« Home | ஏழுகட்சிக்கூட்டணி - மாவோயிசப் போராளிகள் ஒப்பந்தம் » | இஸ்ரேலியப் பயங்கரவாதம் - சனநாயகத்துக்கான போராட்டம் » | இராணுவப்பிடியில் சிறிலங்கா » | அணுவாயுதப் பரிசோதனை அரசியல் » | சிங்களவரிடமுள்ள இனப்பிரச்சினைத் தீர்வு » | பேச்சுவார்த்தையும் பேய்க்காட்டலும் » | புலிகளின் பலம் மக்கள் சக்தியே » | ரணில் - மகிந்த கூட்டு ஒப்பந்தம் » | ஈழத்தமிழரின் நேச சக்திகள் » | ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோ வருது கிடைத்தது எப்படி? »

சிங்கள மனப்பான்மையும் சிறிலங்கா நிலைமையும்

மறுபக்கம் - கோகர்ணன்

இப் பத்தி வெளிவருவதற்கு முன்னமே மீளவும் விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அறிவித்தல் ஒன்று வெளியாகியிருக்கலாம். தென்னிலங்கையில் மறுபடியும் உக்கிரமாக மூட்டப்பட்டுள்ள பேரினவாத உணர்வும் அதையொட்டி வளர்க்கப்படுகின்ற இனவெறியும் தமிழர் மீதான வெறுப்பும் கிளறி விட்ட எதிர்பார்ப்புகளில் இத்தடையும் வடக்கு - கிழக்கு ஒன்றிணைப்பிற்கு எதிரான தீர்ப்பும் உள்ளடங்குவன. 26 டிசம்பர் 2004 அனர்த்தத்தின் பின்பு பாதிக்கப்பட்ட தமிழரும் முஸ்லிம்களும் பற்றி சிங்கள மக்கள் நடுவே எழுந்த அனுதாப உணர்வின் ஒரு மங்கலான சுவட்டைக் கூட நிவாரண வேலைகட்கான பணிகள் நீதிமன்றத்தின் மூலம் முடக்கப்பட்ட போது காண இயலாதிருந்தது.
தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் ஒன்றே என்று கருதக்கூடாது என அரசாங்கம் சொல்லுகிறது. அண்மையில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளே அல்ல என்று அரசாங்கத்துக்கு ஒத்துப்பாடுகிறவர்கள் சிலர் சொல்லி வந்ததை ஜனாதிபதியும் இந்தியாவில் எதிரொலித்துள்ளார். எனினும் இராணுவத்தினரது தாக்குதல்களும் விமானப்படையினரின் குண்டு வீச்சும் தமிழ் மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே எந்த வேறுபாட்டையும் காணுவதாகத் தெரியவில்லை. இவையெல்லாம் ஏற்கக்கூடிய விடயங்களாகத் தென்னிலங்கையிற் காணப்படுகின்றன என்றால், தமிழ் மக்கள் பற்றி சிங்கள மக்களின் மனதிற் பதிய வைக்கப்பட்டுள்ள சில படிமங்கள் அதற்கான முக்கியமான காரணங்களாக உள்ளன. ஒருபுறம், விடுதலைப் புலிகளைப் பெரும்பாலான தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர் என்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாலேயே அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள தமிழர்கள் அச்சத்தின் காரணமாகவே விடுதலைப் புலிகளுடன் இணங்கி நடப்பதாகவும் பல சிங்கள மக்கள் நம்புகின்றனர். இவ்வாறான நம்பிக்கையின் அடிப்படியிலேயே விடுதலைப் புலிகளுடனான உடன்படிக்கைகளை அரசாங்கம் முறிப்பது நியாயப்படுத்தப்படுகிறது.

