர் படுகொலையில் அது பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பு என விளக்கும் முயற்சி தோல்வியடைந்தமை இன்னொரு விடயம். அல்லைப்பிட்டியில் ஒரு குடும்பம் கொல்லப்பட்ட போதுஞ் சரி, யாழ்ப்பாணத்தில் பல்வேறு படுகொலைகளில் போதுஞ் சரி, மன்னார் மாவட்டத்தில் மாதா கோவிலில் தஞ்சம் புகுந்தோரின் மீது குண்டு வீசப்பட்ட போதுஞ் சரி, நாங்கள் இல்லை என்பதுதான் பொதுவான பதிலாக இருந்தது. அண்மைய மூதூர் என்.ஜி.ஓ. ஊழியர்களின் படுகொலையைக் கூட இவ்வாறே விளக்க முயன்றனர். இவை பற்றியெல்லாம் விசாரணைகள் விடிய விடிய நாட்கணக்காக, மாதக்கணக்காக, வருடக் கணக்காக நடக்கும் என்று நாம் அறிவோம். அதைவிட, விசாரணைகளின் முடிவையுங் கூட நாம் அறிவோம்.
செஞ்சோலை மாணவியர் படுகொலைகளைப் பொறுத்தவரை, விமானப் படையின் மெய்யாகவே குறி தவறாத குண்டு வீச்சின் இன்னொரு இலக்கு அது. ஆயுதந் தரியாதவர்களைக் கொல்வது யுத்த விதிகளை மீறுவதாகும். ஆனால் இப்போது நடப்பது யுத்தமல்ல என்பதால் அது யுத்த விதிகளின் மீறலல்ல என்று நாம் கொள்வோமாக. கொல்லப்பட்டோர் இராணுவ பயிற்சி பெறவே அங்கு கூடினர் என்பதுதான் அரசாங்கத் தரப்பினதும் இராணுவத்தினதும் கதை. அதை நம்ப விரும்புகிறவர்கள் அதை நம்புவார்கள். நம்பிக்கை என்பது கடைப்பிடிக்கும் மக்களுக்கு வேண்டியதை விடவும் மத வெறிக்கும் இன வெறிக்கும் மிக அவசியமானது. வெறித்தனமான நம்பிக்கையைத் தகர்ப்பது கடினம். அதைத் தகர்க்க முயலுவதை விட கருங்கற் பாறையில் தலையை முட்டிக் கொள்வது பயனுள்ளது. அரசாங்கத்தின் பிரதான பேச்சாளராக உள்ள கெஹலிய ரம்புக்வல்ல எப்போதாவது வாய் தவறி ஏதாவது உண்மையைச் சொல்லுவாரா என்று கொஞ்சக் காலமாக ஆவலுடன் காத்திருந்து ஏமாற்றமடைந்தேன் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். இப்போது உண்மை பற்றிய அவருடைய பிரச்சினை யூனிசெஃப் நிறுவனத்துடனும் போர் நிறுத்த கண்காணிப்பாளர்களுடனுமானது போலத் தெரிகிறது. நேரில் பார்த்தவர்கட்டு எந்த விதமான போர்த் தொடர்பும் தெரியாத செஞ்சோலையில், விமானங்கள் சுற்றுப் பார்த்து எதையோ கண்டு பிடித்ததாகத் தொலைக் காட்சியிற் படங்காட்டினார்கள். மாவிலாறு மதகை இராணுவம் திறந்து விட்டதாகச் சொல்லி `ஐலன்ட்' ஏட்டில் வெளியாகி தொலைக்காட்சியிலும் காட்டப்பட்ட படம் அதை விட நம்பகமாக இருந்ததென்பேன். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள். நமது பொய்யர்கட்கு அதற்கான பயிற்சி அறவே போதாது போலத் தெரிகிறது. அல்லது போனால், யாருமே எதையும் நம்பப் போவதில்லையென்பதால் எதைச் சொன்னாலும், ஒன்றுதான் என்று அவர்கள்நினைப்பதால் இப்படி நடக்கக் கூடும். எது எப்படியிருந்தாலும், அரசாங்கத்திற்கு உண்மை பற்றிய கவலை அதிகம். எனவேதான் அண்மையில் சில தனியார் வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்களின் நிர்வாகத்தினரிடம் சில விடயங்கள் வற்புறுத்தப்பட்டு, அவர்கள் செய்திகளை அடக்கி வாசிக்கின்றனர் போலத் தெரிகிறது. எனினும் அது போதுமானதல்ல என்பதாற், சனாதிபதி தணிக்கை விதிகளைப் புகுத்துவதற்கு இப்போதே அச்சாரம் போட்டுவிட்டார். உதயன், சுடரொளி பத்திரிகைகள் மீதான அரசாங்கக் கோபத்திற்கான காரணம் ஒரு புறமிருக்க, அவ்வேடுகள் மீதான பலமுனைத் தாக்குதல்கள், அவற்றுக்கெதிரான எச்சரிக்கைகள் மட்டுமில்லை. உண்மையில், அவை அவற்றிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் அல்ல; அவை மற்ற ஊடகங்கட்கான எச்சரிக்கை. இறுதி நோக்கம் என்னவெனின், மக்களுக்கு எந்தப் பொய்களை எப்படிச் சொல்வது என்பன பற்றிய முடிவுகள் அனைத்துமே அரசாங்கத்தின் உள்வட்டத்திடமே இருக்கும். ஏற்கனவே பெரும்பாலான அரசாங்க ஆதரவாளர்கட்குக் கூட ரூபவாஹினியினதும் இலங்கை வானொலியினதும் ஏரிக்கரை ஏடுகளதும் கதைகளைக் கேட்கவே அலுப்பாக உள்ளது. இனி அந்த இன்பம் எல்லா ஊடகங்கட்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். கணினி வசதியுள்ளோர் மட்டும் மின் ஊடகங்களை நாடலாம்.

