Thursday, March 13, 2008

மன்னாரில் பெண் புலிகளின் வீரம்

-மலைமகள்-

ஆண்டின் பெரும்பகுதியில் அனல் பறக்கும் மன்னார் மண்ணில் இப்போது பொறியும் சேர்ந்து பறக்கின்றது. சும்மா கிடந்த மன்னார் சிங்களப் படைகளின் வரவால் சிலிர்த்தெழும்பி, வரலாறு படைக்கத் தயாராகி நிற்கின்றது. உயிர்த்தெழுந்த சிங்களத்தின் பிடரி மயிர்கள் போல கூராக நேராக நீண்டிருக்கும் விடத்தல் முட்கள் போருக்குப் புறப்பட்டுவிட்டன. வழமைபோலவே தமிழீழ வனங்களினதும் நிலங்களினதும் ஆழ, நீள, அகலங்களை அறியாமல் இரும்புப் பாதணிகளையும் தலையணிகளையும் அணிந்தபடி, அயலக மதியுரைகளால் துணிந்தபடி சண்டைக்கு வருகின்றது சிங்களம்.

சும்மா கிடந்த மன்னார் என்று சொல்லலாமோ? வளைந்து நெளிந்து நீண்டு செல்லும் போர் முன்னரங்கின் காப்பரண்களில் வாழும் 2 ஆம் லெப். மாலதி படையணியினரைச் சந்திப்பதற்காக தான் போகின்றபோது காடுகளிடையே பழைய கட்டடங்களின் அத்திவாரங்களை இடையிடையே காண்பதாகக் கேணல் யாழினி (விதுஷா) சொன்னார். காட்டு வழிகளில் தொடர்பேயில்லாமல் மா போன்ற வீட்டுப் பயன்பாட்டு மரங்கள் நிற்பதாகவும் காலாறுவதற்காக அத்திவாரத்தைக் கைகளால் தட்டியபோது அது சுட்ட செங்கற்களால் ஆக்கப்பட்டிருந்ததைக் கவனித்ததாகவும் கூறினார். மாநகரம் ஒன்று காடு மூடிக் கிடக்கின்றது. இதைச் சும்மா கிடந்த மன்னார் என்று சொல்லலாமோ?

***

மாந்தை துறையின் கடலின் அடியில் நங்கூரத்தைப் பாய்ச்சி விட்டுக்கடலின் மடியில் ஆடிக்கொண்டிருந்தது அரபிக் கப்பல் ஒன்று. குதிரைகளை இறக்கிவிட்டு யானைகளை ஏற்றிச் செல்வதற்காகக் காத்திருந்தது அது. மீண்டும் புறப்பட ஒரு திங்களாவது செல்லும். மாந்தையில் இறங்கி உலாவிக் கொண்டிருந்த அராபிய வணிகர்கள் அங்காடிகளில் யானைத் தந்தங்கள், அரிசிக் குவியல்கள் என்பவற்றுக்குச் சமமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த முத்துக்களை வாய்பிளந்து பார்த்தார்கள். இவற்றை வாங்குவதற்கு இன்னும் மூன்று கப்பல்களில் குதிரைகளையும் கம்பள விரிப்புக்களையும் கொண்டு வந்து கொட்டவேண்டும்.

மன்னாரின் கண்டமேடை அடித்தளத்தில் விளையும் முத்துக்களை ஒத்த அழகோடு சுவையான பழங்கள் பாலை மரங்களில் தொங்கிக்கிடந்தன. அவை வணிகர்களின் வாய்களில் நீரை ஊறவைத்தன. பன்னாட்டு வணிகர்களினாலும் உள்நாட்டு வணிகர்களினாலும் மாந்தைத் துறைக்குப் போகும் முதன்மைச் சாலையும் அங்காடித் தெருவும் நிறைந்திருந்தன. வலிமை மிக்க உயர்ந்த கட்டடங்களால் மாந்தையின் அழகு திகழ்ந்தது.

***
முத்துக்கள் விளையும் கடலினடியில் முத்தை விடவும் அதிகமாக உலகை ஈர்க்கின்ற ஒரு பொருள் இருப்பது தெரிந்ததும் கழுகின் கவனம் இங்கே குவிந்தது. மூன்றுதலைச் சிங்கமும் அதற்கே முயன்றது. மன்னாரை விலைபேச வாளேந்திய சிங்கம் புறப்பட்டது. வந்தவர்களை வழிமறிக்க விடுதலைப் புலிகளும் புறப்பட்டனர்.

***
கீர்த்தியின் கொம்பனி 2007 மார்ச்சில் அள்ளிக் கட்டிக்கொண்டு மன்னாருக்குப் போய் இறங்கியதும். 1999 இல் போர் முழக்கம் (ரணகோச) - 03,05 நடவடிக்கைகளை எதிர்கொண்டு முறியடித்த பட்டறிவைக் கொண்ட பழையவர்கள் சிலரும் மன்னாரின் நிறம் தெரியாத புதியவர்கள் பலருமாகப் போயிறங்கி, அகழிகளை வெட்ட மண்வெட்டிகளை ஓங்கி நிலத்தில் போட்டனர். பட்டுத் தெறித்தது மண் அல்ல. மண் வெட்டிதான். ஒன்றுமே இல்லாத சதுப்பு நிலத்தில் இன்று இஸ்ரேல் எழுந்து நிற்கின்றது. வெட்டப்படாத நிலம் வேண்டாம் என்று மன்னாரை விட்டுவிடமுடியவில்லை. வரிந்து கட்டிக்கொண்டு அகழிகளை வெட்டிமுடித்து, மரக்குற்றிகளைத் தூக்கிவரப் போயினர். காடு மூடிக்கிடந்த காலம் மூடிக்கிடந்த மாநகரத்தின் காலடியில் காப்பரண்கள் எழுந்தன.

