« Home | அமெரிக்க ஏகாதிபத்தியம் » | இலங்கையில் ஊடகங்களும் பிரித்தாளும் தந்திரமும் » | பகிரப்படாத பக்கங்கள். 1. » | அமெரிக்க அரசியலும் சதாமும் » | இந்தியா பிச்சை போடுமா? » | அன்னியசக்திகளை ஈழத்தமிழர் நம்பலாமா? » | லெப்.கேணல் அக்பர் » | மலையக மக்களின் போராட்டம் » | சனநாயகமும் பயங்கரவாதமும் » | சிங்கள மனப்பான்மையும் சிறிலங்கா நிலைமையும் »

கடலில் மேலாண்மை விடுதலைப் போரைத் தீர்மானிக்கும்

-க.வே.பாலகுமாரன்-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தமிழர் தாயகத்தின் தென்பகுதி சிறிலங்காவுடன் நீண்ட தரை எல்லையைக் கொண்டிருப்பினும், இலங்கைத் தீவைச் சூழவுள்ள கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கரையோரத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது. இலங்கைத் தீவில் 1770 கிலோ மீற்றர் நீளமான (தீவுகள் நீங்கலாக) கரையோரத்தில் மூன்றில் இரண்டு பங்கு தமிழர் தாயகப் பகுதிக்குள் உட்பட்ட தாகவுள்ளது.

அத்தோடு, தமிழர் தாயகத்தின் பெரும்வளம், கடற்பிராந்தியத்திலேயே உள்ளது. இன்றைய நிலையில் பெட்ரோலியப் படிமங்களில் இருந்து பெரும் மீன் வளம் வரையில் - அதாவது கனி வளத்திலிருந்து உயிரியல் வளம் வரையிலான பெரும்வளம் கடற்பரப்பிலேயே கொட்டிக்கிடக்கின்றது.

இவற்றை நீண்ட காலமாக அனுபவித்து வரும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் இன்று அவற்றைத் தமிழ் மக்களின் அனுமதியோ, ஒத்துழைப்போ இன்றி சில நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்கவும், விற்பனை செய்யவும் முற்பட்டுள்ளனர். சுருக்கமாகக் கூறுவதானால், எமது இயற்கை வளத்தை விற்றுப் பெறும் பணத்தில் எமது இனத்தையே அழித்துவிடக்கூடிய யுத்த நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் முனைப்புக் காட்டுகின்றது.

இது ஒருபுறம் இருக்க, தமிழர் தாயகத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் கடல் வகிக்கப்போகும் பங்கு மிகவும் காத்திரமானதாகவே நிச்சயம் இருக்கும். குறிப்பிட்டுக் கூறுவதானால், கடலில் இடம்பெறக்கூடிய பெரும் சமர்கள் போராட்டத்தை நிர்ணயிக்கும் ஒன்றாக இருக்கும் எனக் கூறின் மிகையாகமாட்டாது.

உலக வரலாற்றில் நீண்ட காலமாகவே கடலை ஆள்பவன் உலகை ஆள்வான் என்ற கேட்பாடு இருந்து வருகின்றது. இது வரலாற்று ரீதியில் நிரூபிக்கப்பட்டதொன்று. கடலானது ஒரு தேசத்தின் பாதுகாப்பிற்கானதாகவும் உள்ளது. அதேசமயம், பலவீனமானதாகவும் உள்ளது.

உலக போரியல் வரலாற்றில் பெரும் கடற்படையைக் கொண்டுள்ள நாடுகளே வல்லரசுகளாகக் கோலோச்சியுள்ளன. இது சோழப் பேரரசில் இருந்து பிரிட்டிஷ், அமெரிக்க சாம்ராஜ்யங்கள் வரையில் பொருத்தப்பாடானதே.

சில சாம்ராச்சியங்களின் எழுச்சியும், சில சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியும்கூட கடற் போரினால் தீர்மானிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாகப் பிரிட்டிஷ் கடற்படைக்கும் - ஸ்பானியக் கடற்படைக்கும் இடையில் நடந்த ~அமெடா கடற்போர் தோல்வியினால் ஸ்பானிய சாம்ராஜ்யம் சரியத் தொடங்கப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விரிவாக்கம் பெறத் தொடங்கியது. சூரியன் மறையாத சாம்ராஜ்யம் ஒன்றை பிரிட்டனால் ஸ்தாபிக்க அதன் வலுமிக்க கடற்படை காரண மாகியது.

