« Home | புலிகளின் பலம் மக்கள் சக்தியே » | ரணில் - மகிந்த கூட்டு ஒப்பந்தம் » | ஈழத்தமிழரின் நேச சக்திகள் » | ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோ வருது கிடைத்தது எப்படி? » | இந்தியாவின் நோக்கம் என்ன? » | மகிந்தவின் முகங்கள் » | மறுபக்கத்தின் நேர்முக தரிசனம் » | கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? » | திலீபனின் இறுதி உரையிலிருந்து... » | கேணல் சங்கர் »

பேச்சுவார்த்தையும் பேய்க்காட்டலும்

தட்டுங்கள் திறக்கப்படுமென்றது சர்வதேசம் கையில் தட்டு ஏந்தும் நிலையில் தமிழர்கள்
-சி.இதயச்சந்திரன்-

திரும்பவும் ஒரு நாடகம் அரங்கேறப் போகின்றது. இலங்கை இராணுவம் புலிகளிடம் படுதோல்வியைத் தழுவியவுடன், கிடப்பில் போடப்பட்ட 'சமாதானத்திற்கான பேச்சுவார்த்தை என்கிற நாடகப் பிரதியை கையில் தூக்கியபடி நடிகர்களும், இயக்குநர்களும் பத்தாவது தடவையாக மேடையிலேற வருகிறார்கள்.

மேற்குலக சமூகம் அதன் ஆசியப் பிரதிநிதிகளும் ஓடோடி வந்து தமிழ் மக்கள் மீதுள்ள கரிசனையை வெளிப்படுத்துவார்கள். உலகெங்கும் தடை போடப்பட்டாகி விட்டது. சொத்துக்கள் முடக்கப்பட்டாகி விட்டது. இனிப்புதிய உபாயங்களோடு பொறிவைக்க விரும்புகிறார்கள்.

ஒப்பந்தக் கோட்டைத் தாண்டி சம்பூருக்குள் நுழைந்தாலும், 61, பிள்ளைகள் குண்டு வீசி அழிந்தாலும், 17 தொண்டர்கள் சுடப்பட்டாலும், ஏ-9 பாதையை மூடி யாழ். மக்களை பட்டினியின் விளிம்பு நிலைக்குத் தள்ளினாலும், இடம்பெயர்ந்த 40 ஆயிரம் மூதூர் தமிழ் மக்கள் வாகரையில் தஞ்மடைந்து வாழ்நிலை ஆதாரங்களைத் தொலைத்தாலும், தினந்தினம் மிருகங்கள் சுடப்படுவது போல் வட கிழக்கில் தமிழர்கள் அரச படைகளால் கொன்று குவிக்கப்பட்டாலும், கல்லுளி மங்கர்களாக இருந்த சர்வதேச சமூகம் 200 படைகள் இறந்ததும் கடுகதியில் ஓடோடி வருகிறது ஏன்?

எமது விவகாரத்தில், சர்வதே சமூகமென்று தம்மைத்தாமே அழைக்கும் மேற்குலகிற்கும், சில ஆசிய நாடுகளிற்கும் இருக்கும் சுத்தமான அக்கறை என்ன வென்பதை முதலில் தெளிவாக்க வேண்டும்.

பண்டா-செல்வா காலந்தொட்டு இற்றைவரை இடம்பெற்ற ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தைகளும் ஒரு விடயத்தை மட்டும் இந்த சர்வதேச சமூகத்திற்கு உணர்த்தியிருக்கும்.

அதாவது கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்கள் வெளிப்படுத்தும் செய்தி என்ன? இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றிற்கு அரசியலமைப்பில் அடிப்படை மாற்றங்களை அரசு செய்யாது. ஒருவர் அதைச் செய்ய முனைவது போல் நடிக்க, மற்றவர் அதை முழுமூச்சாக எதிர்ப்பார். உங்களுக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்குங்களென்று வெளி அழுத்தங்கள் சுமத்தப்படுகையில், திசை திருப்பும் நோக்கோடு தேர்தலொன்றை நடத்துவார்கள்.

