« Home | இராணுவப்பிடியில் சிறிலங்கா » | அணுவாயுதப் பரிசோதனை அரசியல் » | சிங்களவரிடமுள்ள இனப்பிரச்சினைத் தீர்வு » | பேச்சுவார்த்தையும் பேய்க்காட்டலும் » | புலிகளின் பலம் மக்கள் சக்தியே » | ரணில் - மகிந்த கூட்டு ஒப்பந்தம் » | ஈழத்தமிழரின் நேச சக்திகள் » | ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோ வருது கிடைத்தது எப்படி? » | இந்தியாவின் நோக்கம் என்ன? » | மகிந்தவின் முகங்கள் »

இஸ்ரேலியப் பயங்கரவாதம் - சனநாயகத்துக்கான போராட்டம்

மறுபக்கம் - கோகர்ணன்

`திறந்த கல்லறையை நோக்கி' என்ற தலைப்பில் மைக்கல் வார்ஷ்சாவ்ஸ்கி என்ற இஸ்ரேலியர் 2004 இல் எழுதிய நூலை வாசிக்கக் கிடைத்தது. பலஸ்தீனத்தின் மீதும் இஸ்ரேலிலும் பலஸ்தீனத்திலும் வாழும் அராபியர்கள் மீதும் நிகழ்த்துகிற கொடுமைகள் பற்றிப் பல நூல்கள் வந்துள்ளன. அவை பற்றி அறிய அக்கறையுடையோருக்கு அவற்றை அறிய வாய்ப்புக்கள் முழுமையாக இல்லாதபோதும், தேடி அறிய இன்னமும் வாய்ப்பு உண்டு. இஸ்ரேலிய அரசு செய்கிற கொடுமைகள் இஸ்ரேலின் யூத சமூகத்திற்கு என்ன செய்கிறது என்பது பற்றிய ஆய்வுகள் அதிகம் வெளிவந்ததில்லை. அவ்வகையில் மட்டுமில்லாமல், இஸ்ரேலின் உள்ளிருந்து இஸ்ரேலிய சமூகத்துக்கு நடப்பதை நிதானமாகவும் நேர்மையாகவும் எடுத்துக் காட்டுகிற ஒருவரது ஆக்கம் என்ற வகையிலும் இந்த நூல் சிறப்பானது. வார்ஷ்சாவ்ஸ்கி ஜெருசலேமில் உள்ள மாற்றுத் தகவல் மையத்தின் இயக்குநர் ஆவார்.
யூதர்கட்கு எதிராகச் சென்ற நூற்றாண்டுவரை ஐரோப்பாவில் செய்யப்பட்ட கொடுமையைக் காரணங் காட்டி இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்குகிற கருத்துக்குத் திரட்டப்பட்ட ஆதரவு, ஹிற்லரின் தலைமையின் கீழ் ஜேர்மன் தேசியவாதமும் இனவெறியும் நாற்ஸியம் என்கிற ஃபாஸிஸமாகி வெறித்தனமான யூத இன ஒழிப்பு நடவடிக்கைகளானதன் விளைவாக இரண்டாம் மதப் போரின் பின்பு இஸ்ரேலின் தோற்றத்துக்கு வழி செய்தது. அரபு மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த மண்ணில், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னால் இருந்து புலம்பெயர்ந்த யூதர்களின் வாரிசுகள் வந்து குடியேறக்கூடிய ஒரு இஸ்ரேலின் உருவாக்கம் வன்முறையால் அப்பாவி அரபு மக்களை விரட்டியும் வஞ்சகமாயும் மிரட்டல்களாலும் அவர்களது மண்ணை அடிமாட்டு விலைக்கு வாங்கியும் நடந்த நிலப்பறிப்பினால் இயலுமாக்கப்பட்டது. அந்த வன்முறைக் கலாசாரமே இஸ்ரேலிய அரசின் பிரகடனப்படுத்தப்படாத கொள்கையாகத் தொடர்ந்து விருத்தி பெற்றுள்ளது.