ஊடகங்களின் மீதான அரச கட்டுப்பாடு, சனநாயகம் நெருக்கடிக்குள்ளாகும் போது அதிகமாகிறது. ஒரு அரசு சனநாயகத் தோற்றத்தைக் காட்டிக்கொண்டு ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது கடினம். எனவே, நாட்டில் பாதுகாப்புக்கு மிரட்டல் என்பது அத்தகைய கட்டுப்பாடுகட்கு அத்தியாவசியமான ஒரு முன் நிபந்தனையாகிறது. ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கும் அதிகார வர்க்கத்திற்கும் முரண்பாடு ஏற்படும்போது, வேறு முதலாளிமாரின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் அரசாங்கத்திற்கு எதிராகச் சனநாயகம் பற்றி துணிந்து பேசுகின்றன. எனினும், தமது வர்க்க நலன்கள் என்று வரும்போது அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. இதை நாம் இலங்கையின் ஊடகங்களின் நடத்தையில் தெளிவாகவே காணலாம். தமிழ் மக்களின் ஆதரவை நாடி நிற்கிற தமிழ் ஊடகங்கள் கிடுக்கிப்பிடிக்குள் அகப்பட்டுள்ளன. சில ஏடுகளின் வணிக நோக்குக்கும் வர்க்க நலன்கட்குமிடையிலான முரண்பாடுகள், அவை செய்திகளைச் கையாளத் திணறுகிற விதத்திலிருந்து தெரியும். எவ்வாறாயினும், தமிழ் ஏடுகளில் நிலை கொஞ்சம் அந்தரமானது தான். அதேவேளை, அவை தமிழ் மக்களுக்கு அவர்களது பிரச்சினைகள் தொடர்பான முழுமையான ஒரு பார்வையை அதாவது பிரச்சினையின் பல்வேறு கோணங்களைக் காட்டத் தவறிவிடுகின்றன. சிங்கள, ஆங்கில ஏடுகளில் நிதானமான சிலவும், நெருக்கடியான சூழ் நிலைகளில் பேரினவாதத்தை எதிர்த்து நிற்கத் திராணியில்லாது போவதை மீண்டும் மீண்டுங் காணுகிறோம்.