ஆறு மாதங்களின் பின் முதற் சண்டை வந்தது. 2007.09.24 அன்று காலை கட்டுக்கரைக்குளக்கட்டோடு அமைக்கப்பட்டிருந்த லெப். அருமலரின் காப்பரணைச் சிங்களப் படையினர் தாக்கினர். அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய சண்டை மாலை ஐந்து மணிவரை நீடித்தது. பெரும் பலத்தோடு வந்து ஒற்றைக் காப்பரணைத் தாக்கிய சிங்களப் படைகளைக் காப்பரணில் நின்ற ஐவரும் எதிர்த்துக் கொண்டிருந்தனர்.

காயம். அதைக் கட்டு. சுடு. மறுபடி காயம். மீண்டும் கட்டு. தொடந்தும் சுடு. ஐவரின் உயிர்கள் வீழ்ந்த பின்னும் ஆண்மாக்கள் போராடின. அவர்களின் காப்பரண் எதிரிகளிடம் வீழவில்லை. அவர்கள் விரும்பியதும் அதைத்தான்.

***
கட்டுக்கரைக் குளக்கட்டுக் காப்பரணை இலக்கு வைத்து மறுபடியும் வந்த சிங்களப்படைகளை இம்முறை எதிர்கொண்டது கப்டன் கோதையின் அணியினர். முதற்சண்டையில் விதையாகிய தோழியரின் இரத்தமும் தசையும் ஊறி வீரம் ஊறிக்கிடந்த காப்பரண் இந்தமுறை கடுமையாக மோதியது.

சண்டை கடுமையாக நடந்தது. படைத்தளம் ஒன்றைத் தாக்கும் பலத்தோடும் வளத்தோடும் வந்து தனித்த ஒற்றைக் காப்பரணைத் தாக்கிக்கொண்டிருந்த சிங்களப் படையினருக்கு இலக்காகாமல், வெளியேறுவதற்கிருந்த ஒற்றை வழியால் வெளியேறித் தேடிவந்தவர்களை ஏமாற்றியிருக்கலாம். கோதை ஒப்பவில்லை.

'வரமாட்டேன். விடமாட்டேன்'என்று துணிவோடு நின்றவர்கள் வீழ்ந்த பின்னும் காப்பரண் வீழவில்லை. தம்மால் தாக்கப்பட்ட காப்பரணைத் தக்கவைக்க முடியாமல் சிறிலங்காவின் மேன்மை மிகு படையினர் திரும்பிச் சென்றனர்.

2007.09.24 அன்று கட்டுக்கரையில் தொடங்கிய சண்டை காலையில் பாலைக்குழி, மாலையில் பெரியபண்டிவிரிச்சான், இரவு திருக்கேதீச்சரம், மறுநாள் காலை முள்ளிக்குளம், மதியம் உயிலங்குளம் என்று தொடர்கின்றது. என்னதான் நடக்கின்றது மன்னாரில்? நாளாந்த ஏட்டின் தலைப்புச் செய்தியை நாள்தோறும் உருவாக்குகின்ற மன்னார் சண்டைகளின் பின்னணி என்ன?

சிங்கள அரசின் மேன்மை மிகு தரைப்படைகளின் பலம் மேலும் பெருக்கப்பட்டுள்ளதா? முன்பென்றால் மாதம் ஒரு சண்டை. இருபது போராளிகள் வீரச்சாவு, ஐம்பது படையினர் சாவு என்றொரு செய்தி மறுபடியும் நாளேட்டில் வர ஒரு மாதமாவது செல்லும். இப்போது நாளாந்தம் சண்டையென்றால்...?

'வீட்டுக்கு ஒராளைத் தந்திருக்கிறோம். கூட்டிக்கொண்டு போய் என்ன மோனே செய்யிறியள்? அவன் எந்த நாளும் வந்து அடிச்சுக்கொண்டிருக்கிறான். பார்த்துக்கொண்டிருக்கிறியள்"

கோவப்படாதீர்கள் ஐயா கொஞ்சம் பொறுங்கள். விடுதலைப் புலிகளின் போர்முனைப்பையோ, ஒருங்கிணைந்த பலத்தையோ, ராங்கிகளின் நகர்வால், பல்குழல் பீரங்கிகளின் செறிவான சூடுகளால் குலைத்துவிட எந்தச் சிங்கள மேலாண்மைச் சக்திகளாலும் முடியவில்லை. கால்களை, வாலை, தலையை ஓட்டினுள் இழுத்து வைத்துக்கொண்டு இருந்துவிட்டு, எல்லாம் முடிந்ததும் வெளியே தலையை நீட்டும் ஆமையைப் போலே, மண்ணின் மடியில் இருந்து எழும் புலிகள் மறுபடியும் உலாவுகின்றார்கள். இவர்களோடு நேரே மோதுவதைத் தவிர வேறு வழியில்லை.

மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட இனம், உலக வல்லரசுகள் பின்னால் நிற்கும் பலம் இரண்டும் கைகோர்க்க அதிகரித்த மனித, படைக்கல வளத்தோடு எங்களின் ஒற்றைக் காப்பரணை ஒரு படைத்தளமாகக் கருதியே தாக்குகின்றார்கள் ஐயா, சண்டையின் கணக்குப்படி பார்த்தால், வீட்டுக்கொருவராக எழுந்து வந்த உங்களின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இருபது சிங்களப் படையினருக்குச் சமம் ஐயா ஒற்றைக் காப்பரணைத் தாக்க நூறு பேர் அல்லவா வருகின்றார்கள்.

***
சண்டையில் நிற்கும் பிள்ளைகளைப் படம் எடுக்கப் போகின்றேன் என்று சாரதா கிளம்பி மன்னாருக்குப் போய்விட்டார். ஒவ்வொரு காப்பரணையும் படம்பிடித்து அவர்களோடு இருந்து அளவளாவி, உசாவி நிலமை அறிந்தபடி சாரதாவோடு ஒரு அணி நகர்ந்து கொண்டிருந்தது.

அடுத்த காப்பரணுக்குப் போவதற்கு இடையில் ஒரு வெட்டையை ஓடிக்கடக்க வேண்டும். மூச்சு வாங்க ஓடிக்கொண்டிருக்கும் போதே சற்றுத் தூரத்தே கனரகச் சுடுகலனின் தொடர் சூடு கேட்கத் தொடங்கியது. ஐயமில்லாமல் இது 50 கலிபரின் அடிதான். எங்களுடைய காப்பரண் ஒன்று சிங்களப் படைகளால் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஓட்டமாக ஓடிப்போய் அடுத்த காப்பரணில் புகுந்து இருந்தபோது காது கிழிந்தது. இந்தக் காப்பரணுக்கு ஏறத்தாழ ஐம்பது, அறுபது மீற்றர்கள் தொலைவில் தமது ஐம்பது கலிபர் சுடுகலனை நிலைப்படுத்திய சிங்களப் படையினர், சற்றுத் தள்ளியிருந்த முதன்மைச்சாலை ஒன்றில் சற்று முன்னதாக நீட்டியபடி அவர்களுக்குத் தொந்தரவாக இருந்த எங்களின் அடுத்த காப்பரணை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

அருகிலிருக்கும் எதிரிகளைத் தாக்கி, இதிலேயும் ஒரு காப்பரண் இருக்கின்றது என்று காட்டவேண்டிய தேவையில்லைத்தானே. எனினும் விழிப்பாகக் கண்காணிப்பில் நின்றார்கள். இவர்களைக் கண்டதும்

'வாங்கோ வாங்கோக்கா" என்றவாறு உள்ளே இழுத்தெடுத்தார்கள்.
ஒருவர் அடுப்பை மூட்டி, தண்ணீரை ஏற்றினார். மற்றவர் உணவுப் பொதிகளை அவிழ்த்தார்.
'ரீ குடியுங்கோ. சாப்பிடுங்கோக்கா..."
என்னடா இது. முன்னுக்குச் சண்டை நடக்கின்றது. இவர்களை நோக்கி எந்த நேரமும் அது திரும்பலாம்.
'நீங்கள் சாப்பிட்டிட்டிங்களோ?"
'இல்லையக்கா, காலையும் மதியமும் இப்ப உங்களுக்குப் பின்னாலைதான் வந்தது. நீங்கள் சாப்பிடுங்கோ. நாங்கள் பிறகு சாப்பிடுவம்"
'பரவாயில்லை. களைச்சுப் போனீங்கள் சாப்பிடுங்கோ"
சண்டையில் நிற்பவர்கள் என்று இவர்கள் அவர்களுக்கு விட்டுக்கொடுக்க, நீண்டதூரம் நடந்து வருகின்றார்கள் என்று அவர்கள்
இவர்களுக்கு விட்டுக்கொடுக்க...
அதற்குள் தேநீர் தயாரிக்கப்பட்டுவிட்டதால் அதைக் குடித்துவிட்டு வந்தவர்கள் புறப்பட,
'கவனமக்கா. பாத்துப் போங்கோ"
என்று நின்றவர்கள் வழியனுப்பினார்கள்

***
மன்னார் போரரங்கில் நிற்கும் 2 ஆம் லெப். மாலதி படையணியின் எல்லா உறுப்பினர்களுக்கும் சத்தான இடைநேர உண்டிகளை வாங்கிக் கொடுக்கும்படி தலைவர் அவர்கள் கேணல் யாழினி (விதுஷா) யிடம் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்தார்.

பங்கிடப்படும்போது வீணாக்கக்கூடாது. மன்னாரின் இந்தத் தொங்கலிலிருந்து அந்தத் தொங்கல் வரை நிற்பவர்களுக்கு எறிகணை வீச்சுக்களுக்குத் தவழ்ந்து, ஆறு கடந்து, சேறு கடந்து, குளம் கடந்து தேடுதல் அணியின் பின்னே போய் கொடுத்து முடியவே ஆறேழு நாளாகும். அதுவரை பழுதாகவும் கூடாது. அண்ணை நல்ல சாப்பாடு கொடுத்துவிட்டிருக்கிறார் என்று வயிறாற, மனம் நிறைய விரும்பிச் சாப்பிடக் கூடிய மாதிரியும் இருக்க வேண்டும். நிறைய யோசித்த யாழினி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு 'சோன்பப்டி" இந்திய இனிப்புப் பெட்டியை வாங்கிக்கொடுத்துவிட்டார். எல்லோர் கைகளுக்கும் போய்ச் சேர்ந்துவிட்டது.