இன்றுகூட ஈராக் - அமெரிக்கப் போரில் அமெரிக்க கடற்படை வகிக்கும் பாத்திரத்தைச் சுட்டிக்காட்ட முடியும். தரையில் ஒரு தளப்பிரதேசம் இன்றியே செயற்படத்தக்க அளவில் அமெரிக்கக் கடற்படை செயற்பட முடியும் என்பதை வளைகுடாப் போர் அதாவது, ஈராக் கிற்கு எதிரான போரில் அமெரிக்கக் கடற்படை நிரூபித்துள்ளது.

நெப்போலியனும், ஹிட்லரும் பெரும் வெற்றிகளைத் தமது இராணுவம் மூலம் ஈட்டியிருப்பினும் அவர்களினால் கடற்பரப்பில் குறிப்பாக, அத்திலாந்திக்கின் வடகிழக்குக் கடற்பிராந்தியத்திலும், ஆங்கிலக் கால்வாயிலும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியாமல் போனதே அவர்களின் தோல்விக்கு அடிப்படையாக அமைந்த முக்கியமான காரணிகள் எனக் கூறின் மிகையாகாது. அதாவது, நெப்போலியனும், ஹிட்லரும் கடற்போரில் சந்தித்த தோல்விகள் அவர்களின் ஒட்டுமொத்தத் தோல்விக்கு அடிப்படையாகின. சிறிது காலமாயினும் ஆங்கிலக் கால்வாயும் வடகிழக்கு அத்திலாந்திக்கும் அவர்கள் வசம் இருந்திருப்பின் இன்றைய உலக வரலாறே மாறியிருக்கும்.

இதேவேளை, தமிழர் தாயகத்திற்கான விடுதலைப் போரில் சிறிலங்காக் கடற்படைக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் சமர்கள், இடம்பெறப்போகும் சமர்கள் விடுதலைப் போரின் பெரும் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பவையாக இருக்கும் எனத் துணிந்து கூறமுடியும். விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை குறிப்பிட்டதுபோல் 'ஈழப் போரின் இறுதிச் சமர் கடற்சமராகவே இருக்கும்" எனக் கூறப்பட்டமைகூட மிகையானதொன்றாக இருக்கமாட்டாது.

**

மேற்கூறப்பட்ட விடயங்கள் சிறிலங்கா அரச தரப்பாலும் - விடுதலைப் புலிகளினாலும் நன்கே விளங்கப்பட்டதொன்றாகவே உள்ளது. இதன் அடிப்படையில், சிறிலங்கா கடற்படையும், விடுதலைப் புலிகளும் தமது பலத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

அரசு என்ற ரீதியில் சிறிலங்கா அரசாங்கம் ~சுதந்திரத்தோடு தனது கடற்படையையும் உருவாக்கி இருந்தது. ஆரம்பத்தில் இதன் முக்கிய பணி இந்தியாவிற்கும் - இலங்கைக்கும் இடையிலான கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் செயற்பாடு கொண்டதாகவே இருந்தது. அதன் பின்னர் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் அது படிப்படியாக வளர்ச்சி கண்டது.

இதேவேளை, கடற்புலிகளின் உருவாக்கமானது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் - குறிப்பாக, விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஆகாயக் கடல்வெளிச் (ஆ.க.வெ) சமரின் பின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் பலம் மிக்கதானதொரு படையாகக் கட்டி வளர்க்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் ஒரு முன்னுதாரணமான படையணியாக அது உள்ளதெனில் மிகையாகாது. இதன் சிறப்புத் தளபதியாக கேணல் சூசை அவர்கள் செயற்பட்டு வருகின்றார்.

சிறிலங்கா கடற்படைக் கட்டமைப்பைப் பொறுத்து, இலங்கைத்தீவின் கடற்பிராந்தியம் ஐந்து வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய வலயங்கள் தமிழர் தாயகக் கரையோரத்தை கொண்டவையாகவுள்ளன. மேல் மற்றும் தென் வலயங்கள் சிறிலங்கா கரையோரங்களை உள்ளடக்கியவையாகவுள்ளன.

இதில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் வலயங்களில் உள்ள கடற்படைத் தளங்களில் காரைநகர் (1955), திருமலை (1957) ஆகிய கடற்படைத் தளங்களைவிட ஏனையவையும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற பின்பு அதிலும் குறிப்பாக, விடுதலைப் போராட்டத்தில் கடற்புலிகளின் பிரவேசத்தின் பின்பு விரிவாக்கம் பெற்றவையாகும்.

