« Home | சனநாயகமும் பயங்கரவாதமும் » | சிங்கள மனப்பான்மையும் சிறிலங்கா நிலைமையும் » | ஏழுகட்சிக்கூட்டணி - மாவோயிசப் போராளிகள் ஒப்பந்தம் » | இஸ்ரேலியப் பயங்கரவாதம் - சனநாயகத்துக்கான போராட்டம் » | இராணுவப்பிடியில் சிறிலங்கா » | அணுவாயுதப் பரிசோதனை அரசியல் » | சிங்களவரிடமுள்ள இனப்பிரச்சினைத் தீர்வு » | பேச்சுவார்த்தையும் பேய்க்காட்டலும் » | புலிகளின் பலம் மக்கள் சக்தியே » | ரணில் - மகிந்த கூட்டு ஒப்பந்தம் »

மலையக மக்களின் போராட்டம்

மறுபக்கம் - கோகர்ணன்
~~~~~~~~~~~~~~~~~~~~

தோட்டத் தொழிலாளர் தமக்கு நியாயமான சம்பளங் கேட்டுப் போராட முற்பட்டது இதுதான் முதற் தடவையல்ல. தொழிலாளர்களின் போராட்டங்களைக் காட்டித் தங்களை அரசியலில் வலிமைப்படுத்திக் கொண்டு; முடிவில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் விருந்துபசாரங்களிடையே சமரசங்களை ஏற்படுத்திக் கொண்டு தொழிலாளர்களிடம் நாங்கள் எதைஎதயோ வென்று தந்து விட்டதாக வீரம் பேசிவந்த மலையகத் தொழிற்சங்க, அரசியல் தலைவர்கள் இப்போது தடுமாறுகிறார்கள்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பற்றி மக்கள் மத்தியில் எழுந்த அவநம்பிக்கையின் விளைவாகவே மலையக மக்கள் முன்னணி உருவானது. ஆனால், இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு குறையத் தொடங்கி இன்று இல்லாமலே போய்விட்டது. அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்குப் பேரம்பேசுவதில் இரண்டு நிறுவனங்களுக்குமிடையில் உள்ள போட்டியையும் அவர்களுக்குப் பின்னால் நிற்கிற வணிக நலன்களையும் விட்டால் ஒரு வேறுபாடும் இல்லை எனலாம். மலையகத் தோட்டத் தொழிலாளர் என்ற வாக்கு வங்கியையும் அவர்களிடம் வசூலிக்கிற சந்தாப் பணத்தையும் தவிர வேறெதைப் பற்றியும் மலையகத் தொழிற்சங்கத் தலைமைகட்கோ அரசியல் தலைமைகட்கோ, அக்கறை இல்லை என்பது தெளிவான விடயம்.

மலையகத் தமிழ் மக்களிடம் தலைவர்கள் போகிறார்கள் என்றால் தேர்தல் மாதிரி ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று தான் பொருள். ஒவ்வொரு தேர்தலின் போதும் வழங்கப்படுகிற வாக்குறுதிகள் தேர்தல் முடியு முன்னமே மறக்கப்படுகின்றன. அதைவிட மின்சாரம் வழங்குவதாகச் சொல்லி மின்கம்பங்களைக் கொண்டுபோய் வைத்துவிட்டு தேர்தல் வாக்களிப்பு முடிந்த கையோடே எடுத்துக் கொண்டு போனது போன்ற கீழ்த்தரமான நாடகங்கள் கூட நடத்தப்பட்டுள்ளன.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் மக்களும் தமது விரக்தியைப் பல வழிகளில் தெரிவித்து வந்துள்ளனர். தொழிற் சங்கங்களின் உறுப்பினர் தொகை குறைந்துள்ளது. சென்ற உள்ளூராட்சித் தேர்தலின் போது பிரதான அரசியல் கட்சிகளின் வாக்குகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது. எனினும், ஒரு மாற்று அரசியல் தலைமை உருவாகக்கூடிய சூழ்நிலை ஏற்படவில்லை. அப்படி ஒன்று ஏற்பட்டிருந்தாலும், மாற்று அரசியல் தலைமை இன்னுமொரு பாராளுமன்றத் தேர்தல் அரசியல் தரகுக் கட்சியாகவும் தொழிற்சங்கக் கட்சியாகவும் இருக்கும் என்றால் அது ஒரு மாற்றமாக இருக்காது. வேறு ஒருபோதும் ஒரு கட்சிக் கொடியும் வேறு ஒரு தலைவரின் முகமும் உண்மையான மாற்றமில்லை என்பதைத் திரும்பத் திரும்பக் கண்டிருக்கிறோம்.