தேர்தல் முடிந்தபின், வட்டமேசை சதுர மேசையொன்றை தமிழ் கட்சிகள் தவிர்ந்த (பெரும்பான்மையான) ஏனையோரை அழைத்து பொதுக் கருத்தினை உருவாக்கப் போவதாக பாவனை காட்டுவார்கள்.

இதனிடையே இராணுவ வல்லாண்மையை அதிகரிக்கும் நிகழ்வுகளும் ஒருபுறம் முன்னெடுக்கப்படும்.

இவையெல்லாவற்றையும் சர்வதேச சமூகம் ஏன் புரிந்து கொள்ளவில்லையென்று கவலைப்படுவது முட்டாள்தனமாகும்.

அண்மையில் நடைபெற்ற கிளாலிச் சமரில் உயிரிழந்த படையினரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள ஜனாதிபதி, இராணுவத்தினரின் வீடுகளுக்குச் சென்றதாக தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது.

இதைப் பார்த்த ஒரு பெண் என்னிடம் கூறிய விடயம் மிகவும் வித்தியாசமாகவிருந்தது. அதாவது மிகவும் ஏழ்மை நிலையில் வாழும், அவர்களின் குடும்ப உறவுகளின் ஏக்கங் கலந்த முகங்களும், பாமரத்தனமான தோற்றமும் அப் பெண்ணை கலங்க வைத்து விட்டதாம். தமது மத மேலாதிக்க சிந்தனைக்கு அப்பாவி கிராமவாசிகளைப் பலியாக்கிய அரசின் மீது அவரின் வெறுப்பு மேலோங்கியிருந்தது.

இவ்வளவு கொடூர வாழ்க்கையினுள்ளும் மனிதத்தை இழக்காத அத் தமிழ் பெண்ணையிட்டு அகமகிழ்வு கொண்டேன்.

விடுதலையை வேண்டி நிற்கும் மனிதர்கள், மானுடதர்மத்தை இழக்காமல் இருப்பது போற்றுதற்குரியது.

இத் தமிழ்பேசும் மனிதர்களின் வாழ்வுரிமையை, நிர்ணயம் செய்யும் பொறுப்பினை, ஸ்ரீலங்கா அரசிற்கு, இறையாண்மை என்ற பெயரில் உரித்துடைமையாக்கியது யாரென்ற கேள்விக்கு சர்வதேசம் பதில்கூற முடியாது.

பிறப்புரிமையென்பது கொடுத்து வாங்கும் வியாபாரப் பொருளல்ல. இவ்வுரிமையை உலக மயமாக்கலின் ஒரு கூறாகக் கருதுவதே சர்வதேச சமூகம் விடும் பாரிய தவறாகும்.

எத்தனையோ நாடுகளின் விவகாரங்களில் தலையீடுகளை மேற்கொள்ளும் சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு புரியாத புதிரல்ல.

இவர்களின் பிராந்திய நலனை உள்ளடக்கிய நோக்கம் இதுதான். அதாவது நாடு பிளைவடையக் கூடாது. பிளவடையாமல் தீர்வென்பது சாத்தியமாக வேண்டுமாயின், விடாக் கண்டனாக திகழும் ஸ்ரீலங்கா அரசு வழங்கும் தீர்வொன்றினை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்த சூழல் உருவாக வேண்டும்.

கொடுப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின், பலவீனமான நிலையில் தமிழ் மக்களும் அதன் போராட்டத் தலைமையும் இருக்க வேண்டும்.

போராட்ட சக்திகளை பலவீனமாக்கும் நிகழ்ச்சி நிரலை சர்வதேசமும், தமிழ் மக்களின் மனோநிலையை சிதைக்கும் காரியத்தை ஸ்ரீலங்கா அரசும் மேற்கொள்வதை அவதானித்தால், இவர்கள் இருவரினது நோக்கங்களையும் உணரலாம்.