முன்னரங்கைப் பார்வையிட்டவாறு போய்க்கொண்டிருந்த யாழினி அந்தக் காப்பரணில் காலாற அமர்ந்து கதைத்தார். ஒரு புதிய போராளி உசாவத் தொங்கினார்.

'அக்கா, அண்ணை ஏன் எங்களுக்குச் சாப்பாடு குடுத்துவிடவேணும். மூண்டு நேரம் சாப்பாடு தந்தாக் காணும்தானே. அதை இஞ்ச தருகினம்தானே..."
இவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சண்டைக்குப் புறப்படும்போது கொக்கோ பாற்கட்டிப் பொதிகளையும் (கண்டோஸ்) தந்து, பற்தூரிகையையும் தந்து விடுபவர்தான் தலைவர் அவர்கள் என்று இவர் விளக்கினார்.

'ஒரு ஆளுக்கு ஒரு பெட்டி ஏனக்கா? எங்கட வீட்டிலை நாங்க மூண்டு பிள்ளையள். வசதியான குடும்பந்தான். ஆனா ஒரு பெட்டி வாங்கிவந்து எல்லாருக்கும் தாறதே தவிர, ஒரு ஆளுக்கு ஒரு பெட்டி எண்டு ஒரு நாளுமில்லை. இந்தளவுக்கு வீட்டிலை கூட எங்களைக் கவனிக்கேல்லை. அண்ணையைப் பற்றி இப்பத்தான் விளங்குது" என்றார் அவர்.

***
அண்ணையை நாங்கள் சந்திக்கப் போறம். கேட்டுச் சொல்லுங்கோ"

யாழினியிடம் புதிய போராளிகள் சிலர் கேட்டனர்.
'நாலு பேர் வீரச்சாவடைஞ்சதுக்கு நேற்று நல்லா வாங்கிக் கட்டினனான். இப்ப அவரிட்டைக் கேக்கேலாது. கேட்டால் பேசிப்போடுவார்"
சட்டென அவர்கள் சொன்னார்கள்
'உங்களைத்தானே பேசினவர். எங்களை அவர் பேசமாட்டார். நாங்கள் கேக்கிறமெண்டு போய்க் கேளுங்கோ"

~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (தை-மாசி 2008)

Labels: , , , , ,

Wednesday, March 12, 2008

எல்லாளன் இராச்சியத்தில் பிரபாகரன் பிள்ளைகள்

சிறி. இந்திரகுமார்.



எல்லாளன் நடவடிக்கை

தமிழரின் வீர வரலாற்றின் ஒரு அத்தியாயம்.

சிங்களத்தின் இராணுவத் திமிர் அடக்க தலைவர் பிரபாகரன் அவர்கள் பெயர் சூட்டி நடாத்திய கரும்புலி நடவடிக்கை.

தாக்குதலின் தன்மையைப் போலவே நடவடிக்கைக்கான பெயர் சூட்டலும் சிங்களப் பேரினவாதிகளுக்கு பேரிடியாக விழுந்துவிட்டது.

இலங்கைத்தீவில் தமிழரது ஆட்சியின் சின்னமாக எல்லாள மன்னனைச் சிங்களப் பேரினவாதம் அடையாளப்படுத்துகின்றது. எல்லாளனை வென்ற துட்டகைமுனுவைப் பேரினவாதிகளின் வேத நூலான மகாவம்சம் போற்றுகின்றது.

இந்தப் போற்றுதல் எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வென்ற இராணுவச் செயலுக்கானது மட்டுமல்ல தமிழரது ஆட்சியை இல்லாதொழித்த அரசியல் செயலுக்கானதுமாகும்.

சிங்களப் பேரினவாதிகளின் காவிய நாயகனாகத் துட்டகைமுனு உருவகிக்கப்படுவது அவர்களின் இனவாதப் பண்பாடாகும்.

இந்தப் பண்பாட்டின் அடிப்படையிலேயே@ சிங்களத்தின் ஆட்சிபீடம் ஏறும் ஒவ்வொரு அரசியல் தலைவரும் தன்னைத் துட்டகைமுனுவின் வாரிசாகவே உருவகப்படுத்திக் கொள்கின்றார்.

துட்டகைமுனுவைக் காவிய நாயகனாகவும்- அனுராதபுரத்தை இனவாதத்தின் தொட்டிலாகவும் வழிபட்டு தமிழினத்துக்கு எதிரான இன அழிப்பை நடாத்தி வருகின்றார்கள்.

தமிழருக்கு எதிராக நடந்த ஒவ்வொரு இன அழிப்பு நடவடிக்கையிலும் தமிழரின் இரத்தத்தால் தோய்ந்து கிடந்திருக்கிறது அனுராதபுரம்.

அத்துடன் தமிழரின் குடிஅழித்துக்@ கொடுமை புரியும் சிங்கள வான்கழுகுகளின் படைவீடாகவும் அனுராதபுரம் காட்சியளித்தது.