இதேசமயம், கடற்புலிகளைப் பொறுத்து அவர்கள் வடகிழக்குப் பகுதியிலும், வட மேற்குப் பகுதியிலுமான கடற்கரைப் பிரதேசத்தில் தமது தளங்களைக் கொண்டுள்ளனர். குறிப்பாக, வடகிழக்கே, நாயாற்றில் இருந்து தாளையடி வரையிலான கடற்கரைப் பிரதேசத்திலும் வடமேற்குப் பகுதியில் மன்னார் மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்திலும் யாழ். மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் கிழக்குக் கரையோரத்திலுமாகத் தமது தளங்களைக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, தமிழர் தாயகத்தைச் சூழவுள்ள கடற்பரப்பானது சகல பகுதிகளிலும் ஒரே வகையான கரையோரத்தையோ கடற்பரப்பையோ கொண்டதல்ல. ஒரு வகையில் பார்க்கப்போனால், பல விரிகுடாக்களையும், கடல் நீரேரிகளையும், முனைகளையும், தீவுகளையும் கொண்டதாக கடற்பகுதி உள்ளது. இதில் குடாக்கடல்களைப் பொறுத்து யாழ். கடல் நீரேரி மட்டுமே ஓரளவு ஆயினும் - அதாவது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான படகுப் போக்குவரத்திற்கு உகந்ததாகும். ஏனைய கடல் நீரேரிகள் எவையும் இராணுவ நோக்கில் பயன்படுத்தப்பட முடியாத சிறுபரப்புக்களாகவே உள்ளன. இதேசமயம், நாச்சிக்குடா, முள்ளிவாய்க்கால் போன்ற விரிகுடாக்கள் கடற்படைகளின் செயற்பாட்டிற்கு ஒருபுறத்தில் சாதகமானi யாகவும், மறுபுறத்தில் பாதகமானவையாகவும் உள்ளன.

அத்தோடு, தமிழர் தாயகத்தைச் சூழவுள்ள கடற்பரப்பும் அதாவது, கரையோரம் மற்றும் கடல்பரப்பு, அவற்றின் சூழல் போன்றவையும் வேறுபடுபவையாகவுள்ளன. சுலபமாக இதனை விபரிப்பதானால், மூன்று வலயங்களாக இவற்றைப் பிரிக்கலாம்.

01. மேற்குக் கரையோரம்

02. வடகரையோரம்

03. கிழக்குக் கரையோரம்.

மேற்குக் கரையோரம் பல தீவுக்கூட்டங்களைக் கொண்டதும், பல குடாக்களைக் கொண்டதாகவும் உள்ளது. பிரதான நிலப்பரப்பிற்கு அண்மையாக அதிக ஆழமற்ற கடற்பரப்பைக் கொண்ட இப்பிரதேசமானது கடல் அடித்தளத்தில் சிறியளவிலான பாறைப் படைகளையும்; மணற்பாங்கான கடலடித்தரையும் கொண்டதாகும்.

இக்கடற்பிரதேசத்தைக் கண்காணிக்கவோ அன்றி இப்பகுதியில் போரிடுவதற்கோ ஆழம் குறைந்த கடற்பரப்பில் பயணிக்கத்தக்கதான கடற்கலங்கள் அதிகளவில் தேவைப்படுவதாக இருக்கும்;. இதேசமயம், குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால், அதாவது, தீவுப்பகுதிகளின் மேற்குப் புறங்களில் ஆழ்கடல் பரப்பு காணப்படுவதால் பெரியளவிலான போர்க் கலங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஆனால், அப்பிராந்தியத்தில் கரையோரங்களில் இருந்து சுமார் 10-20 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் இந்தியக் கடற்பரப்பு உள்ளதினால், சிறிலங்கா கடற்படையைப் பொறுத்து ஆழ்கடல் ரோந்து என்பது அப்பகுதியில் இடம்பெறுவது அரிதே ஆகும்.

இதேசமயம், இப்பகுதியில் உள்ள தீவுகளுக்கு இடையிலான கடற்பரப்பும், (நெடுந்தீவு போன்ற தொலைதூரத்தீவுகள் தவிர) யாழ். கடல் நீரேரி போன்ற குடாக்கடலும் மிகவும் ஆழம் குறைந்தவையாக உள்ளன. பெரும்பாலும் மணற்திட்டுக்களையும், இடையிடையே பாறைப் படைகளையும் கொண்டவையாக இவை இருப்பதன் காரணமாக இவை தனித்துவமான தன்மை கொண்டவையாக - பெரிய கடற்கலங்கள் பயணிக்க முடியாதவையாகவும் உள்ளன.

