« Home | இஸ்ரேலியப் பயங்கரவாதம் - சனநாயகத்துக்கான போராட்டம் » | இராணுவப்பிடியில் சிறிலங்கா » | அணுவாயுதப் பரிசோதனை அரசியல் » | சிங்களவரிடமுள்ள இனப்பிரச்சினைத் தீர்வு » | பேச்சுவார்த்தையும் பேய்க்காட்டலும் » | புலிகளின் பலம் மக்கள் சக்தியே » | ரணில் - மகிந்த கூட்டு ஒப்பந்தம் » | ஈழத்தமிழரின் நேச சக்திகள் » | ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோ வருது கிடைத்தது எப்படி? » | இந்தியாவின் நோக்கம் என்ன? »

ஏழுகட்சிக்கூட்டணி - மாவோயிசப் போராளிகள் ஒப்பந்தம்

மறுபக்கம் - கோகர்ணன்

உலகில் எத்தனையோ முக்கியமான மாற்றங்கள் நடந்து கொண்டுள்ளன. என்றாலும் நமது ஊடகங்கட்கு அவை முக்கியமானவையல்ல. உலகச் செய்திகள் என்றால் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா தொடர்பானவையாகவே இருக்க முடியும். வேறெங்கேன் ஏதாவது பெரிய நிகழ்வு என்றால் சிலவேளை சிறிது சொல்லப்படும். ஆனால், எது ஏன் என்று நமக்கு விளங்கிக் கொள்ள வாய்ப்பு இராது. ஈராக் பற்றியும் லெபனான் பற்றியும் கொஞ்சங் கூடுதலாகவே சொல்லப்பட்டாலும் அதற்கான காரணம் அங்குள்ள மக்களின் நிலை பற்றியோ மத்திய கிழக்கின் இன்றைய நெருக்கடியின் தன்மை பற்றியோ அறிகிற ஆவல் அல்ல.
பரபரப்பூட்டுகிற செய்திகட்கு எப்போதும் எங்கள் ஏடுகளில் இடமுண்டு. தமிழக நிலவரங்கள் பற்றிய அக்கறையும் உண்டு. ஆனால், இன்னமும் ஜெயலலிதாவா கருணாநிதியா தப்பித்தவறி கோபாலசாமியா என்கிற விதமான கணிப்புக்கட்கு அப்பால் நமது ஊடகவியலாளர்களால் போக முடிவதில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க "எப்போ வருவாரோ" என்று ஏங்குகிறவர்கள் இருக்கிறார்கள். "சட்டிசுட்டதடா" என்று சலித்துப் போனவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்தியா இலங்கை அரசாங்கத்தை மிரட்டிப் பணிய வைக்குமா என்ற நப்பாசை பலரிடமும் உண்டு. நமது பத்திரிகையாளர்களில் எத்தனை பேரால் கடந்த கால் நூற்றாண்டிற்குள் இந்திய அயற் கொள்கை எவ்வளவு தூரம் மாறியுள்ளது என்று விளங்கவோ விளக்கவோ முடியுமாக இருந்துள்ளது. நம்மிற் பலர் கடல் கடந்த போதும் கிணற்றுத் தவளை மனநிலையிலேயே நமது சமூகம் இன்னமும் உள்ளது.

நமக்கு என்ன நடக்கிறது என்று விளங்காமல் அல்லற்படுகிறோம். தனிப்பட்ட இழுபறிகளுக்குள்ள முக்கியத்துவம் சமூக நிகழ்வுகட்கு இல்லை. உலகில் சமூக முக்கியத்துவமிக்க நிகழ்வுகள் பற்றிய கவனத்தைவிடப் பரபரப்பூட்டும் செய்திகளைவிடக்கூடிய கவனிப்பைப் பெற்றதற்கு ஒரு அண்மைய உதாரணம் ஐ.நா. சபையில் ஹ்யூகோ சாவேஸ், ஜோஜ் புஷ்ஷைச் சாத்தன் என்று அழைத்தது நமது ஊடகங்களில் பெற்ற முக்கியத்துவம். அவர் ஆட்சிக்கு வந்த பின்பு வெனெசுவேலாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் லத்தீன் அமெரிக்க அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய எழுச்சி, அதற்குச் சாவேஸின் பங்களிப்பு, அவரது ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா எடுத்த முயற்சிகளும் அவை மக்களால் முறியடிக்கப்பட்டதும் போன்றவற்றில் ஏதாவது அவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளதா?

இப்பொழுது மெக்ஸிகோவில் ஒஹாகா மாகாணத்தில் மக்கள் ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் அணிதிரண்டு முன்னேறுகின்றனர். சனாதிபதித் தேர்தலில் வாக்குச்சீட்டு மோசடி மூலம் வெற்றி பெற்ற கல்டெரொன் பதவி ஏற்கிறதற்கு எதிரான கிளர்ச்சி வலுக்கிறது. இவையெல்லாம் நமக்கு முக்கியமானவையல்ல.