அதேவேளை, ஒவ்வொரு தமிழரையும், அவர் அரசாங்கத்தின் நிபந்தனையற்ற ஆதரவாளராக இருந்தாற்கூட, ஒரு சந்தேக நபராகவும், விடுதலைப் புலிகளின் அனுதாபியாகவோ ஆதரவாளராகவோ இல்லாது போயினுங் கூட, அவர் ஒரு தமிழ் இனவாதியாயும், சிங்கள இன விரோதியாயும் இருக்கக் கூடியவர் என்ற விதமாகத் தமிழர் மீதான பொதுவான அவநம்பிக்கை நிலவுகிறது. என்றைக்குமே விடுதலைப் புலிகளின் மீது அனுதாபமிருந்தவராகவோ வடக்கு - கிழக்கின் தமிழ் மக்களுடன் அடையாளங் காணப்படவோ இயலாதவராக ஒருவர் இருந்தாலும் அவர் பேரினவாதிகளை விமர்சித்தோ தமிழருக்கு இழைக்கப்பட்ட ஏதாவது ஒரு சமூக அநீதியைக் கண்டித்தோ பேசியிருந்தால், அங்கே முக்கியமாவது அவரது கருத்தின் நியாயமோ நியாயமின்மையோ அல்ல; அவர் தமிழரா என்பது மட்டுமே அங்கு முக்கியமாகிறது.

1983 ஆம் ஆண்டு இனப்படுகொலைகட்குச் சில மாதங்கள் முன்பென்று நினைக்கிறேன். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அது அமெரிக்காவிலிருந்து தமது கல்விப் பயிற்சியின் ஒரு பகுதியாக இலங்கையின் சமூகவியல் பற்றிக் கற்க வந்த ஒரு மாணவர் குழாமுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஒருவர் தமிழ்க் கண்ணோட்டத்திலிருந்தும் இன்னொருவர் சிங்களக் கண்ணோட்டத்திலிருந்தும் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிப் பேசுவதற்கும் அதன் பின்பான கலந்துரையாடலுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது. கண்டிப் பகுதியில் தமிழ்த் தேசியவாதத்தை வற்புறுத்தி ஆங்கிலத்தில் உரையாற்றக்கூடிய எவரும் அகப்படாததாலோ அப்படி எவரையேனும் அறிந்திருந்தால் அவர் ஏற்பாட்டாளர்கட்கு உடன்பாடானவராக இல்லாததாலோ என்னவோ ஒரு தமிழ் இடதுசாரி அரசியல் ஆய்வாளரை அணுகினர். அவர் தன்னுடைய கண்ணோட்டம் தமிழ்க் கண்ணோட்டமோ சிங்களக் கண்ணோட்டமோ இலங்கைக் கண்ணோட்டமோ கூட இல்லை, அது ஒரு மாக்ஸியக் கண்ணோட்டமே என்பதால், தன்னால் வர்க்கத்தாலும் வாழ்விடச் சூழலாலும் வேறுபடுகிற எந்த ஒரு `தமிழ்க்' கண்ணோட்டத்தையும் நேர்மையாக முன்வைக்க இயலாது என்று மறுத்துவிட்டார். எனவே, ஒரு தமிழர் தேவை என்பதால் அவரையும் ஒரு பிரபல சிங்களப் பேரினவாதப் பிரமுகரையும் தமிழரது பிரச்சினையை நன்கு அறிந்த ஒரு சிங்கள விரிவுரையாளரையும் பங்குபற்றுமாறு அழைத்திருந்தனர்.