சிங்களத்தின் இராணுவத் திமிர் அடக்க தலைவர் பிரபாகரன் அனுராதபுரம் வான்படைத்தளத்தைக் குறியிலக்காகத் தேர்ந்தெடுத்தார். பேரினவாதிகளின் அரசியல் திமிர் உடைக்க அதற்கு எல்லாளன் நடவடிக்கை என்று பெயர் சூட்டி@ சிங்கள இனவாத வரலாற்றிற்குத் தகுந்த வரலாற்றுப் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தித் தமிழரின் வீரத்தை உலகிற்குப் பறைசாற்ற இருபத்தியொரு கரும்புலி வீரர்களைத் தலைவர் பிரபாகரன் தேர்ந்தெடுக்க தலைவரின் எண்ணத்திற்கு அவர்கள் செயல்வடிவம் கொடுத்தார்கள்.

அந்த அதிகாலையில்@ இருள் போர்த்துக்கிடந்த அனுராதபுரம் வான்படைத்தளம் அதிர்ந்தது.

சிங்களத்தின் வான் கழுகுகளைத் தீநாக்குகள் விழுங்கிய செய்தி சிங்கள தேசத்தையே திகைப்பிற்குள்ளாக்கியது, உலகம் அதிசயித்தது - தமிழினம் புளகாங்கிதமடைந்தது.

இந்தச் சாதனை நாயகர்களான எங்கள் கரும்புலிக் கண்மணிகளின் வீரத்தையும் உயிர் ஈகத்தையும் நினைத்துத் தமிழினம் மெய்யுருகிப்போனது.

தலைவர் பிரபாகரனின் நெஞ்சறையில் வாழும் அந்த நெருப்புக் குழந்தைகளின் கதைகள் ஒவ்வொன்றுமே மெய்சிலிர்க்க வைப்பவை - எங்கள் உள்ளக் கிடக்கை களில் தீ மூட்டுபவை.

அத்தகைய கதைகளில் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம். இந்தக் கதைகள் அந்தக் கண்மணிகளை எங்கள் மக்களின் நெஞ்சறை களிலும் உயிர்வாழச் செய்விக்கும்;.
இனி அவர்களது கதைகளைப் படியுங்கள்! அறியுங்கள்....



தோழமை..


ஆனையிறவு

என்றுமே வீழ்த்த முடியாது என்ற திமிரோடு எதிரி குந்தியிருந்த படைத்தளம்.
குடிபறிக்கும் கொடியவரின் சாக்காலம் எப்போது என மக்கள் ஏங்கி நின்ற
நாட்கள்.

வீழ்த்தியே தீருவோம்@ என்ற சபதம் ஒவ்வொரு புலி வீரனின் உள்ளத்திலும் உறைந்திருந்த காலம்.

ஒரு சுட்டெரிக்கும் பகற்பொழுது@ சண்டைக்கான ஆணையை வழங்கியிருந்தார் தலைவர்.

பரந்தன் முன்னரங்குகளை உடைத்து முன்னேறினர் புலி வீரர்....

எல்லோர் மனங்களிலும் நம்பிக்கை@ இம்முறை தப்பவே மாட்டான் எதிரி.

ஆனையிறவைப் பாதுகாக்கச் சுற்றி வர நிறுவியிருந்த படை முகாம்கள் ஒவ்வொன்றாய் வீழ@ ஆனையிறவின் இறுதிக் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

ஆட்டம் கண்ட படைத்தளத்தை@ அடியோடு பொறித்துக் கொட்டத் தலைவர் வகுத்த வியூகத்துடன் புலிவீரர்கள் தரையிறங்கினர் குடாரப்பில்.

பெருங்கடலைக் கடந்து@ விரிந்து கிடந்த நீரேரியைத்தாண்டி யாழ் சாலையில் நிலையெடுக்க வேண்டிய நகர்வு அது.

முன்னேறிய படைத்தொகுதியில்@ அனுராதபுரம் தாக்குதல் கரும்புலிகளின் தளபதி@ எங்கள் வெற்றி நாயகன் இளங்கோவும் ஒருவன்.

கரும்புலி வீரனாக அல்ல@ கவச எதிர்ப்பு வீரனாக.

கழுத்தளவு நீர் பாதங்களை உள்ளிழுத்துப் புதைக்கும் சகதி சோர்ந்து போகச் செய்யும் சிரமமான பயணம்.

துப்பாக்கி... அதற்கான வெடிமருந்துகள். என வழமையை விட அதிகமாகவே உடலை அழுத்தும் சுமை. இத்தனை சுமைகளையும் சுமந்த படி முன்னேறிக் கொண்டிருந்த அணிகளோடு இளங்கோவும் நகர்ந்து கொண்டிருக்க@ எதிரி ஏவத் தொடங்கினான்@ சரமாரியாக எறிகணைகளை.

கும்... கும்... என வீழ்ந்து வெடிக்கும்.... எறிகணைகளிலிருந்து காப்பெடுக்க எந்த வாய்ப்பும் இல்லாத சூழல்.

அதோ... வீழ்ந்து வெடித்த ஒரு எறிகணையின் சிதறல்... ஒரு பெண் போராளியின் உடலைக் கிழித்து வெளியேறக் கொப்பளித்தது குருதி.