ஊடகங்கள் எதைச் சொல்லுகின்றன என்பதை விட எதைச் சொல்லாமல் தவிக்கின்றன என்பது முக்கியமானது. தமிழ் மக்களுக்குப் படையினரும் அரச நிருவாகமும் இவ்வளவு காலமாக இழைத்து வந்த அநீதிகள் பற்றிய மேலோட்டமான பார்வை கூடச் சிங்கள - ஆங்கில ஊடகங்களில் இல்லை எனலாம். வசதி கருதி யூ.என்.பி. ஆட்சியில் நடந்த 1983 ஜூலை பயங்கரத்தைப் பற்றிப் பொதுசன முன்னணி பேசுவதும் ஷ்ரீ.ல.சு.க. ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்ட பாரிய கொடுமைகளை யூ.என்.பி. தொட்டுக் காட்டுவதும் பிரச்சினையின் அடி ஆழத்தைத் தொடுகிற நோக்கிலல்ல. தமது பேரினவாத வாக்கு வங்கிக்கு ஊறில்லாமல், தமிழ் மக்களைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்கிற காரியங்களை மேற்கொள்வதாக அவை பாசாங்கு செய்கின்றன. தமிழ் மக்களுக்கு தாம் மனமுவந்து வழங்குவதற்கு மாறாக எதையும் தமிழ் மக்கள் போராடி வென்றதாக இருக்கக்கூடாது என்ற கண்ணோட்டமே பேரினவாதிகளிடம் உள்ளது. அதுவே போர் உட்பட அவர்களது சகல நடவடிக்கைகளையும் தீர்மானித்து வருகிறது.

தமிழ் மக்களின் நியாயத்தைச் சொல்லக்கூடிய சிங்கள அரசியல் தலைவர்கள் சொல்வன ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை. விக்கிரமபாகு கருணாரத்தினவோ வாசுதேவ நாணயக்காரவோ தொலைக்காட்சி விவாதங்கட்கு அழைக்கப்படுவது குறிப்பிட்ட ஊடகங்களது அரசியல் எதிரிகளைக் சாடுவதற்கு வசதியாகவும் தமக்கு ஒரு நடுநிலைத் தோற்றங் காட்டவுமே ஒழிய, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் பற்றிச் சிங்கள மக்களுக்குக் கல்வி புகட்டுவதற்காக அல்ல.

அண்மையில், மூதூரிலிருந்து முஸ்லிம் மக்கள் பாதுகாப்புக் கருதி வெளியேறியதன் பின்பு கொழும்பில் ஆமர் வீதியில் நடந்த கடையடைப்பில் ஒத்துழையாமைக்காகத் தமிழ் கடைகள் சில தாக்கப்பட்டன. அதை வன்மையாகக் கண்டித்து முஸ்லிம் மக்கள் கூடிய பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டுமென்று மூத்த தொழிற்சங்கவாதியும் ஷ்ரீ.ல.சு.க. பிரமுகருமான அலவி மௌலானா பேசியிருந்தார். அதற்கு ஊடகங்களில் அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. அதேவேளை, தமிழ் - முஸ்லிம் பகைமையை ஊக்குவிக்கிற விதமாகச் சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளது `எச்சரிக்கைகள்' கணிசமான முக்கியத்துவம் பெற்றன.

