« Home | சிங்கள மனப்பான்மையும் சிறிலங்கா நிலைமையும் » | ஏழுகட்சிக்கூட்டணி - மாவோயிசப் போராளிகள் ஒப்பந்தம் » | இஸ்ரேலியப் பயங்கரவாதம் - சனநாயகத்துக்கான போராட்டம் » | இராணுவப்பிடியில் சிறிலங்கா » | அணுவாயுதப் பரிசோதனை அரசியல் » | சிங்களவரிடமுள்ள இனப்பிரச்சினைத் தீர்வு » | பேச்சுவார்த்தையும் பேய்க்காட்டலும் » | புலிகளின் பலம் மக்கள் சக்தியே » | ரணில் - மகிந்த கூட்டு ஒப்பந்தம் » | ஈழத்தமிழரின் நேச சக்திகள் »

சனநாயகமும் பயங்கரவாதமும்

மறுபக்கம் - கோகர்ணன்

சனாதிபதி என்னைக் கொஞ்சம் ஏய்த்துவிட்டார். என்றாலும் முற்றிலுமாக ஏய்த்துவிடவில்லை. விடுதலைப் புலிகளைத் தடை செய்யாமலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு தடை மூலம் செய்யக் கூடியவற்றில் ஏறத்தாழ அனைத்தையுமே செய்யவிருப்பதாக நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். எனினும் அவரது சொற்களின் நிதானம் கொஞ்சம் பிசகி வருகிறது. அதனாலோ என்னமோ அவரது அண்மைய வீராவேச உரையைப் பற்றிய ஐலன்ட் 8.12.2006 தலையங்கம், அது ஜோஜ் புஷ்ஷின் ஒரு உரையை நினைவூட்டுகிற விதமாயிருந்தது என்று குறிப்பிட்டிருந்தது. இரண்டு உரைகளும் பயங்கரவாதம் பற்றியன. ஜோஜ் புஷ் இப்போது தனது பயங்கரவாத எதிர்ப்புப் போரில் எத்தகைய மகத்தான வெற்றிகளைச் சந்தித்திருக்கிறார் என்பதை நினைத்த போது இந்த ஒப்பீட்டின் பொருத்தப்பாடு மேலும் அதிகமானதாகவே தெரிந்தது.
இந்தியாவிற் பத்திரிகைகட்கு அளித்த நேர்காணலில் இலங்கையில் பயங்கரவாதத்தை முறியடிக்க சனநாயகம் தடையாக இருப்பதாகச் சொல்லியிருந்தாரென அறிந்தேன். இதே ராஜபக்ஷ நீண்ட கால யூ.என்.பி. ஆட்சி முடிவுக்கு வருகிற சாடைகள் தெரியத் தொடங்கிய போது கதிர்காமம் நோக்கி நீண்ட நடைப் பயணமொன்றை மேற்கொண்டவர். யூ.என்.பி. ஆட்சி, 1987க்கும் 1989 க்கும் நடுவே ஜே.வி.பி. பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டச் சனநாயகம் தடையாயிருந்ததாய் எண்ணிக் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறையில் ஆயிரக்கணக்கான ஜே.வி.பி.யினர் மட்டுமன்றி, எத்தனையோ அப்பாவிப் பொது மக்களும் அழிந்தனர். அப்போது ஜே.வி.பி.யின் பயங்கரவாதத்திற்கும் யூ.என்.பி. ஆட்சியின் சனநாயக மறுப்புக்குமிடையே தெரிவிருந்தால் ராஜபக்ஷவினது தெரிவு சனநாயக மறுப்பாக இருந்திராது. ஆனால், இன்று அவரது நடத்தை வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழர்களது அடிப்படை உரிமைகளை மறுப்பதாகவும் பிற பகுதிகளில் வாழுகிறவர்களது சகஜ வாழ்வுக்கான உரிமைகளில் குறுக்கிடுவதாகவும் அமைந்துள்ளது.