தாமதிக்கவோ யாரையும் தாமதப்படுத்தவோ முடியாத களச்சூழல்.

முடிவெடுத்தவள் கடிப்பதற்காக குப்பியை எடுக்க@ பாய்ந்து தடுத்தான் இளங்கோ.
அந்தக் கழுத்தளவு நீருக்குள்ளும் அவளைத் தூக்கித் தோளில் போட்டவன் 'அவசரப்படாத... உன்னை எப்படியும் காப்பாற்றுவன்..." என்ற படி ஓடத் தொடங்கினான்....

கரை கால்களுக்குக் கிட்டாமலும்... கண்களுக்கு எட்டாமலும்... தொலைவில் கிடந்தது.

இளங்கோ அந்தப் போராளியின் உயிரைக் காப்பாற்றத் துடித்தான் எப்படியும் காப்பாற்றியே தீர வேண்டும் வெறிகொண்டவனாய் ஓடினான்.

மெல்ல... மெல்ல... கரை கண்களுக்கும், கால்களுக்கும் வசப்பட்டுக் கொண்டிருந்தது.
மூச்சிரைக்க... மூச்சிரைக்கக் கரையேறியவன் அவளை நிலத்தில் இருத்தி@ 'கரைக்கு வந்திட்டம்... கரைக்கு வந்திட்டம்..." என மகிழ்ச்சியோடு உரத்துக் கத்தியவனின் கண்களுக்கு... அப்போது தான் தெரிந்தது அவளது உயிர் அவளைவிட்டு பிரிந்திருந்தது.... .



[தலைவர் பிரபாகரனோடு இளங்கோவும் வீமனும்]


பகிடி

திருக்கோணமலையிலிருந்து சிங்களவர்கள் அடித்து விரட்ட வன்னிக்கு வந்திருந்தது வீமனின் குடும்பம்.

சின்ன வயதிலேயே ஊரைப் பறித்து தெருவில் விட்டனர்@ சிங்களக் காடையர்கள்.

'இனியும் பொறுக்கேலாது" முடிவெடுத்தவன்@ வீமனாக இயக்கத்தில் இணைந்து கொண்டான்.

சண்டை பிடிக்க இயக்கத்திற்கு வந்தவனின் தோற்றத்தைப் பார்த்து@ படைத்துறைப் பள்ளிக்கு அனுப்பியது இயக்கம்.

ஆளும் வளர்ந்து@ அறிவும் வளரத் தலைவரின் பாதுகாப்புப் பிரிவில்@ அவருடன் நீண்டகாலம் நிழல் போல@ அவன் நடந்தான்.

வீமன் நம்பிக்கைக்குரிய போராளி@

தலைவர் வீமனிடம்@ எந்தப் பொறுப்புக்களையும் நம்பி ஒப்படைப்பார்.

அப்படித் தலைவர் நம்பி ஒப்படைத்த பொறுப்புக்களில் ஒன்று@ தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் பாதுகாப்பு.

வெளிநாட்டிலிருந்து பாலா அண்ணா தாயகம் வரும் வேளைகள் எல்லாம்@ வீமனே அவரின் பாதுகாப்புக்குச் செல்வான்.

கடைசியாக 2005 இல் பாலா அண்ணன் தாயகம் வந்த போதும் வீமனே சென்று வந்தான்.

தேசத்தின் குரல் சென்ற இடமெல்லாம் கூடவே இந்த வீரமகனும் சென்றான்.

அந்த வேளைகளில் பாலா அண்ணர் வீமனோடு கதைத்த பம்பல் கதைகளைப் பயிற்சியின்போது பெடியளுக்குச் சொல்லிச் சொல்லி சிரிப்பான்.

வீமன் கரும்புலியாகி அனுராதபுரம் தாக்குதலுக்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள்.

ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றில்@

மாவீரர் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்திக் கொண்டு வந்தவன்@ பாலா அண்ணைக்கும் மலரஞ்சலி செலுத்தினான்.

மண்டபத்திற்கு வெளியே வந்தவன் பெடியளிடம் சொன்னானாம்... 'கிழவர் எனக்குக் கலியாணம் பேசிப்போட்டுப் போய்ச் சேர்ந்திட்டார்.... இப்ப நானும் அவரிட்டப் போகப் போறன்... அங்க போய் கிழவரிட்ட கேட்கவேணும்.... என்ர கலியாணப் பேச்சு என்ன மாதிரி எண்டு" என்றானாம் சிரிப்போடு....

வெற்றிக்கொடி

அது 1994 ஆம் ஆண்டு.

சந்திரிகா சமாதான வேடம் களைந்து@ சண்டைக்காறியாய் சன்னதம் கொண்டிருந்த நாட்கள்....

கரைமடியில் அலைகள் தாலாட்டுப்பாடும் நாகர்கோவில் கிராமம்.

போருக்குள் நாளாந்தம் கழிந்து கொண்டிருந்தது.

தென்னங்கீற்றுத் தென்றலின்; அசைவிற்கு அழகாக ஆடிக்கொண்டிருந்த ஒரு பொழுது...

திடீரென வானத்தில் தோன்றின சிங்களத்தின் உயிர் குடிக்கும் கழுகுகள்....

அசுரவேகம் எடுத்து... தரையில் முட்டுவது போல் குத்திப் பதிந்து அள்ளிவீசிவிட்டுப் போயின குண்டுகளை.