அடுத்ததாக, மேற்குக் கரையோரத்தில் மன்னாருக்கும் கற்பிட்டிக்கும் இடைப்பட்டதான கடற்பரப்பும் குறிப்பிடத்தக்கதானதொரு முக்கியத்துவத்தைப் பெறுவதொன்றாகவே இருக்கும். ஒரு விரிகுடா போன்ற தன்மையைக் கொண்ட இக்கடற்பரப்பின் அடித்தளம் மணற்பாங்கு கொண்டதாகவும் அதேநேரத்தில் தமிழீழக் கடற்பரப்பில் ஒரு தனித்துவமான பகுதி போன்றதாகவும் உள்ளது.

அதாவது, தலைமன்னாருக்கும் இந்திய தனுஷ்கோடிக்கும் இடையில் மணற்பாங்கான திட்டுக்கள் தொடராக உள்ளமையால் மேற்குக் கரையோரத்தின் வடபகுதி ஊடான போக்குவரத்திற்கு எவ்வேளையிலும் ஏற்றதான தன்மை இருப்பதாக இல்லை. அத்தோடு, இக்கடற்பரப்பானது அரபிக் கடலுடன் தொடர்பட்டதான தனித்துவமான தொன்றாகவே உள்ளது. ஆயினும் இதன் எல்லைகளும் இந்தியக் கடற்பரப்புடன் தொடர்புபட்டதாக இருப்பினும் கொழும்பிற்கு மேற்காகவுள்ள சர்வதேச கடல் மார்க்கத்தை இதனூடாக எட்டமுடியும்.

அடுத்ததாக வடகடற்பரப்பானது - பொதுவில் கரையோரத்திற்கு அண்மையாகவுள்ள முருகைக்கற்பாறைகள் இதில் முக்கியத்துவமுடையவையாகவுள்ளன. கரையோரத்தில் இருந்து சில நூறு மீற்றர் அளவிலும் அதற்கும் குறைவான தொலைவிலுள்ள இம் முருகைக் கற்பாறைகளினால் இக்கடற்கரைப் பிரதேசத்தில், கடற்கலங்கள் விரும்பிய இடத்தில் கரைசேர முடியாத நிலையே உள்ளது. இதனால், துறைமுக அன்றி இறங்குதுறை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் மட்டுமே கடற்கலங்கள் கரையை அடையக்கூடிய சாத்தியப்பாடான தன்மை உள்ளது.

இதேசமயம், இப்பகுதி குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால் ஆழம் கூடிய கடற்பகுதியாகவும் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாகவும் உள்ளதோடு, வடக்கே குறுகிய தொலைவில் இந்தியக் கடற்பரப்பைக் கொண்டதாகவும் உள்ளது. ஒட்டுமொத்தத்தில் மேற்கு மற்றும் வடக்கு கடற்பரப்பு அகன்ற கண்டமேடைப் பகுதியில் அமைந்துள்ளது.

இதற்கு அடுத்ததான பகுதி பருத்தித்துறையில் இருந்து தமிழர் தாயகத்தின் தென்கோடி வரை நீண்ட கரையோரமாகும். பல குடாக்களைக் கொண்டதான இக்கடற்பரப்பு ஆழம் மிக்கதாக இருப்பதோடு, தமிழர் தாயகத்தின் பிரதான துறைமுகமான திருகோணமலைத் துறைமுகத்தைக் கொண்டதாகவும் ஒப்பீட்டு ரீதியில் தமிழர் தாயகத்திற்கான விடுதலைப் போரில் அதிகூடிய முக்கியத்துவம் மிக்கதான கடற்பரப்பாகவும் உள்ளது.

கடற்பரப்பு பெரும்பாலும் மணற்பாங்கானதாக இருப்பதோடு, ஆழம் அதிகமானதாக இருப்பதன் காரணமாக, பாரிய கடற்கடலங்கள்கூட கரையோரத்தை அண்டிவரக் கூடியதானதொரு சூழ்நிலை இருப்பதோடு, கடற்பரப்பு, பரந்து விரிந்ததாக சர்வதேச கடற்பரப்புடன் தொடர்புடையதாக இருப்பதினால், கரையை அண்டாது தொலைவிலேயே பயணிக்கவும் வாய்ப்புக்கள் நிறையக் கொண்டதாகவும் உள்ளது.

இதேசமயம், இக்கடற்பரப்பினுள் வங்காள விரிகுடாவில் பயணிக்கும் அன்றி கொழும்பிலிருந்து அன்றி கொழும்பு நோக்கி மலாக்கா நீரிணை ஊடாகக் கப்பல்களில் பாதைகளை விரைவிலேயே எட்டமுடியும்.