இன்னமும் தேசிய இனப்பிரச்சினையுடன் விளையாடுவதில் பேரினவாத அரசியலினளவுக்குப் பேரினவாத ஊடகங்களும் தீவிரமாகவே உள்ளன. தமிழ் மக்களுக்கு அரச தரப்பு நியாயங்களைச் சொல்லக்கூடிய ஊடகங்கள் உள்ளனவே ஒழிய தேசிய இனங்களிடையே சமத்துவம் பற்றிய அக்கறையுள்ள ஊடகங்கள் இல்லை. இந்த நிலையை நோக்கும் போது சோவியத் யூனியனில் புரிந்துணர்வை பற்றிய வேடிக்கை அக்கறையுள்ள ஊடகங்கள் இல்லை. இந்த நிலையை நோக்கும்போது சோவியத் யூனியனில் சொல்லப்பட்ட ஒரு துணுக்கு நிலைக்கு வருகிறது. சோவியத் யூனியனின் பிரதான நாளேடுகளில் இருந்தவை ப்ராவ்டா (உண்மை), இஸ்வெஸ்தியா (செய்தி) என்பனவாகும். "ப்ராவ்டாவில் இஸ்வெஸ்தியா இல்லை. இஸ்வெஸ்தியாவில் ப்ராவ்டா "இல்லை" என்று சொல்வார்கள். நமது ஊடகங்கள் போகிற போக்கைக் கவனித்தால் புதிய தணிக்கை விதிகளும் நடைமுறைப்படுத்தப்படுகிற நிலையில், நமது ஊடகங்களில் ப்ராவ்டாவும் இல்லை இஸ்வெஸ்தியாவும் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கும்.

நாட்டின் எதிர்காலம் பற்றிய எந்தவிதமான அக்கறையோ எதிர்பார்ப்போ இல்லாத தலைமைகள் அரசியல் முதலாக வணிகம், பாதுகாப்பு, ஊடகத்துறை போன்ற அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்ற வரை மக்களின் அவலத்திற்கு பிரசாரப் பெறுமதிக்கு மேலாக எதுவும் நடக்கப்போவதில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி: Sunday, August 27, 2006

Labels:

Saturday, August 12, 2006

உலகத்தை முட்டாளாக்கிய இஸ்ரேல் பயங்கரவாதம்.

மறுபக்கம்: கோகர்ணன்

ஐ.நா. கண்காணிப்பாளர்கள் இஸ்ரேலியத்தாக்குதலுக்கு இரையாகியிருக்கிறார்கள். கோஃபி அனான் அது பற்றி அதிர்ச்சி தெரிவித்திருக்கிறாரே ஒழிய இஸ்ரேலைக் கண்டிக்கவும் இல்லை இஸ்ரேல் மீதான கண்டனத் தீர்மானம் எதையும் நிறைவேற்றுவிக்கும் முயற்சியும் எடுக்கவில்லை. உலக நாடுகள் தாக்குதலை நிறுத்தும்படி இன்னமும் சொல்லாததால் தாக்குதலைத் தொடர்ந்தும் நடத்தப் போவதாக இஸ்ரேலிய அரசாங்கப் பேச்சாளர்கள் உலக நாடுகளின் தலைவர்களையே பகிரங்கமாக முட்டாள்களாக்கியிருக்கிறார்கள்.

இஸ்ரேலியத் தாக்குதலால் இறந்தோர் தொகை ஆயிரத்தை நெருங்கலாம். இப்படி நடக்குமென்று தெரியாமல் இஸ்ரேலிய அடாவடித்தனத்துக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய படையினர் இருவரும் ஹிஸ்புல்லாவால் விடுவிக்கப்படுகிற வரை இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டுமென்று கேட்கப் போவதில்லை என்று சொன்னதற்கும் மேலாக இஸ்ரேலுக்கு என்னவிதமான அங்கீகாரம் தேவை? பிற மேலை நாடுகளும் சிப்பாய்கள் ஹிஸ்புல்லா இயக்கத்தால் விடுவிக்கப்படுவதை வற்புறுத்தும் அளவுக்கு இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டிக்கவில்லை.