நாகர்கோவில் மகாவித்தியாலயம் குருதியில் குளித்து உயிர்களைப் பலி கொடுத்து ஐயோ... எனத் தவித்து நின்றது....

காலையில் புத்தகப்பையும்...

பளீரென்ற வெள்ளைச் சீருடையும்...

அம்மா... போட்டு வாறம்...

கையசைத்துச் சொல்லிவிட்டு வந்த@ முப்பது பள்ளிச் சிறார்கள் பலியாக்கப்பட்டுக் கிடந்தார்கள் பாதகர்களின் கோரத்தில்..

அழுது துடித்தபடி அன்று ஓடி விழுந்தான்

அம்மாவின் மடியில்@ சின்னப்பெடியன் கலைராஜ்.

தன் கண்முன்னே தன் இனிய நண்பர்கள்... நண்பிகள் தான் நேசித்த பள்ளி
...எல்லாவற்றையும் ஒரு நொடியில் இழந்து.

மறக்க முடியாத நாட்களை மனதில்

சுமந்தபடி திரிந்தவன் ஒருநாள் புலியாக மாறினான். இப்போது அவன் பெயர் இளம்புலி.

காலங்கள் ஓடின இளமையிற் கல்வி சிலையில் எழுத்தாய்... பாடங்களுடன் அந்தக்கொடூரமும் அவன் மனதில் பதிந்திருந்தது....

இப்போது காலம் 2007.

மகிந்த ராஜபக்சவின் போர் வெறி

நாட்களில் ஒன்று...

அனுராதபுரத்தாக்குதலுக்கு அணிவகுத்து நின்ற கரும்புலிகளில் ஒருவனாக இளம்புலியும்.

அனுராதபுரம் வான் படைத்தளத்திற்குள் பகைவரின் வானூர்திகளை அழிப்பதற்கு புறப்படுவற்கு முன் ஆசையோடு தான் நேசித்த தலைவரிடமிருந்து இறுதிப் பிரியாவிடை பெறும் பொழுது.

தயங்கித்... தயங்கி வந்தவன் தலைவரிடம் கேட்டான்...

'நான் சண்டைக்குப் போகேக்க... எங்கட புலிக்கொடியக் கொண்டுபோக அனுமதிக்க வேணும்...

சண்டை முடிய அவங்கட முற்றத்தில் எங்கட கொடிய நான் ஏற்ற வேணும்...."

தலைவர் அனுமதி வழங்க மகிழ்ச்சியோடு புறப்பட்டவனை தோழர்கள் எங்க புறப்பட்டாச்சு... என்று கேட்க இளம்புலி சொன்னானாம்.

'அவலத்தை தந்தவனுக்கு@ அதைத் திருப்பிக் கொடுக்கப் போறன்" என்று....

மகிழ்ச்சி

நவாலிக்கிராமம்

அழுது முடியாமல் துடித்துக் கிடந்தது...

யாரை... யார் ஆற்றுவது எனத் தெரியாது ஆறுதலுக்காய் ஏங்கிநின்றது.

காலம் 1995

ரத்வத்தையும்... சந்திரிகாவும் யாழ்ப்பாணத்தை பிடிக்கவெனக் கூறி தமிழர் உயிர் பறித்துத் திரிந்த நாட்கள்.

ஒரு காலைப் பொழுதில் ஊரையெல்லாம் பறிகொடுத்துவிட்டு கர்த்தரே தஞ்சம் என்று நம்பி சென்பீற்றஸ் தேவாலயத்தில் குந்தியிருந்தனர் மக்கள்.

எறிகணைகள் ஒருபுறம் வெடித்துக் கொண்டிருக்க மக்களை கொல்வதற்கென்றே குண்டுகளை சுமந்து வந்தன விமானங்கள்.

ஒரே ஒரு நொடிப்பொழுது.

புக்காரா குண்டுமழை பொழிந்து விட்டுப் போனது.

ஒன்றல்ல... இரண்டல்ல நூற்றுக்கணக்கான உயிர்கள்.

சதைக்குவியலாய்... கற்குவியலுக்குள் சிதறிக்கிடந்தன. தாயை இழந்த பிள்ளை...

பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்...

பெற்றோரை இழந்து அநாதையாய் ஆறுதல் கரம் தேடி நின்ற சிறுசுகள்.

யாரை.... யார் பறிகொடுத்தோம் என்று ஏங்க எவருமே இல்லாது எல்லோருமே அழிந்த குடும்பம்....

நெஞ்சு பிழந்து கண்ணீர் வடியும் நேரம் அது.

நவாலி அட்டூழியத்தை கண்களால் கண்டு... மனதால் வெதும்பி நின்றான் அப்போது க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த தயாசீலன்.

அழுது... அழுது ஓயாத விழிகளோடு புதைப்பவரை... புதைத்துவிட்டும் எரிப்பவரை எரித்துவிட்டும் மனதுக்குள் எரியும் உணவு;க்கு வழி தேடியவன் போராளியாக மாறினான்.

இப்போது அவன் போராளி மதிவாணண்.

அவனொரு கனரக சுடுகலன் பயிற்சி ஆசிரியன்.

பறந்து வரும் சிங்கங்களை

வேட்டையாட கற்றுக் கொடுக்கும் ஆசான்.