இந்த வகையில், காணப்படும் தமிழர் தாயகக் கடற்பரப்பில் எதிர்காலத்தில் பல சமர்கள் இடம்பெறலாம் என்பது மட்டுமல்ல, தமிழர் தாயகத்தின் விடுதலையில் இக்கடற் சமர்கள் ஏற்படுத்தப்போகும் தாக்கம் முக்கியத்துவம் மிக்கவையாக, ஏன் தீர்மானிக்கும் சக்தி கொண்டவையாகவும் இருக்கும் எனக் கூறினும் மிகையாகமாட்டாது.

சிறிலங்கா கடற்படையினருக்கும் - கடற்புலிகளுக்கும் இடையிலான வலுச் சமநிலை மற்றும் மேலாதிக்கம் என்பதனை அவர்களின் ஆயுதத் தளவாடங்கள், ஆளணி என்பனவற்றைக் கொண்டு மதிப்பிடுதல் முடியாது. அது சாத்தியமானதொன்றும் அல்ல. பொருத்தப்பாடானதொன்றும் அல்ல. ஏனெனில், இருதரப்பினரின் பலம் தொடர்பான விடயங்களுக்கு தரவுகள் கிடைக்கப்பெறுதல் கடினம் என்பதோடு, ஆயுதத் தளவாடங்களும் ஒரே ரகத்திலானவையாகவும் இல்லை. அதேசமயம், போர் யுக்திகளும், தாக்குதல் வழிமுறைகளும் கூட ஒரு வகைப்பட்டவையாகவும் இல்லை.

ஆனால், இதுவரை சிறிலங்காக் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையே நடந்துள்ள கடற்சமர்களின் அடிப்படையில் இருதரப்பினரதும் படைக்கலங்கள் அவற்றின் பாவனைகள் என்பன குறித்த சில மதிப்பீடுகளுக்கு வருதல் முடியும்.

சிறிலங்காக் கடற்படையைப் பொறுத்து அதன் பிரதான போரிடும் கலமாக 'டோறா" பீரங்கிப்படகுகள் உள்ளன. இஸ்ரேலிலும், உள்நாட்டிலுமாக தயாரிக்கப்பட்ட இவ் டோறா பீரங்கிக் கலங்கள் மிதக்கும் மினி முகாம் எனக் கூறத்தக்க வகையில் 20 எம். எம். பீரங்கிகள் உட்பட ஆயுத தளவாடங்களைக் கொண்டுள்ளன. இதுவரை கடற்புலிகளுடனான சமர்களில் தமது திறனை வெளிப்படுத்தியுள்ளன என்றே கருதப்படுகின்றது.

இவ்டோறா பீரங்கிக் கலங்கள் சிறிலங்கா கடற்படையைப் பொறுத்து கரையோர ரோந்து மற்றும் கடற்புலிகளுடனான சமர்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் ஆழ்கடல் ரோந்திலும், தாக்குதலிலும் அவை தேவை ஏற்படும்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுகின்றன.

ஆழ்கடல் ரோந்துக்கெனச் சிறிலங்காக் கடற்படைப் பீரங்கிக் கப்பல்களைக் கொள்வனவு செய்திருப்பினும் அவை மோதல்களில் பெரும் பங்காற்றுவதாக இல்லை. அவை பெரும்பாலும் கண்காணிப்பாளர்கள் என்ற நிலையில் இருப்பதோடு, சிறிலங்கா கடற்படைக்கும் - கடற்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் பெரும்பாலும் கரையோரத்தில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இருந்து இடம்பெறுவதினால் அவ் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் சண்டைகளில் பங்குபற்றுவதோ அன்றிச் சிக்கிக் கொள்வதோ மிகவும் குறைவாகவே உள்ளது.

கடற்புலிகளைப் பொறுத்து உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட கலங்கள் வெளியிணைப்பு இயந்திரங்களுடன் பாவனையில் உள்ளன. 20 எம்.எம் பீரங்கிகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களைக் கொண்ட இப்பீரங்கிக் கலங்கள் சிறிலங்காக் கடற்படையினரிடம் உள்ள டோறா பீரங்கிக் கலங்களுடன் சண்டையிடும் வலுவைக் கொண்டவையாகவுள்ளன.

இதனைவிட சிறிய அளவிலான சண்டைப் படகுகளையும், விடுதலைப் புலிகள் தமது படையணியில் கொண்டுள்ளனர். வேகமான நகர்வு, இப்படகுகளின சிறப்பம்சமாக இருப்பதோடு, அர்ப்பணிப்பு மிக்கப் போராளிகளை அவை கொண்டவையாக இருப்பதினால் இப்படகுகள் பல தடவைகளில் தமது சக்திக்கும் மேம்பட்டதான காரியங்களைக் கூட ஆற்றுவதுண்டு.