லெபனானில் இஸ்ரேலியக் குறுக்கீடு புதியதல்ல. 1982 ஆம் ஆண்டு பெய்ரூத்திற்கு அருகாக இருந்த இரண்டு பலஸ்தீன அகதி முகாம்களான ஸப்ரா, ஷட்டிலா இரண்டிலும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வெறியாட்டம் உலக நாடுகள் பலவற்றின் கடுங்கண்டனத்தைச் சம்பாதித்தது. எனினும் இருபது வருடங்களுக்கு மேலாக இஸ்ரேல் தென் லெபனானில் தனது படைகளை நிலை நிறுத்தியிருந்தது. நீண்ட போராட்டத்தின் மூலமே இஸ்ரேலியப்படைகளை லெபனானிலிருந்து துரத்த முடிந்தது. பெய்ரூத் அகதி முகாங்களில் நடந்த படுகொலைகளை முன்னின்று வழி நடத்திய இராணுவத் தளபதியான அரியேல் ஷரோன் தனது அரசியல் அஞ்ஞாத வாசத்திலிருந்து மீண்டு இஸ்ரேலின் பிரதமராகிச் சென்ற ஆண்டு வரை பலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் அழிப்புச் செயல்களையும் வழி நடத்தினார். இப்போது அவர் `கோமா' மயக்க நிலையிலிருக்கிறார். ஆனாலும் இஸ்ரேலைப் பொறுத்த வரை தீவிர, மிதவாத என்கிற அரசியல் முத்திரைகட்கிடையில் அதிக வேறுபாடில்லை. சமாதானம் பற்றிப் பேசிக் கொண்டே பலஸ்தீனத்தையும் அதன் மக்களையும் அழிப்பவர்கட்கும் போர் பற்றி பேசிக் கொண்டு அதே வேலையைச் செய்கிறவர்கட்குமிடையே பேச்சில் இருந்த வேறுபாடு கூட இப்போது குறைந்துவிட்டது.

ஹமாஸ் ஒரு இஸ்ரேலியச் சிப்பாயைச் சிறைப்பிடித்ததும் ஹிஸ்புல்லா இருவரைச் சிறைப்பிடித்ததுமே இன்றைய பிரச்சினையின் தொடக்கப் புள்ளிகள் என்ற விதமாக நமது ஊடகங்கள் உலகத் தகவல் நிறுவனங்களின் பொய்களைத் திருப்பிச் சொல்லுகின்றன. பலஸ்தீன நிருவாகத்தின் ஹமாஸ் அமைச்சரவை உறுப்பினர்களில் அரைவாசிப் பேரை இஸ்ரேல் சிறையில் அடைத்து வைத்திருப்பது பற்றி யாரும் எதுவும் பேசுவதில்லை. இஸ்ரேலியப் படையினர் கடத்தப்பட முன்பு நடந்த இது போன்ற இஸ்ரேலிய அரசின் குற்றச் செயல்களைக் கண்டிக்க மறுக்கிறவர்கள் தான் ஹமாஸையும் ஹிஸ்புல்லாவையும் கண்டிக்கிறார்கள்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பேரில் எவர் மீதும் பயங்கரவாதி என்று முத்திரை குத்திய பின்பு அவருக்கெதிரான எந்தக் கொடுமையையும் நியாயப்படுத்தலாம். அதேவேளை, தற்காப்புக்காகவோ தாங்க இயலாமையாலோ எடுக்கப்படுகிற ஒரு எதிர்ப்பு நடவடிக்கை கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகிறது. கொடுமைகளை ஒப்பிடும் போது அவற்றின் அளவும் அவை நிகழ்ந்த சூழலும் அரச பயங்கரவாதத்திற்குச் சாதகமாகவே கணிப்பிடப்படுகிறது. விலக்காக வேண்டுமானால், அமெரிக்கா குழிபறிக்க முனைப்பாக உள்ள கியூபா, வெனசுவேலா போன்ற அரசாங்கங்களுக்கெதிரான பயங்கரவாதம் எதுவும் கண்டிக்கப்படாது.