இடதுசாரிக் கண்ணோட்டத்தில் ஒரு தமிழர் பேசியதையிட்டு அங்கு வந்திருந்த சிங்கள புத்திஜீவிகளில் ஒரு பகுதியினர் அதுவும் ஒரு தமிழ்க் கண்ணோட்டமென்றும் இன்னொரு பகுதியினர் அது ஒருவகையிலான மாக்ஸியக் கண்ணோட்டமென்றும் நினைத்தனர். எனினும் ஒரு தமிழ்க் கண்ணோட்டத்தை, அது தன்னுடைய கருத்தல்ல என்பதை மிகவும் தெளிவாக உணர்த்திக்கூட, ஒரு சிங்களவர் பேசுவதைக் கேட்டுக் கொதிப்புற்ற ஒரு சிங்களப் பிரமுகர் இரத்த அழுத்தம்மேற்பட்டு அவ்விடத்தில் மயக்கமானார். சிங்களவர் ஒருவரிடமிருந்து சிங்களப் பேரினவாதக் கருத்தை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும் என்ற மனநிலையும், அவ்வாறே தமிழரும் முஸ்லிம்களும் தமிழ், முஸ்லிம் இனவாத அடிப்படையிலேயே சிந்திக்கின்றனர் என்ற எண்ணமும் இன்று மேலும் வலுப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டு தரப்படுத்தல் முறைக்கு அத்திவாரமாக தமிழ் மாணவர்கட்கு அதிகப்படியான புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதாகப் பத்திரிகைகளில் கருத்துகள் பரப்பப்பட்டதைக் கண்டித்து அது பற்றிய ஒரு விசாரணையின் முடிவின்றி அவ்வாறான கருத்துகளைப் பரப்புவது தவறு என்று இரண்டு சிங்கள விரிவுரையாளர்கள் ஆங்கில நாளேடொன்றுக்குக் கடிதம் எழுதினர். அதற்கு எதிர்வினையாக அவர்கட்குத் தனிப்பட்ட முறையில் இனத் துரோகி என்று நிந்தித்தும் மிரட்டியும் சில கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதே காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையிலும் இதே விதமான போக்கு விருத்தி பெற்று வந்துள்ளது என என்னால் உறுதியாகக் கூற முடியும்.

விடுதலைப்புலிகள் ஐக்கிய இலங்கைக்குட்பட்ட தீர்வொன்றுக்கு உடன்பட்டிருந்த ஏறத்தாழ ஐந்து ஆண்டுக் காலத்தில் விடுதலைப்புலிகளின் இந்த மெச்சத்தக்க விட்டுக் கொடுப்பிற்கு அதை அறிவித்த பின் உடனடியாகக் கிடைத்த பாராட்டுகளின் பிறகு, ஒரு புறம் "ஹிந்து" பத்திரிகை நிறுவனம் உட்பட்ட அந்நிய விஷமிகளும் உள்ளூர் விஷமிகளும் விடுதலைப் புலிகளின் நோக்கம் எப்போதுமே பிரிவினை தான் என்று விஷமப் பிரசாரத்தில் இறங்கினர். அதன் பின்பு, குறிப்பாக 2003 இறுதிப் பகுதியிலிருந்து தமிழ் மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சிக்கு இடமிராது என்றும் அவர்களது எதிர்காலம் நிச்சயமற்றது என்றும் வலியுறுத்துகிற விதமாகவே அரசாங்கமும் அதன் படைகளும் நடந்து கொண்டுள்ளன. கடல்கோளுக்குப் பின்பான அரசாங்க நடவடிக்கை ஒவ்வொன்றும் விடுதலைப்புலிகளைப் பணிய வைக்கிற நோக்குடனும் அதை வசதிப்படுத்தும் முறையில் தமிழ் மக்களைத் துன்புறுத்துகிற முறையிலுமே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. தேசிய ஐக்கியம் என்பது வெவ்வேறு அடையாளமுள்ள சமூகங்களின் சமத்துவத்தின் மீதும் தேசிய இனங்கள் ஒவ்வொன்றினதும் சுயநிர்ணய உரிமையின் மீதுமே கட்டியெழுப்பப்படக் கூடியதாகும். அல்லாத போது இனங்கள் நடுவே பரஸ்பர சந்தேகமும் பகையுமே வளரும். இப்போது விடுதலைப்புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளனர். இதற்கான பொறுப்பு போர் மூலமான தீர்வைப் பல்வேறு வழிகளிலும் ஆதரித்த அனைவரிடமும் உண்டு. விடுதலைப் புலிகள் வேண்டுவது தனிநாடு மட்டுமே என்ற நிலைக்கு அவர்களைத் தள்ளிப், போர் மூலமே தேசிய இனப்பிரச்சினையைக் தீர்க்க முனைகிற ஒரு அரசாங்கம் வடக்கு - கிழக்கைப் பிரிப்பதோ விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பதோ இன்றைய நிலைமைகளை விட மோசமான இன்னொரு நிலையை விடுதலைப் புலிகட்கு ஏற்படுத்தப்போவதில்லை. தமிழ் மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் அனுபவிக்கிற இன்னல்களில் பெரிய மாற்றம் ஏற்படப் போவதில்லை.