இஸ்ரேல் தனக்கு 1948 ஆம் ஆண்டு ஐ.நா. சபையால் வழங்கப்பட்ட நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு மூலமும் போர்மூலமும் விஸ்தரித்து வந்ததோடு அயலில் உள்ள அரபு நாடுகளில் அகதிகளாக வாழுகிற பலஸ்தீன மக்களைத் தாக்கி அழிக்கும் உரிமையையும் தனதாக்கிக் கொண்டுள்ளது.குறிப்பாக, லெபனானில் 1978 இல் இஸ்ரேல் நடத்திய ஆக்கிரமிப்பும் அதைத் தொடர்ந்து தலைநகர் பெய்ரூத்தை அண்டிய பலஸ்தீன அகதி முகாம்களில் நடத்திய படுகொலையும் முழு உலகையும் அதிர வைத்தது. எனினும், இதுவரை ஸ்ரேலின் அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டுள்ளதாக எவருஞ் சொல்ல இயலாது. இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்கள் யூத இன வெறுப்பு, ஃபாஸிஸம், கம்யூனிஸ்ற் சதி என்று பலவாறாகத் தட்டிக் கழிக்கப்படுகிறது. இஸ்ரேல் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏகாதிபத்தியத்தின் ஒரு போர்ப் பாசறையாகவும் மத்திய கிழக்கின் அரபு மக்களின் மீதான அடக்குமுறைக்கான ஒரு வலுப்படுத்தப்பட்ட கோட்டையாகவும் உள்ளது. 1956 க்குப் பிறகு இஸ்ரேலின் மீதான அமெரிக்கச் செல்வாக்கு மிகவும் வலுப்பெற்றது. அதன் பின்னர் அரபு நாடுகளில் உள்ள எண்ணெய் மீதான அமெரிக்க ஏகபோகத்திற்கு எதிராகச் செயற்படக்கூடிய எந்த் நாட்டையும் எந்த அரசியல் போராட்டச் சக்தியையும் அடக்கவும் அழிக்கவும் இஸ்ரேலின் பாதுகாப்பு என்ற நியாயபடுத்தப்பட்டு வந்துள்ளது.

இஸ்ரேலிய அரசு நடத்துகிற கொடுமைகட்கு எதிரான குரல்கள் எப்போதுமே இஸ்ரேலுக்குள்ளிருந்து எழுந்து வந்துள்ளன.எனினும், சரிக்கும், பிழைக்கும், நியாயத்திற்கும், அநியாயத்திற்கும் வேறுபாடு தெரியாத ஒரு சமூகமாக இஸ்ரேல் சீரழிந்து வந்துள்ளது. இது எப்படி நடந்தது என்பதை விளங்கிக் கொள்ளத் `திறந்த கல்லறையை நோக்கி' என்ற நூல் மிகவும் உதவுகின்றது.

இஸ்ரேலின் கொடுமைகளை நியாயப்படுத்தப் பலஸ்தீன பயங்கரவாதம் பயன்படுகிறது.அது மட்டுமன்றிப் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதும் தண்டிப்பதும் என்பதற்கும் அப்பால், இஸ்ரேலிய அதிகாரத்திற்குச் சவால் எதுவும் பலஸ்தீன மக்களிடமிருந்து எழுவதற்கு முன்னரே, அதைத் தடுக்கிற நோக்கில் தாக்கி அழிப்பது என்ற கொள்கை அண்மைக் காலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. அமெரிக்கா இன்று `பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பேரில் நடத்துகிற ஆக்கிரமிப்புக்களையும் இராணுவக் குறுக்கீடுகளையும் `9/11' எனப்படும் 11 செப்ரெம்பர் விமானத் தாக்குதல்கள் நியாயப்படுத்தின. இஸ்ரேலைப் பொறுத்தவரை, 9/11 என்பது, அது ஏற்கெனவே செய்துவந்த ஒரு காரியத்தை மேலும் உற்சாகத்துடன் செய்ய ஒரு உந்துதலாக அமைந்தது.