சுடுகலன் குறித்து போராளிகளுக்கு கற்றுக் கொடுக்கும் போதெல்லாம் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தத்தவறமாட்டான்....

'நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு விமானத்தைத் தானும் சுட்டுவீழ்த்த வேண்டும்."

கற்றுக் கொடுத்தவனுக்கு விமானத்தை வீழ்த்தும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

ஏங்கிக் கிடந்தவனுக்கு கிடைத்தது அரிய வாய்ப்பு.

மதிவாணன் மாஸ்ரர் எல்லாளன் நடவடிக்கைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தன் கண்முன்னே தன்மக்களை

பலியெடுத்த பகைவனின் வானூர்திகளை அழிக்கும் சந்தர்ப்பம்.

மதிவாணனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

தன் ஏக்கத்துக்கு மற்றவர்களிடம் ஏன் பரிகாரம் தேடவேண்டும்.

தன் சுடுகலனாலேயே கொத்துக்... கொத்தாய் பகை வானூர்திகளை அழிக்கும் வாய்புக் கிடைத்தபின் எதற்குக் கவலை?

அளவில்லாத மகிழ்ச்சியோடு@ புறப்பட்டுப் போனானாம் எங்கள் கரும்புலி லெப்டினன் கேணல் மதிவாணன்.

அவனுக்குக் கொத்துக் கொத்தாய்க் கிடைத்தன சிங்கள வானூர்திகள்.

ஓர்மம்

அனுராதபுரம்

வந்து... வந்து... எங்கள்...மண்ணில்

குண்டுகளைக்... கொட்டிவிட்டுப் போகும்

சிங்களத்து வானோடிகளின் பயிற்சித்தளம்.

வன்னியின் கண்களுக்கு எட்டாத தொலைவிலிருந்ததேயொழிய எங்கள் தலைவனின் விழிவீச்சுக்குள் அடங்காது இருக்கவில்லை.

சிறகுகளுக்கு வலிமை ஏற்றிவிட்டு வானேறிவந்து குண்டுகளை வீசிவிட்டுப் போகும் பொழுதுகள் சபிக்கப்பட்ட பொழுதுகளாய் ஒவ்வொரு நாளும் களியும்.

செல்லுங்கள்...

வீழ்த்துங்கள்...

வெல்லுங்கள்... என்ற தலைவனின் சொல்லுக்கு உயிர் கொடுக்காதவரை எங்கள் உயிர்களை பறித்தபடி இருப்பான் எதிரி.

தாக்குதல் தயாரானது......

அனுராதபுர வான் தளத்துக்குள்ளேயே சென்று@ தரித்து நிற்கும் வானூர்திகளை

அழிக்கும் திட்டம்.

நிறைவேற்றப்போவது கரும்புலிகள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் தர்மினியும் இடம்பிடித்திருந்தாள்.

திட்டம் நூறு வீதமும் நிறைவேற கடுமையான பயிற்சி.

சுட்டெரிக்கும் வெயிலிலும்

உடல் நடுங்கும் குளிரிலும்

நித்திரைக்காக ஏங்கும் இரவுகள்... நாட்களை கரைத்து உடல்களை உரமேற்றிக்கொண்டிருந்தனர் அவர்கள்.

நடப்பதாக இருந்தாலும் நீண்ட தூரம்...

முன்னேறுவதாக இருந்தாலும் அதிக தூரம்...

ஓடித்தொடுவதாக இருந்தாலும் மிக நீண்ட தொலைவு...

வியர்க்க... வியர்க்க... கரும்புலிகளை புடம் போட்டுக்கொண்டிருந்தார் பயிற்சி ஆசிரியர்.

கடினப் பயிற்சி... இலகுவான சண்டை...

தலைவரின் சொல்லுக்குச் செயல்வடிவம் கொடுக்க உறுதி கொண்டு நின்றனர் கரும்புலிகள்...

ஆனாலும் எவ்வளவு தூரம் என்றுதான் ஓடுவது?

கருணை காட்டாத வாத்தியின் மேல் கோவம்... கோவமாய் வரும் தர்மினிக்கு.

பயிற்சியின்போது எல்லோரும் முன்னுக்கு ஓடிவர... தர்மினி பின்னுக்கு வருவாள்.

எவ்வளவுதான் நக்கல் அடித்தாலும், எவ்வளவுதான் ஏசினாலும், எவ்வளவுதான் கண்டித்தாலும் அவள் கடைசி ஆளாகத்தான் ஓடிவருவாள்.

ஒரு நாள்... தர்மினியை அழைத்த இளங்கோ சொன்னான்.

'குறிப்பிட்ட இந்த இலக்கை... நீ முப்பது வினாடிகளுக்குள் ஓடி முடிக்காவிட்டால் உன்னுடைய கரும்புலி வாழ்க்கை இதோடு முடியப்போகிறது..."

கண்டிப்பாகவும்... பம்பலாகவும்... சொல்லிவிட்டு நின்றவன்முன் முப்பது வினாடிகள் முடிவதற்கு முன்னரே ஓடிவந்து மூச்சிரைக்க நின்றாள் தர்மினி....

இளங்கோ அண்ணா.... பம்பலாகத்தானும் இப்படிச் சொல்லாதேங்கோ.....

(கதைகள் தொடரும்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (தை-மாசி 2008)


Labels: , , , , ,


Get your own calendar

Links