மலையக அரசியல் தலைமைகளின் துரோகம் அப்பட்டமாகவே வெளிப்பட்ட ஒரு பிரச்சினை மேல் கொத்மலை நீர்மின் திட்டம் தொடர்பானது. எல்லாப் பாராளுமன்றக் கட்சிகளும் தலைவர்களும் சேர்ந்து, மலையகத் தமிழ் மக்கள காட்டிக் கொடுத்துவிட்டனர் என்பது தான் நாம் கண்ட உண்மை. போராட்டத்தை ஆதரித்துக் கொழும்பிலிருந்து அறிக்கை விடுவதும் திரைக்குப் பின்னாலிருந்து போராட்டத்துக்குக் குழி பறிப்பதும் தங்களது ஆதரவாளர்களைக் கொண்டு எதிர்ப் பிரசாரம் செய்வதும் மக்கள் பங்குபற்றாமலிருக்கும் விதமாக வதந்திகளைப் பரப்புவதும் பற்றி எத்தனை தடவைகள் கேள்விப்பட்டுக் கொதித்திருக்கிறோம். ஆனால், அதுதான் மலையக அரசியலின் யதார்த்தம். அதை மாற்றாமல் மலையகத்திற்கு விடிவு இல்லை.

மலையகம் கல்வியில் இன்னமும் பின்தங்கிய ஒரு பிரதேசமாகவே இருந்து வருகிறது. கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களில் மலையகத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்ச்சி கணிசமான அளவுக்குப் பரவியுள்ளது. கல்வி வாய்ப்புக்களுக்கான வேட்கையை நிறைவு செய்ய இன்னமும் கல்வி வசதிகள் மிகவும் போதாமலே் உள்ளன. இந்தவிதமான நெருக்கடிகளின் நடுவே தோட்டத் தொழிலாளர் குடும்பங்களிலிருந்து உருவான படித்த இளைஞர்கள் பரம்பரை ஒன்று உருவாகியுள்ளது. இவர்களில் ஒரு பகுதியினர் தமது கல்வி மூலம் தோட்ட வாழ்க்கைச் சூழலிலிருந்து தப்பித் தம்மை மேலும் மேம்படுத்திக் கொள்ள முயல்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர். இன்னொரு பகுதியினர் தமக்குக் கிடைத்த வாய்ப்புக்களை எல்லாரோடும் பகிர்ந்து மலையகத் தமிழ்ச் சமூகத்தை அதன் தாழ் நிலையிலிருந்து விடுவிக்கப் பாடுபடுகின்றனர். அவர்களிடம் சமூகம் பற்றிய அக்கறையும் விழிப்புணர்ச்சியும் உள்ளது. அது சமூகத்தில் அடுத்த தலைமுறையினரிடமும் தொற்றிக் கொள்ளுகிறது. தோட்டத் தொழிலாளரிடையும் தொற்றிக் கொள்ளுகிறது. இது மலையக மக்களை ஏய்த்துப் பிழைக்கிறவர்களது பிழைப்பில் மண்ணை அள்ளிப்போடும் என்பதனால் மலையக மக்களின் கல்வி உயர்வுக்கு எதிரான தடைக்கற்கள் பேரினவாத அதிகார வர்க்கத்தினரால் மட்டுமில்லாமல் மலையகத் தமிழ்ச் சமூகத்தில் உள்ள சில சுயநலமிகளாலும் எழுப்பப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக மலையக மக்கள் மத்தியிலே போராட்ட உணர்வு வலுப்பட்டு வந்துள்ளது. அது சரியாக நெறிப்படுத்தப்படுமானால் மலையக மக்களின் விடிவுகாலம் வெகு தொலைவில் இல்லை. எனினும், சரியான வழி நடத்தல் இல்லாமையால் போராட்டங்கள் எதிர்பார்த்த வெற்றியை எட்ட முன்னமே போராட்டங்கள் முடக்கப்படுமாயின், தொழிலாளரது போராட்ட உறுதி தளர்ந்து போகலாம். அதன் விளைவாக எதிர்காலப் போராட்டங்கள் பாதிக்கப்படலாம். எனவே போராட்டங்களின் வெற்றி தோல்விகட்கும் அப்பால், தோட்டத் தொழிலாளரின் உண்மையான நட்புச் சக்திகள் யார், நம்பகமான தொழிலாளர் தலைவர்கள் யார், சரியான போராட்ட உபாயங்கள் எவை என்பனவற்றை மட்டுமல்லாமல் ஒவ்வொரு தவறும் ஏன் நிகழ்ந்தது. துரோகங்கள் ஏன், எப்படி நிகழுகின்றன என்பன பற்றி அவர்கள் மீளாய்வு செய்வது முக்கியமானது.

கடந்த காலங்களிலிருந்து பயனுள்ள பாடங்களைக் கற்றதனாலேயே தொழிலாளர்கள் இம்முறை தங்களது தொழிற்சங்க அரசியல் தலைமைகளின் வழிநடத்தல்கட்குக் கட்டுப்படாமல் `மெதுவாக வேலை செய்தல்' என்கிற போராட்டத்தின் பயனின்மையை உணர்ந்து முழுமையான வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். எனினும், அவர்கள் சார்பாக முதலாளிமாருடன் பேசிச் சம்பளம் பற்றிய உடன்பாட்டுக்கு வருகிற உரிமை சில தொழிற்சங்கத் தலைமைகளிடமே உள்ளது. அந்தத் தலைமைகள் கடந்த காலங்களில் தொழிலாளர்கள் சார்பாகப் பேசுவதாகச் சொல்லி எதையுமே வென்றெடுக்கத் தவறியதைத் தொழிலாளர்கள் அறிவார்கள். முதலாளிமாரும் தலைவர்களும் சேர்ந்து இம்முறை தொழிலாளர்களை ஏமாற்றுவது எளிதாக இராது. ஆனாலும் தொழிலாளரால் எவ்வளவு காலத்திற்கு வருமானம் இல்லாமல் தாக்குப் பிடிக்க இயலும் என்பதையும் நாம் மனதில் இருத்த வேண்டும். நாளாந்தம் கோடிக்கணக்கான ரூபாக்களை இழப்பதாக முறையிடுகிற முதலாளிமாரின் தந்திரோபாயம் தொழிலாளரைக் காயப்போட்டுப் பணிய வைப்பதாகவும் இருக்கும் என்பது பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இன்று ஆட்சியிலிருப்பது தொழிலாளர்கட்கு நட்பான ஒரு அரசாங்கமல்ல. அதைவிடவும் அதன் பேரினவாதப் போக்குக்கு மலையகத் தமிழர் வடக்குக் கிழக்கின் தமிழரைவிடக் குறைவான இலக்கல்ல. எனவே நியாயமான ஒரு தீர்வை வந்தடைய அரசாங்கம் எவ்வகையிலும் தொழிலாளர் சார்பாகக் குறுக்கிடப் போவதில்லை.