இப்போதெல்லாம் எந்தவொரு பாலஸ்தீன அகதி முகாமோ மருத்துவமனையோ இஸ்ரேலின் விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் ஏவுகணைத் தாக்குதல்கட்கும் விலக்கில்லை.அது மட்டுமல்லாமல், முன்பெல்லாம் இலக்கு வைக்கப்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதோ பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் அருகில் இருப்பதோ ஒரு விளக்கமாகக் கூறப்பட்டிருக்கும். சில சமயம் மிக அருமையாகத் தவறாக அடையாளங் காணப்பட்டதாகவோ குறிதவறியதாகவோ ஏற்கப்படும். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. இஸ்ரேலியப் படையினர் செய்கிற எதற்கும் நியாயம் தேவையில்லை என்றாகிவிட்டது.

அண்மையில் லெபனானில் இஸ்ரேல் நடத்திய படுகொலை பற்றி இஸ்ரேலில் பெரிய எதிர்ப்பு எழவில்லை. இஸ்ரேலியப் படைகள் ஹிஸ்புல்லாவை முறியடிக்கத் தவறியமையும், சிறைப் பிடிக்கப்பட்ட இஸ்ரேலியப் படையினர் இருவரையும் மீட்க லெபனான் மீதான தாக்குதல்கள் உதவவில்லை என்பதுமே அரசாங்கத்திற்கு எதிரான கோபத்திற்குக் காரணமாக இருந்தன. இஸ்ரேலில் அராபியரை விட்டால் போர் எதிர்ப்பு என்பது மிகச் சிறுபான்மையான யூதர்களிடமே உள்ளது. போர் எதிர்ப்புக்கு இருந்து வந்த ஆதரவு ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போகத் தொடங்கியது தொட்டு ஏறத்தாழ இல்லாமலே போய்விட்டது. இன்று போரில் தோல்விக்கு எதிர்ப்பு உள்ளது. அதன் காரணமாகவே இஸ்ரேலியப் பிரதமரும் அதன் பாதுகாப்பு அமைச்சரும் பதவி விலகுமாறு கேட்கப்பட்டனர்.

இஸ்ரேலில் இப்போது இருப்பது எதிரும் புதிருமாக இருந்த இஸ்ரேலியக் கட்சிகளைக் கொண்ட கூட்டரசாங்கம். இஸ்ரேலியத் தொழிற்கட்சிக்கு ஒரு இடதுசாரி, சமாதான சார்பு தோற்றம் இருந்தது. ஆனால்,லெபனான் மீதான போரை நடத்தியவர் அக்கட்சியைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர். இஸ்ரேலின் பாராளுமன்ற இடதுசாரிகள் கூட இஸ்ரேலின் போர்க் கொள்கையை எதிர்க்கவோ பலஸ்தீன மக்களின் மனித உரிமை மீறல்களையோ இஸ்ரேலில் உள்ள அராபியர்கட்கு எதிரான கொடுமைகளைப் பற்றிக் குரல் கொடுக்கவோ இயலாதளவுக்குச் சீரழிந்துள்ளனர்.

இஸ்ரேலின் இன்றைய அப்பட்டமான இனவெறிப் போக்கு வலுப்பெற்று, நாட்டின் ஆதிக்கச் சிந்தனையாவதற்கு எவ்வாறு அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் உதவின என்பதற்கும் மேலாக, இப்போக்கு எப்படி ஸ்ரேலிய சமுதாயத்தைச் சனநாயகமற்ற ஒன்றாகச் சீரழித்துள்ளது என்பதை முன் குறிப்பிட்ட நூல் விளக்கியுள்ளது.