வடக்கில் இராணுவ முகாம் வாசல்களில் உணவிற்காக கையேந்தும் நிலைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். ஏனைய தமிழ் மாவட்டங்களிலிருந்து தபால் பொதியினூடாக 5 கிலோ நிறையளவு உணவுப் பொருட்களை யாழ். மாவட்டத்திலுள்ள தமது நண்பர்களிற்கும் உறவினர்களிற்கும் இரக்க சிந்தனையுள்ள மக்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான இழிநிலையை, கைகட்டி, வேடிக்கை பார்க்கும் சர்வதே சமூகம் எம்மக்கள் மீது கருணைப் பார்வையை திருப்புமென எதிர்பார்ப்பது தவறானதாகும்.

சர்வதேச, சமூகமானது ஸ்ரீலங்கா அரசின் மீது தமது அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்து விட்டதென சிலர் திருப்தியடைகிறார்கள். எவ்விதமான நெருக்குதலும் ஏ-9 பாதையைத் திறக்காது. படுகொலைகளை நிறுத்தாது.

அண்மையில் அமெரிக்க தூதுவரொருவர் இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்ற, புலிகள் யுத்தத்தை தொடுத்தால், சகல உதவிகளையும் அரசிற்கு வழங்கப்போவதாக அறிவித்தது ஞாபகமிருக்கும்.

ஆகமொத்தம், புலிகளையும் தமிழ் மக்களையும் பலவீனமாக்கி, ஏதோவொரு தீர்வினைத் திணிக்கவே இவர்கள் விரும்புகிறார்கள். புலிகள் பலமாகவிருப்பது இவர்களின் நலனுக்கு பெருந்தடையாக இருக்கிறது.

தமிழ் மக்களின் நியாயபூர்வ அரசியல் அபிலாஷைகளை பெற்றுக்கொடுப்பதிலிருக்கும் அக்கறையை விட, போராட்ட சக்தி முனையை மழுங்கச் செய்வதிலேயே சர்வதேச சமூகத்தின் இரகசிய வேலைத்திட்டம் முனைப்புற்றுள்ளது.

சம்பூர் பின்னகர்வானது தந்திரச் சமரின் உத்தியென்பதையும் வாகரை பனிச்சங்கேணியில் விழுந்த பலத்த அடி, இவர்களுக்கு புரிய வைத்திருக்கும், சாண் ஏற முழம் சறுக்கும் நிகழ்வுகள் சர்வதேசத்தை சோர்வடையச் செய்து 15 ஆயிரம் வெளிநாட்டுப் படைகளை களமிறக்கும் அடுத்த கட்ட நகர்வுகளை செயற்படுத்தத் தூண்டலாம். அதற்கான நிகழ்ச்சி நிரலை அவர்கள் இப்போதே தயார்படுத்தி விட்டார்கள்.

வடகொரியாவில் வெடித்த அணுகுண்டு அதிர்ச்சியிலிருந்து மீள முன், அகாசி அவர்கள் இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொள்கின்றார். தொடர்ந்து நோர்வேயின் சிறப்புத் தூதரும், அமெரிக்கத் தூதரும் வருகிறார்கள்.

கடந்த 20 ஆம் திகதி வியாழக் கிரகம் மாறமுன், ஜனாதிபதி மஹிந்த போர் தொடுத்தால், வெற்றி நிச்யமென்று யாரோ ஒரு முக்காலமுமறிந்த சோதிடர் கூறியதை விழுங்கி, 200 படை வீரர்களை காவுகொடுத்து அதிர்ச்சியிலுள்ளவர், தனது வேதாள முயற்சியை மறுபடியும் தொடரலாம்.

பேசிக்கொண்டே சண்டை புரிவோமென்று இணைக்க ஜனாதிபதி மஹிந்த விரும்பினாலும், குத்துச்சண்டை (டீழஒiபெ) மத்தியஸ்தர்களான சர்வ வியாபக சமூகம், விளையாட்டை முடிவிற்கு கொண்டுவர விரும்புகிறது. அடுத்த ~ரவுண்டில்| மஹிந்த ~நொக் அவுட்| (முழெஉம ழரவ) ஆவார் என்பதை உணர்ந்து அதை நிறுத்த ஓடோடி வருகிறார்கள்.

ஜனாதிபதி மஹிந்தவும் எதிர்க்கட்சித்தலைவர் ரணிலும் பொது இணக்கப்பாட்டிற்கு வருவது போன்று, இந்தியாவும், அமெரிக்க தலைமையிலான மேற்குலகமும் இணைந்து செயற்படும் சாத்தியப்பாடுகள் அதிகரிக்கின்றன.