எனவே இப் போராட்டம் தொடர்வதானால் அதற்கான ஆதரவு நாட்டில் உள்ள முற்போக்குச் சக்திகளிடமிருந்தும் நியாய உணர்வுள்ள சகலரிடமிருந்தும் வெளிவெளியாகவே கிடைத்தாக வேண்டும். அதுமட்டுமல்லாமல், எதிர்கால ஊதியங்கள் பற்றிய சில பொதுவான உடன்பாடுகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தோட்டத் தொழிலாளரின் நாட் சம்பளம் நாட்டின் பிற பகுதிகளில் ஒருவிதமான தொழிற் திறமையுமற்ற கூலியாட்கள் பெறுவதில் அரைப்பங்கிற்கும் குறைய என்பதைப் பற்றி யாருமே பேசுவதில்லை. அவர்கள் கேட்கிற முந்நூறு ரூபா நாட் சம்பளத்திற்போல எத்தனை மடங்கு சம்பாதிக்கிறவர்கள், தோட்டத் தொழிலாளர் பெறுகிற சம்பளம் வயிற்றைக் கழுவவே மட்டுமட்டாகத்தான் போதுமானதாயுள்ளது என்பதை நினைத்துப் பார்க்கிறார்கள்.

கொலனிய காலத்திலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டு வந்துள்ளனர். என்றாலும் அப்போது தொழிலாளர்களுக்கு இருந்த சில உரிமைகளும் சலுகைகளும் உத்தரவாதங்களும் இப்போதைய தனியார் மயமாக்கப்பட்ட தோட்டங்களில் இல்லாமற் போய்விட்டன. அவர்களுடைய குழந்தைகளுடைய எதிர்காலம் தோட்டங்களுக்குள்ளேயே அதி குறைந்த ஊதியத்திற்கு அதிகூடிய உழைப்பு என்று முடங்கிப்போகக் கூடாது. எனவே அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் அவர்களதும் அவர்களது குழந்தைகளதும் அடிப்படை உரிமைகளில் முக்கியமானவையான கல்வி வாய்ப்பு, நோயற்ற வாழ்வு போன்றவற்றையும் உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும்.

இப்போதைய வேலை நிறுத்தம் மலையகத்தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னோக்கிய ஒரு பாய்ச்சல் என்பதில் ஐயமில்லை. மலையக அரசியல் தலைமைகளை அது கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. எனினும் மலையகத் தமிழ் மக்களும் தோட்டத் தொழிலாளரும் தமக்குள்ளிருந்து ஒரு மாற்று அரசியல் தலைமையை மட்டுமில்லாமல் ஒரு மாற்று அரசியல் பாதையையும் வகுக்கும் அளவுக்கு அந்த விழிப்புணர்ச்சி வளர வேண்டும். அவ்வளர்ச்சி வெற்றி தோல்விகட்கும் அப்பால் அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளது பேரங்களுக்கும் சமரசங்கட்கும் அப்பால் ஒவ்வொரு போராட்டத்தினதும் அனுபவங்களூடும் மட்டுமே இயலுமானது.

மலையகத் தொழிலாளரின் பிரச்சினை வெறுமனே ஊதியம் தொடர்பானது மட்டுமல்ல. இன்று அவர்களது இருப்பு மிரட்டலுக்கு உள்ளாகிறது. அவர்களது கல்வி, மருத்துவ உரிமைகள் திட்டமிட்டே மறுக்கப்படுகின்றன. அவர்களது பிரதேசம் சட்டத்தின் உதவியுடனும் சட்டத்தைப் புறக்கணித்தும் பறிக்கப்படுகின்றன. அடிப்படையான வசதிகள் கூட மிகுந்த புறக்கணிப்புக்குள்ளாகின்றன. இது அப்பட்டமான தேசிய இன ஒடுக்கல்.

மலையகத் தோட்டத் தொழிலாளரின் போராட்ட உணர்வு அவர்களது ஒடுக்குமுறையின் அரசியல் பரிமாணங்களையும் தொடவேண்டிய நாளை இன்னமும் அதிகம் பின்போட முடியாது. ஒரு புதிய மலையகத்தை உருவாக்குகிற பொறுப்பை மலையகத் தொழிலாளரும் மலையக மக்களும் தமது கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
_______________________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் December 24, 2006

_____________________________________________

Labels:


Get your own calendar

Links