"இந்தச் சமுதாயம் மேற்கொண்டு புவியியல் சார்ந்த எல்லையையோ அறஞ் சார்ந்த எல்லையையோ ஏற்கவில்லை. யூத அரசு மிகவும் சாய்வான, சறுக்கலான சரிவில் வழுக்கிக் கொண்டு போகிற இவ்வேளை, மேற்கொண்டு எந்தத் தடையும் (பிறேக்) இயங்குவதாகத் தெரியவில்லை. சரிவின் அடியில் என்ன உள்ளது? முழு அராபிய, இஸ்லாமிய உலகுக்கும் எதிரான ஒரு ஆயுதந் தாங்கிய மோதல்; அது அணுஆயுதப் போராயும் அமையலாம். இஸ்ரேலின் போக்கு தற்கொலைத் தன்மையுடையது என்பதிற் ேகள்வியில்லை. அது ஃபிலிஸ்ற்றீன்களை அழிக்க அவர்களோடு அழிய ஆயத்தமாயிருந்த சாம்ஸன் பற்றிய கதையை நினைவூட்டுகிறது. வன்முறை, பதிலடி, மேலும் வன்முறை என்று தொடருகிற இந்த நச்சு வட்டத்தின் இறுதியான விளைவு என்னவென்று எவரேனும் டே்கிற ஒவ்வொரு முறையும், அக்கதை இஸ்ரேலின் உரையாடல்கள் ஒழுங்காகத் திரும்பத்திரும்ப வருகிறது" என்று நூலின் பின்னுரையில் நூலாசிரியர் கூறியிருப்பதை நாம் உலகின் பேரினவாத, இனவெறி, ஏகாதிபத்திய, மேலாதிக்க வன்முறைச் சூழல் ஒவ்வொன்றுக்கும் பொருந்துகிற மாதிரி மீள வாசிக்கலாம்.

ஆய்வறிவாளர்களும் அறிஞர்களும் கூட இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நோக்கங்களையோ அடக்கு முறைக் கொள்கையையோ கேள்விக்குட்படுத்தத் தயாராக இல்லை. அவ்வாறான கேள்விகள் அமைதிக்குச் சாதகமான சூழல்களில் மட்டுமே எழுகின்றன. எனவே, சமூகம் படித்தவர்களாலும் மேதைகளாலும் வழி நடத்தப்படுகிறது என்பது பற்றி நாம் மிகவும் ஐயப்பட வேண்டியுள்ளது. ஒரு சமூகம் சரியான திசையில் செயற்படுகிறபோதோ நியாயத்திற்கும் நீதிக்குமான போராட்டங்கள் எழுச்சி பெறும் போதும் ஆய்வறிவாளர்களும் அறிஞர்களும் ஆக்கமான பங்களிக்க இயலுகிறது. அல்லாத போது அவர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள்.

வரலாற்றை மக்களே உருவாக்குகின்றனர் என்பதன் உண்மையை நாம் மறக்கிற போது தனி மனித ஆளுமைகள் மீது மிகையாக நம்பிக்கை வைக்கிறோம்; சமூகப் பொறுப்புக்களைக் குறிப்பிட்ட சிலரது கைகளில் விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ளுகிறோம்; அந்நியர் மீதும் அறிவுக்கு அப்பாற்பட்ட சக்திகள் மீதம் பாரத்தைச் சுமத்தி விடுகிறோம்.

அண்மையில் நேபாள மாஓவாதிகளின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளது போல இந்த நூற்றாண்டின் மையமான பிரச்சினை சனநாயகம் பற்றியது. மக்கள் தமது வாழ்வின்மீதும் வளர்ச்சி மீதும் முழுமையான ஆளுமையை பெறுவது தான் சனநாயகம்.

எனவே, ஒடுக்கப்பட்டு தவிக்கும் ஒரு மக்கள் திரளின் போராட்டம் தனது விடுதலைக்கானது மட்டுமல்ல, அது சனநாயகத்துக்கானதுமாகும் என்பதை நாம் மறக்கலாகாது. அப்போராட்டத்தின் வெற்றி போராளிகளின் ஆயுதங்களில் மட்டுமன்றி ஒடுக்குமுறை யாரின் பாதுகாப்பின் பேரில் நடக்கிறதோ அந்த மக்களின் நடுவே சனநாயகச் சக்திகளின் கைகள் வலுவடைவதிலும் தங்கியுள்ளது.
_____________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் November 26, 2006

_____________________________________________

Labels:


Get your own calendar

Links