முப்பது, நாற்பது ஆண்டுகட்கு முன்பு கொடுமைகளுக்கெதிராக மக்கள் போராடிய போதும் விடுதலைக்காகப் போராடிய போதும் சமூக நீதிக்காகப் போராடிய போதும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் வேறு யாராவது அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பார்கள். 60கள் முழுவதும் பின்பும் வியட்நாம் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அமெரிக்கா உட்பட உலக நாடுகளில் எல்லாம் போராட்டக் குரல்கள் ஒலித்தன. 1961 இல் கொங்கோவில் லுமும்பா படுகொலை செய்யப்பட்டு அங்கு ஏகாதிபத்தியச் சார்பான ஒரு ஆட்சி உருவான சூழலில் அணி சேரா நாடுகளிலும் மூன்றாமுலகம் முழுவதும் மேற்கு ஐரோப்பாவிலுங் கூடக் கண்டனக் குரல்கள் எழுந்தன. மூன்றாமுலக நாடுகளின் ஆட்சியாளர்கள் பலரும் மக்களின் இவ்வாறான நியாய உணர்வுக்குத் தலை வணங்க வேண்டியிருந்தது. இவ்வாறான வெகுசன ஆதரவே 1970களில் பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு உலகளாவிய அங்கீகாரத்தையும் ஐ.நா. சபையில் அதற்கு ஒரு இடத்தையும் பெற்றுக் கொடுத்தது.

சோஷலிஸத்தின் சரிவையும் சோவியத் யூனியனின் உடைவையும் உலக இடதுசாரி இயக்கம் 1980 கள் தொட்டுச் சில ஆண்டுகள் முன்பு வரை சந்தித்த பின்னடைவையும் பற்றிக் குதூகலித்தவர்கள் வெறுமனே முதலாளிய வாதிகளும் ஏகாதிபத்திய எசமானர்களும் மட்டுமல்ல, தாம் தேசிய வாதிகள் என்றும் தேசியமே முக்கியமானது வர்க்கமும் வர்க்கப் போராட்டமும் முக்கியமானவையல்ல என்றும் வாதித்துத் தேசிய விடுதலையைச் சமூக விடுதலையினின்று பிரித்துப் பேசியவர்களும் மதவாத அரசியலின் மூலம் கம்யூனிஸ எதிர்ப்பு என்ற பேரில் அமெரிக்காவின் கைப்பாவைகளாக இயங்கிய அல் - ஹைடா முதலான இஸ்லாமிய தீவிர வாத அமைப்புகளது ஆதரவாளர்களும் அனுதாபிகளும் கூட கம்யூனிஸம் ஒழிந்தது சோஷலிஸம் ஒழிந்தது என்று மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர்.

இடதுசாரிகளை ஓரங்கட்டுவதில் தேசிய வாதிகட்கும் முஸ்லிம் மத வாதிகட்கும் இருந்த ஆர்வத்தை ஏகாதிபத்திய வாதிகள் விரும்பினர். ஏனெனில், அதன் மூலம், ஏகாதிபத்தியம் என்கிற பொது எதிரிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் இணைவதற்கு மாறாகத் தமக்குள்ளே போரிடும் வாய்ப்பு அதிகமாகும். சவூதி அராபியாவே இஸ்லாமிய அடிப்படைவாதம் எனப்படும் அரசியல் ஆயுதத்தின் பிரதான ஆதரவுத் தளமாக அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டது. தலிபானைப் போன்ற அமைப்புகள், முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்த சோவியத் குடியரசுகளிலும் சீனாவின் வடமேற்கு மாநிலமான சிங்கியாங்கிலும் உருவாக்கப்பட்டன. அவை கட்டுமீறிப் போனது இன்னொரு கதை.

யூகோஸ்லாவியாவைப் பிளவுபடுத்திச் சிதைக்க மதமும் தேசிய வாதமும் பயன்பட்டன. யூகோஸ்லாவியாவைச் சிதைத்த பின்பு அதற்குப் பயன்பட்ட சக்திகளைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா தனது புதிய கூட்டாளிகட்கு உதவி வருகிறது.