எனினும் நம்மிற் பலர் காணுகிற தேசிய இனப்பிரச்சினையின் பின்னணியில், நாட்டின் பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை, பயங்கரவாத ஒழிப்பு என்கிற பேர்களில் அடக்குமுறை ஆட்சி ஒன்றுக்கான அத்திவாரம் இடப்பட்டு வருகிறது. அது பற்றி ஒரு வருடத்திற்கும் முன்பிருந்து வெளி வெளியாகவே எச்சரித்து எழுதி வந்திருக்கிறேன். நடக்குமென எதிர்பார்த்த சில நடந்ததையிட்டு மகிழ்ச்சி அடைய இயலவில்லை. ஏனெனில், அவை நடக்கக்கூடாது என்று எச்சரிக்கிற நோக்கிலேயே அவை பற்றி எழுதி வந்திருக்கிறேன்.

இனிமேற் கொண்டு நடக்க உள்ளவற்றை உண்மையான ஜனநாயகவாதிகளும் நேர்மையான இடதுசாரிகளும் மட்டுமே நல்லனவாக அமைக்க இயலும். என்ன காரணங் கொண்டேனும் விடுதலைப்புலிகள் மீதான தடையையும் விடுதலைப் புலிகளுடனான போரையும் ஊக்குவிக்கிறவர்களும் நாட்டின் பாதுகாப்பின் பேரில் எடுக்கப்படுகிற நடவடிக்கைகளை ஆதரிக்கிறவர்களும் அந்த நிகழ்ச்சிகளின் பின்விளைவுகளைத் தாங்களும் அனுபவிப்பர் என்பதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் பல உள்ளன.

1930 களில் ஜேர்மனியில் உருவான யூத இனவிரோதம் பின்பு கம்யூனிச/ இடதுசாரி விரோதமாகி இறுதியில் சனநாயக விரோதமாகி ஜேர்மனியை ஒரு பெரும் போருக்குள்ளும் பெரும் அழிவுக்குள்ளும் தள்ளிவிட்டது. அந்தப் பாடத்தைக் கற்காதவர்கள் இருக்கிறார்கள். இலங்கையும் அந்த அணிக்குள் இணைய வேண்டுமா?

_______________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 10, 2006

Labels:

//1930 களில் ஜேர்மனியில் உருவான யூத இனவிரோதம் பின்பு கம்யூனிச/ இடதுசாரி விரோதமாகி இறுதியில் சனநாயக விரோதமாகி ஜேர்மனியை ஒரு பெரும் போருக்குள்ளும் பெரும் அழிவுக்குள்ளும் தள்ளிவிட்டது. அந்தப் பாடத்தைக் கற்காதவர்கள் இருக்கிறார்கள். இலங்கையும் அந்த அணிக்குள் இணைய வேண்டுமா?//

இது சிங்களவர்களுக்குப் புரியாது.
தாங்களும் வாழாமல் தமிழர்களையும் வாழவிடாமல் நாட்டையே சுடுகாடாக்கப் பார்க்கிறார்கள்.

அருமையான கட்டுரையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

முரளி.

Post a Comment

Get your own calendar

Links