சரி முழு உலகமும் பற்றி ஏன் சொல்ல வேண்டும்! நமது தென்னாசிய அயலில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதைப்பற்றியாவது மக்களுக்குச் சரியாகச் சொல்ல வேண்டாமா? ஏதேதோ சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஏழுகட்சிக்கூட்டணியும் மாஓ வாதிகளும் ஒரு உடன்படிக்கைக்கு வந்துள்ளனர். அது எதைப் பற்றியதென்றோ அதன் முக்கியமான அம்சங்கள் என்னவென்றோ அறிவதற்கு நமது பத்திரிகையாளர்கட்கு அக்கறையில்லை. ஆனால், மாஓவாதிகள் பாடசாலை மாணவர்களைக் கடத்திக் கொண்டு போய்த் தங்களது படையில் இன்னமும் சேர்க்கிறார்கள் என்று எதுவிதமான விசாரணையும் இல்லாமல் விஷமத்தனமான செய்திகளை வெளியிடுகிறார்கள். தமிழ் மக்கள் அறிய வேண்டியது அது போன்ற கதைகளா? அல்லது எவ்வாறு ஒரு பத்து வருட காலப் போராட்டம் எப்படி ஒரு கொடுங்கோல் முடியாட்சியின் கதையை முடிவுக்குக் கொண்டுவந்தது என்ற கதையா? எப்படி 12,000 பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில், அதிலும் 10,000 பேர் இராணுவத்தால் கொல்லப்பட்ட நிலையில், மக்களை அணிதிரட்டி நாட்டின் 90 சதவீதப் பரப்பில் மாஓவாதிகளின் அரசியல் அதிகாரத்தை நிறுவ முடிந்தது என்ற கதையா? மாஓவாதிகளின் அதிகாரத்தின் கீழ் எப்படிச் சிறுபான்மைத் தேசிய இனங்களும் சமூகப் பிரிவினரும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் பெண்களும் தமது உரிமைகளைச் சிறிது சிறிதாக வென்றெடுத்து வந்துள்ளனர் என்ற கதையா?

ரணில் விக்ரமசிங்க, ஏழு கட்சிக் கூட்டணிக்கும் மாஓவாதிகட்குமிடையிலான சமாதான உடன்படிக்கையைப் பாராளுமன்றத்தில் விநியோகிக்கும் படி கேட்டுக் கொள்ளுமளவுக்கு அது ஒரு முன்னுதாரணமான சமாதான உடன்படிக்கையாக உள்ளது. நம்மைப் பொறுத்தவரை மாஓவாதிகள் ஆயுதங்களைக் கையளிப்பதும் பல கட்சிச் சனநாயகத்தை ஏற்பதும் மட்டுமே ஓரளவுக்குக் கவனிப்பைப் பெற்றுள்ளன. எனினும், ஒரு சமாதான உடன்படிக்கை எவற்றையெல்லாம் கணிப்பிலெடுக்க வேண்டும் என்பதற்கு அந்த உடன்படிக்கை மிகுந்த கவனம் காட்டியுள்ள காரணத்தாலேயே ரணில் விக்ரமசிங்க அந்த உடன்படிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கினார்.

அந்த உடன்படிக்கை போரிட்டுக் கொண்டிருந்த இரண்டு பகுதியினரிடையிலான உடன்படிக்கையல்ல என்பது முக்கியமானது. முடியாட்சிக்கு எதிராகவும் சமூகக் கொடுமைகட்கு எதிராகவும் நீண்டகால ஆயுதப் போராட்டம் நடத்திய மாஓவாதிகட்கும் அந்தப் போராட்டத்தின் விளைவாக முடியாட்சி தனது முடிவை நெருங்கிய வேளை முடியாட்சிக்கு எதிராகத் திரும்பிய பாராளுமன்ற அரசியற்கட்சிகளின் கூட்டணிக்குமிடையே நாட்டின் எதிர்காலம் பற்றி எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை மையமாகக் கொண்டது அது.

மீண்டும் முடியாட்சியை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கான சூழ்ச்சிகள் இந்தியத்தரப்பிலும் அதைவிட முக்கியமாக அமெரிக்கத் தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான நெருக்குவாரங்கள் ஏழு கட்சிக் கூட்டணிக்கூடாக வழங்கப்பட்டன. அமெரிக்கத் தூதரும் தென்னாசிய அலுவல்கட்கான அமெரிக்கச் செயலரும் நேபாள இராணுவத்தின் தலைமை அதிகாரிகளுடன் பலவிதமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய ஒரு சூழலிலே மாஓவாதிகளை ஆட்சிப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக விலக்கிவைக்கிற சதிவலையை அறுத்து எறிந்தே அந்த உடன்படிக்கை ஏற்பட்டது.