இவற்றைவிட கடற்புலிகளிடம் சமர்களின் போக்கையே தீர்மானிக்கத்தக்கதாகவும், திருப்பத்திற்கு உள்ளாக்கக்கூடியதுமான கடற்கரும் புலிகள் அணி - அதாவது தற்கொடைத் தாக்குதல் அணி - ஒன்றும் உள்ளது. இதுவரையில் இக் கடற்கரும்புலி அணி கடற்சண்டைகளில் காத்திரமான பங்காற்றியுள்ளமை அறியப்பட்டதொன்றே.
சிறிலங்காக் கடற்படையினரைப் பொறுத்தும் சரி, விடுதலைப் புலிகளைப் பொறுத்தும் சரி அவை இரண்டு பணிகளை முக்கியமாக ஆற்றுகின்றன.

01. தமது கடல்வழி விநியோகங்களுக்கான பாதுகாப்பு

02. எதிர்த்தரப்பினரது விநியோகங்களைத் தடுத்தல்

இவை இரண்டும் இவ்விரு கடற்படையினரதும் முக்கிய பணியாகும். அதாவது, விடுதலைப் புலிகளுக்கு கடல்மார்க்கமாக இடம்பெறும் ஆயுத விநியோகத்தைத் தடுத்தலும், வடக்கிற்கும், கிழக்கிற்கும் இடையிலான போராளிகளின் போக்குவரத்து ஆயுத விநியோகம் என்பனவற்றை முடக்குதல் என்பது சிறிலங்காக் கடற்படையினரின் முக்கிய பணியாகும்.

இதேசமயம், யாழ். குடாநாட்டிலுள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் போக்குவரத்து, ஆயுத தளவாட விநியோகத்தை முடக்கத்திற்கு உள்ளாக்குதல் கடற்புலிகளின் பணியாக இருக்கக்கூடியதாகும். ஆனால், யுத்த நிறுத்தம் பெயரளவிலாயினும் அமுலில் இருப்பதன் காரணமாக, கடற்புலிகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானதாகவே மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால், யுத்தமொன்று முழு அளவில் மூளுமாயின் கடற்பரப்பில் மேலாதிக்கம் என்பது முக்கியத்துவம் மிக்கதொன்றாகவும், யுத்தத்தில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் ஒன்றாகவும் நிச்சயமாக மாற்றமடையும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகையதொரு நிலையில் கடந்த ஆண்டில் இடம்பெற்ற மோதல்களின் அடிப்படையில் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வது ஓரளவு பொருத்தப்பாடானதொன்றாகவே இருக்கும்.

***

கடந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க கடற்சமர்களில் மே - 11 ஆம் திகதி வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இடம்பெற்ற மோதல், அதன் பின்னர் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி திருமலைத் துறைமுகப்பகுதிக்குள் இடம்பெற்ற மோதல்கள், செப்ரெம்பர் இரண்டாம் திகதி வடமராட்சிக் கடலில் சுமார் ஒன்பது மணி நேரம் நிகழ்ந்த உக்கிர மோதல், நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி வடபகுதிக் கடலில் இடம்பெற்ற கடும்மோதல் என்பன கடல் மேலாதிக்கம் குறித்த விடயத்தில் முக்கியமான சமர்களாகக் கொள்ளத்தக்கவையாகும்.

இச்சமர்கள் குறித்து சுயாதீனமான செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும், சிறிலங்காக் கடற்படையினரின் தகவல்களின் அடிப்படையிலும், எம்மால் அறியப்பட்ட சில தகவல்களின் அடிப்படையிலும் இப்பிராந்தியத்தின் அதாவது வடக்கு மற்றும் கிழக்குக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையின் செயற்பாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பலத்தைக் கடற்புலிகள் பெற்று வருவதாகவே கொள்ளமுடியும்.

இதனை மேற்குறிப்பிட்ட சமர்களின் முடிவுகளில் இருந்தே மதிப்பீடக்கூடியதாக இருக்கும். இதில் முதலாவதாக, சிறிலங்காவின் முக்கிய போரிடும் கலமான டோறா பீரங்கிப் படகுகள் செயல்திறன் மிக்கவையாக இருப்பினும், கடற்புலிகளினால் அவற்றை மோதலில் செயலிழக்கச் செய்ய முடியும் என்பதையே கடந்த ஒருவருட காலக் கடற்சமர்கள் நிரூபிப்பவையாகவுள்ளன. கடற்புலிகளுக்கும் - சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையிலான மோதல்களைக் கடற்புலிகளின் அதிவேகப் பீரங்கிப் படகுகளுக்கும் - டோறா அதிவேகப் பீரங்கிப் படகுகளுக்கும் இடையில் என்றுகூடக் கூறலாம்.