அமெரிக்கா தலையிடுவதால் பாகிஸ்தான் தானாகவே ஒதுங்கிக்கொள்ளுமென நினைக்கும். இந்தியா, தனது நேர்முக தரிசனத்தினை எந்தவொரு வகையிலும், இதனூடாக ஸ்தாபிக்க முயற்சிக்கலாம்.

வெளிச்சக்திகளின் நகர்வுகள் இவ்வாறிருக்க ஸ்ரீலங்காவின் உயர் நீதிமன்றம், தற்காலிக வடக்கு கிழக்கு இணைப்பு சட்டத்திற்கு முரணாக இருப்பதாக அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பினை மாற்றாமல், அடிமட்ட நிர்வாகப் பரவலாக்கலை பரிசீலிக்கவே அரசு விரும்புகிறது. அதுகூட வெளிச்க்திகளின் அழுத்தம் காரணமாகவே மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் பஞ்சாயத்து என்ற அழைக்கப்படும் இலங்கையிலுள்ள உள்ளூராட்சி பைகளையே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக இந்தியாவும், ஸ்ரீPலங்காவிலுள்ள புத்திஜீவிகளும் (சிங்களத்தில் ~புத்திமதி|) முன்வைக்கிறார்கள்.

புலிகள் சமதரப்பு நிலையில், படை வலுச் சமநிலையோடு இருக்கையில், சமஷ்டித் தீர்வு பற்றியும், அவர்கள் சில தந்திரோபாய பின்னடைவுகளை எதிர்கொள்ளும் போது பஞ்சாயத்து முறை பற்றியும் அரசு பேசுகிறது.

இவற்றிலிருந்து தமிழ் மாகாணங்கள் விளங்கிக்கொள்ள ஒரு விடயமொன்று உண்டு. அதாவது தமிழர் தரப்பானது படைவலுச் சமநிலையை மீறிய அதிவலு நிலையை எய்தினால், சமஷ்டியை பார்க்கிலும் கூடிய நிலையிலுள்ள கூட்டாட்சி (ஊழகெநனநசயவழைn) அமைப்பினையோ அல்லது பூரண சுயாட்சியையோ எளிதில் அடையலாம்.

இவ்வகையான அதிவலு நிலையை எட்ட, மக்களின் முழுமையான இணைவு 'போராட்ட இயங்கியல் போக்கினுள் உள்ளடக்கப்பட வேண்டும். அவ்வாறு தேசிய விடுதலைப் போராட்டத்தளத்தினுள் உள்வாங்கப்படும் மக்கள் சக்தியின் முன்னால், ஏகாதிபத்தியங்களின் அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் செயலற்றுப்போகும்.

இவ்வாறு செயலற்றுப் போன பல நிகழ்வுகளை, நாம் கடந்து வந்த வரலாற்று வழித்தடத்தில் பலதடவை தரிசித்துள்ளோம்.

மக்கள் சக்தியோடு இணைந்த போராட்ட வலுவின் முன்னால், படைவலுச் சமநிலையும் சரி, அல்லது ஆளணி வலுச் சமநிலையும் செயலற்று நீர்த்துப் போகும்.

சர்வதேச சமூகம் விரும்பாத, போராட்ட வலுவினை, அதிகரிப்பதனூடாகவே, அவர்களின் அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

தட்டுங்கள் திறக்கப்படுமென்பார்கள். தட்டிக்களைத்து கையில், தட்டு ஏந்தும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

இனி உடைக்கப் போகும் வேளையில், மறுபடியும் தட்டும்படி சர்வதேசம் கூறுகிறது. ஆகவே இனிமேலும் விழிப்பு நிலையில் உறங்கக் கூடாது. இருப்பினும் தூக்கத்தில் நடப்பவனைப் போலுள்ளது போரும் சமாதானமும்.
____________________________
நன்றி: வீரகேசரி வார வெளியீடு (22.10.06)
நன்றி: தமி்ழ்நாதம்



Labels: , ,