உடன்படிக்கையின் மிக முக்கியமான பகுதி சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களும் மோதலைக் கட்டுப்படுத்துவதும் பற்றியது. இறந்த அரசரதும் அரச குடும்பத்தினதும் உடைமைகள் நேபாள அரசாங்கத்தின் பொறுப்பிற்குக் கொண்டுவரப்பட்டதுடன் தற்போதைய அரசரின் நிலையை மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட சட்டவரைவு மன்றம் முடிவு செய்யும் வரை அரசருக்கு அரச நிருவாக அதிகாரம் எதுவும் இராது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையிலும் பல கட்சிச் சனநாயகம் போன்ற அடிப்படையிலுமான வெகுசனப் பங்குபற்றுதலைக் கொண்ட மக்களுக்குப் பதில் சொல்லப் பொறுப்புள்ள ஒரு ஊழலற்ற ஆட்சிமுறை ஏற்கப்பட்டுள்ளது. பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள், நாடோடிச் சமூகத்தினர், ஒடுக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினர், பிற்பட்ட சமூகத்தினர் ஆகியோரின் பங்குபற்றுதலுக்கு ஏற்றவாறு அரச நிருவாகம் மாற்றியமைக்கப்படும். நிலவுடைமையும் நிலப்பிரபுத்துவச் சொத்துமுறையும் முடிவுக்குக் கொண்டுவரப்படும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருடைய சமூகப் பாதுகாப்புக்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

இவற்றுக்கும் மேலாகத் தொழிலாளரது உரிமைகள் திட்டமிட்ட பொருளாதார விருத்தி போன்றனவும் ஏற்கப்பட்ட கொள்கைகளாகின்றன.

மேலோட்டமாகப் பார்த்தால் இவை யாவும் எந்த மூன்றாமுலகப் பாராளுமன்ற அரசியல் கட்சியோ கூட்டணியோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வழங்கக் கூடிய வாக்குறுதிகள் போலத் தெரியலாம். எனினும், மேற்கூறியவற்றில் முக்கியமான பகுதி மாஓ வாதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே அமையும் என்பது கவனிப்புக்குரியது. எனவே சட்ட வரைபு மன்றம் தெரிவு செய்யப்படுவதற்கான வாக்கெடுப்பு அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறும் வரை இந்தக் கொள்கைகள் சரிவரக் கடைப்பிடிக்கப்படுமா என்பதில் மக்களின் செயற்பாட்டுக்கு முக்கியமான ஒரு பங்குண்டு.

மாஓ வாதிகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது அதன்மூலம் மட்டுமே சமூக மாற்றத்திற்கு வழி செய்ய முடியும் என்பதால், சர்வாதிகார முடியாட்சியும் அதன் இராணுவமும் தமது அதிகாரத்தை இழக்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் மாஓவாதிகள் ஒரு அமைதியான தீர்வுக்கும் பல கட்சி ஜனநாயகத்துக்கும் உடன்பட்டுமுள்ளனர். எனினும், இந்தத் தீர்வு நிலைப்பதும் நிலையாமல் போவதும் புதிதாக ஏற்படக் கூடிய ஆட்சி அமைப்பு மக்களுக்கு இந்த உடன்படிக்கை வாக்களித்த விடயங்களை நிறைவேற்றுமா என்பதிலும் அதில் அந்நியக் குறுக்கீடுகட்கு இடமிருக்கும் என்பதிலுமே தங்கியுள்ளது. எதுவுமே நிச்சயமானதும் நிரந்தரமானதுமல்ல. எனினும், நேபாளத்தின் மக்களை மகிழ்விக்கக் கூடிய ஒரு உடன்படிக்கை இது என்பதில் ஐயத்துக்கு இடமில்லை. மாஓ வாதிகளும் ஏழுகட்சி கூட்டணியின் சில தலைவர்களும் பல விடயங்களில் கடுமையாக முரண்பட்ட போதும் முடிவில் நியாயமான ஒரு உடன்பாட்டுக்கு வந்தது மெச்சத்தக்கது. இந்த நாட்டில் அதற்கு நேரெதிரான சூழ்நிலையே உள்ளது. முதலில் நாட்டின் பெரும்பாலான மக்கள் அமைதியான, நியாயமான தீர்வை வற்புறுத்துகிற ஒரு சூழ்நிலை ஏற்பட வேண்டும். சுயநலத்துக்காக அமைதிக்கான முயற்சிகளைக் குழப்புகிற விஷமிகள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். ரணில் விக்ரமசிங்க போன்றோர் அது பற்றியும் கவனம் காட்டுவார்களா? யூ.என்.பி. - ஷ்ரீல.சு.க. உறவு அதற்கு வழி செய்யுமா?

_________________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 03, 2006

_____________________________________________

Labels:


Get your own calendar

Links