அதிலும் குறிப்பாக, திருமலையிலுள்ள டோறாப் பீரங்கிப் படகுகளின் தொகுதியே கடற்படையின் முனைப்பான போரிடும் அணியாகும். அடுத்தாக 'N;டாறா" பீரங்கிப் படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிகளவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சிறிலங்கா கடற்படைக்கும் கடற்புலிகளுக்கும் இடையிலான முக்கிய மோதல்கள் இவ்விரண்டு தளங்களுக்கும் இடையிலேயே நடைபெற்றுள்ளன என்பதும் சிறிலங்கா கடற்படையின் இரு தளங்களில் இருந்தும் 'டோறா" பீரங்கிக்கலங்கள் இதில் பங்கேற்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சண்டைகள் யாவற்றிலும் சிறிலங்காக் கடற்படை தமது டோறா பீரங்கிக் கலன்கள் ஒன்றிற்கு மேற்பட்டவற்றை இழந்துள்ளது. அடுத்ததாக இச்சண்டைகள் பற்றிக் குறிப்பிடத்தக்க விடயமானது இச்சண்டைகள் யாவற்றிலும் களமுனையில் இருந்து சிறிலங்காக் கடற்படையினரே பின்வாங்கிச் சென்றுள்ளனர் என்பதாகும்.

அதாவது, சமர்களின்போது கடற்புலிகளின் மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டமை காரணமாகவே சிறிலங்காக் கடற்படை விலகிக் கொள்ள வேண்டியதாகியது. இதனை வேறு சில நிகழ்வுகளும் ஊர்ஜிதம் செய்பவையாகவே இருந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, மே. 11 இல் நடந்த சண்டையின் போது இராணுவத்தினரை ஏற்றி வந்த ~வேல்ட்குறூசர் எனும் கப்பல் அப்பிராந்தியத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்பிற்குள் தப்பியோடியது. சிறிலங்காக் கடற்படைத்தரப்பும், அரச தரப்பும் இதனைப் பாதுகாத்துக் கொண்டமை தமது சாதனைஃ திறமை எனக் கூறிக் கொண்டாலும் உண்மையில் அக்கப்பல் தப்பிப்பிழைக்க ஓடி ஒழித்தது என்பதே உண்மையாகும். அக்கப்பல் குறித்து இரு நாட்களுக்கு அரசாங்கம் தகவல் வெளிவிட மறுத்ததில் இருந்தே கடற்படையும், சிறிலங்கா அரசு அடைந்த பீதியும் வெளிப்பட்டிருந்தது.

இத்தகையதொரு சம்பவம் மீண்டும் ஒரு தடவை இடம்பெற்றது. சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் வடமராட்சிக் கடலில் கடந்த நவம்பர் மாதத்தில் மோதல் ஒன்று மூண்டதையடுத்து இராணுவத்தினரை ஏற்றிய கப்பல் ஒன்று தன்னைக் காத்து இந்தியக் கடற்பிராந்தியத்திற்குத் தப்பியோடியது. ஆனால், இம்மோதலில் டோறாப் பீரங்கிக் கலன்கள் பலமாக அடிவாங்கின. ஆனால், அரசு கூறுவது போன்று மோதல்களின் போது விடுதலைப் புலிகளின் இலக்காக இக்கப்பல்கள் இருந்தனவா என்பது வேறு விடயம்.

இது ஒரு புறமிருக்க, சிறிலங்கா கடற்படைக் கலங்களைக் குறிப்பாக, டோறா அதிவேகத் தாக்குதல் கலன்களை முன்னர் கரும்புலித் தாக்குதல் ஊடாகத் தாக்கி அழித்து வந்த கடற்புலிகள் - தற்பொழுது நேரடிச் சமரின் மூலம் முடக்கத்திற்கு உள்ளாக்கித் தாக்கி அழிக்கும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதத்தில் வடமராட்சிக் கடற்பரப்பில் இரண்டு டோறா படகுகளை மூழ்கடித்து ஒன்றைப் பலத்த சேதத்திற்குள்ளாக்கிய தாக்குதலில் ஒரு கலத்தைக் கைப்பற்றி ஆயுதங்களை மீட்டபின் மூழ்கடித்தமையும், அதில் நான்கு கடற்படையினரைக் கைது செய்திருந்தமையும் கடற்சமரில் முக்கியமானதொரு அம்சமே ஆகும். அதாவது, கடற்புலிகளின் தாக்குதல் திறன் அதிகரித்ததன் வெளிப்பாடாகும்.