இன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவின் போரை உலகின் பெருவாரியான மக்கள் எதிர்க்கின்றனர். பலஸ்தீனப் பிரச்சினையில் உலக மக்களின் அனுதாபம் பலஸ்தீன மக்களுடைய தரப்பிலேயே உள்ளது. கியூபாவையும் வெனசுவேலாவையும் பற்றி மூன்றாமுலக மக்கள் பெருமைப்படுகின்றனர். ஆனால் ஏன் லண்டனிலோ பிற ஐரோப்பியத் தலைநகரங்களிலோ ஈராக்கிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் பலஸ்தீனத்திற்கும் ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடக்கிற அளவுக்குக் கூட இங்கு நடக்கவில்லை? இந்தியாவில் ஜோஜ் புஷ்ஷின் வருகைக்கு எதிரான ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் பம்பாயில் நடந்தது. இங்கே ஏன் பலஸ்தீனம், ஈராக், ஆப்கானிஸ்தான் இன்று லெபனான் ஆகிய பிரச்சினைகள் பற்றி பொதுசன அபிப்பிராயம் அணிதிரட்டப்படவில்லை?

இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் நலிவு ஒரு முக்கியமான காரணம் என்பதில் எனக்குச் சிறு ஐயமுமில்லை. எனினும் முக்கியமான வேறு காரணங்களும் உள்ளன. மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை வெறுமனே மதம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக்கி முஸ்லிம் - கிறிஸ்துவ மோதலாகச் சித்தரிப்பதில் ஏகாதிபத்தியவாதிகளது ஆதரவாளர்கட்கு உள்ள அக்கறைக்குச் சற்றுங் குறையாத அக்கறை இங்குள்ள இஸ்லாமியவாதக் குழுக்கள் சிலவற்றுக்கும் உண்டு. இவ்வாறு அமெரிக்காவுக்கும் அதன் எடுபிடியான இஸ்ரேலுக்கும் எதிரான போராட்டத்தை வேறுமனே முஸ்லிம்கள் தொடர்பான போராட்டமாகக் குறுக்குவதன் மூலம் இக் குழுக்கள் முஸ்லிம் மக்கள் நடுவே தம்மை வளர்த்துக் கொள்ள முயலுகின்றனவே ஒழியப் பலஸ்தீன, லெபனிய, ஈராக்கிய, ஆப்கானிய மக்களுக்கு ஆதரவான சக்திகளை அணிதிரட்டி அதன் மூலம் அரசாங்கத்தை எவ்விதத்திலும் கட்டாயப்படுத்தவோ, இங்குள்ள மக்களின் உணர்வுகளை அமெரிக்காவுக்கு வலிமையாக உணர்த்தவோ முயலவில்லை.

முஸ்லிம்களல்லாதோரும் பெருமளவிற் பங்குபற்றுகிற போராட்டங்கள் அமெரிக்க இஸ்ரேலிய அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர் உட்பட்ட பலரதும் பங்குபற்றலையும் இயலுமாக்கும். அவற்றின் மூலம் முஸ்லிம்களை ஏய்த்துப் பிழைக்கிற போலித் தலைமைகள் அம்பலமாகும் அல்லது தமது அரசியல் ஆயுளை நீடிப்பதற்காக நியாயத்திற்காக குரல் கொடுக்கும் நிலைக்கு அவை தள்ளப்படும்.

நம் முன்னுள்ள தெரிவு ஜோஜ் புஷ்ஷுக்கும் ஒஸாமா பின்லாடனுக்குமிடையிலானதல்ல. அல் - ஹைடாவோ வேறெந்த மதவாத, இனவாத அமைப்போ ஏகாதிபத்திய எதிர்ப்பை மையமாகக் கொண்டு போராடவில்லை. எனவேதான் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் யாவும் அவற்றின் பரந்துபட்ட ஒற்றுமைக்கான பொதுக் காரணிகளைத் தேட வேண்டும். அத் தேடலுக்கான உடனடியான களங்களில் பலஸ்தீன, லெபனான் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் ஒன்று.


நன்றி: தினக்குரல் Sunday, August 06, 2006

Labels:


Get your own calendar

Links