இவை ஒருபுறம் இருக்க, கடந்த ஒரு வருட காலத்திற்குள் சிறிலங்காவின் முக்கிய துறைமுகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இத்தாக்குதல்களுக்கு கடற்புலிகள் உரிமை கோராது விடினும், சிறிலங்கா அரசாங்கமோ கடற்புலிகள் இத்தாக்குதல்களை மேற்கொண்டதாகக் கூறுகின்றது.

அந்த வகையில் பார்க்கையில், கடற்புலிகளினால் சிறிலங்காவின் அனைத்துத் துறைமுகங்களையும் எட்டமுடியும் என்பது கடந்த ஆண்டில் உறுதி செய்யப்பட்டதாகியுள்ளது. இத்தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிக்கொண்டாலும் தாக்குதல்களினால் துறைமுகத்திற்கும் சிறிலங்கா கடற்படைக்கும் துறைமுக நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது.

காலித்துறைமுகம் மீதான தாக்குதலினால் போர்க் கப்பலான பராக்கிரமபாகு தரைதட்டிதை யும் ஒரு டோறா உட்பட இரு படகுகள் மூழ்கடிக்கப்பட்டதையும், கட்டிடங்கள் சேத மடைந்ததையும் அரசாங்கத்தால் மறுத்துவிட முடியவில்லை.

இதேவேளை, கொழும்புத்துறைமுகத்தின் மீதான தாக்குதலின்போது பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனக்கூறிக் கொண்டாலும் உண்மைகளை மூடிமறைத்து மூன்று டிங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும், கப்பல் ஒன்று சேதத்திற்கு உள்ளானதாகவும் கூற வேண்டிய கட்டாயம் அரசிற்கு எழுந்தே இருந்தது.

அதேசமயம் கடற்புலிகளின் படகெனக் கூறி சிறிலங்காக் கடற்படை தாக்கி மூழ்கடித்தவை மீன்பிடிப் படகுகள் என்பதும் கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு மீனவர்கள் என்பதும் பின்னர் ஊர்ஜிதம் செய்யப்பட்டவை ஆகின. இந்த நிலையில், கடற்புலிகள் கொழும்பு துறைமுகப்பகுதிக்குள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்பது மட்டுமல்ல, சிலர் தாக்குதல் நடத்திவிட்டு திரும்பிச் சென்றுள்ளமையும் ஊர்ஜிதம் ஆகின்றது.

இவற்றைப் பார்க்கையில், கடந்த ஓராண்டு காலத்தில் சிறிலங்கா கடற்படையானது முழுவீச்சில் செயற்பட்டபோதும் கடற்படையினரின் நடவடிக்கைகளை தமிழர் தாயகக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளால் கட்டுப்படுத்த முடியும் என்பது பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டதொன்றாகவே உள்ளது.

இதனைச் சிறிலங்காக் கடற்படையினரும், அதன் ஆலோசகர்களும் புரிந்துகொண்டுள்ளனர் என்பதையே அவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. குறிப்பாக, கூறுவதானால், டோறா பீரங்கிக் கலங்களுக்கு 30 எம்.எம். பீரங்கிகள் பொருத்தும் நடவடிக்கைகளிலும் சமரின்போது சிறிலங்கா விமானப் படையின் உதவியைக் கோருவதும் இதன் விளைவுகளே ஆகும்.

ஆனால், இக்காலப் பகுதியில் இடம்பெற்ற மோதல்கள் பெரும்பாலும் மட்டுப்படுத்தப்பட்டவையே. இம்மோதல்கள் தமிழ் மக்களின் இறுதிப் போரின் அங்கமாக இல்லாது விடினும் அச்சமர்கள் பற்றிக் கட்டியம் கூறுபவையாகக் கொள்ளப்படத்தக்கவையே. இந்த ரீதியில் எதிர்காலத்தில் கடலில் இடம்பெறப்போகும் பெரும் சமர்களில் சிறிலங்காக் கடற்படை கடற்புலிகளிடம் இருந்து பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இது நெப்போலியனுக்கு டிரல்பல்கார் போன்றதாகவோ, ஸ்பெயினுக்கு அமெல்டா போன்றதாகவோ கூட அமையலாம்.

நன்றி: ஈழநாதம் (19.02.07)

_____________________________________________


Labels: ,