சர்வாதிகார ஆட்சிகளை நடத்துவதாக ஊடகங்களால் குற்றஞ்சாட்டப்படுகிற கஸ்ஷ்ரோ, சாவெஸ் போன்றோரால் நாட்டு மக்களிடையே சிரித்த முகத்துடன் உலாவி உரையாட முடிகிறது. நமது நாட்டின் தலைவர்கள் தெருவால் வருகிறார்களென்றால் வெகு தொலைவிலேயே வாகனப் போக்குவரத்து தடைப்படுத்தப்படுகிறது. எனினும், எங்கள் சனநாயகத்தின் காவலர்களால் அச்சமின்றி உலாவ முடியவில்லை. அதேவேளை, சனநாயக மறுப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கிற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் தலைவர்களையும் கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கு நடுவே படுகொலை செய்யப்படக் கூடியதாயுள்ளது.

அண்மையிற் கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் சாவுக்குக் காரணமானவர்களைக் கண்டு பிடிக்கப் பிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லன்ட் யாட் குற்ற விசாரணை நிபுணர்களை அழைப்பிக்கப் போவதாகச் சனாதிபதி அறிவித்தார். அதற்கு எதிர்வினையாக யாரோ சனாதிபதி ஸ்கொட்லன்ட் யாட் வரை போகத் தேவையில்லை. தனது "பக்யாட்டிலே"(கொல்லைப் புறத்திலே) தேடினாலே போதுமானது என்று சொன்னதாக வாசித்த நினைவு. சனாதிபதி எங்கே தேடினாரோ தெரியாது. விடுதலைப் புலிகளே கொலைகள் செய்தார்கள் என்று அவர் சொன்னதாக ஐலன்ட் மாகாணப் பதிப்பில் முதற் பக்கத்தில் கொட்டை எழுத்தில் பிரதான செய்தித் தலைப்பு வெளியாகியிருந்தது. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமாயும் கொலையை மிகவும் விளையாட்டுத்தனமாகக் கணிப்பதாயும் அமைந்திருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது இறந்தவரை அவமதிப்பதாக இருந்தது.

அரச படைகளால் மூதூரிற் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விசாரணை முடக்கப்பட்டது என்னை வியக்கச் செய்யவில்லை. சூரியகந்த படுகொலைகள் முதல் செம்மணி வரையும் அப்பாலும் மரண விசாரணைகள் ஒரே விதமாகத் தான் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று நிலைமைகள் மேலுங் கொஞ்சம் மோசமாகிவிட்டன என்று சொல்லலாம். எனினும், அண்மை வரை, கோமாளித்தனமான கருத்துகளைத் தெரிவிப்பதற்குச் சனாதிபதி பிறரையே பயன்படுத்தி வந்துள்ளார். அதிலும் பாலித கோஹண, கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகிய இருவரும் மிகவும் சிறப்பாகவே அப் பணியை ஆற்றி வந்திருக்கின்றனர். சக்தி தொலைக்காட்சியிலும் `ஐ' தமிழ் நிகழ்ச்சிகளிலும் வருகிற `மெகா' தொடர் நாடகங்களைப் பார்த்துச் சிரிக்க இயலாதவர்கட்கு கோஹணவையும் ரம்புக்வெல்லவையும் பரிந்துரைத்திருக்கிறேன். அப்போதும் சிரிக்க இயலாதவர்கள் ஒரு உளவியல் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது உத்தமம். இப்போது, நம்மைச் சிரிக்க வைக்கிற முயற்சியில் சனாதிபதியும் தனது பங்கை வழங்கப் போகிறார் என்று நாம் நம்பலாம்.

தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பெரும்பான்மையினரின் பரிந்துரை சனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதிலுள்ள, அதிகாரப் பரவலாக்கல் ஆலோசனைகள் போதுமானவையா என்பது ஒருபுறமிருக்க, அவற்றைச் சனாதிபதி ஏற்பாரா (அல்லது ஏற்க அனுமதிக்கப்படுவாரா) என்கிற கேள்வி என் மனதில் எழுந்தது. கருத்து வேறுபாட்டைத் தெரிவித்துச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிறுபான்மை அறிக்கைகளில் நிச்சயமாகச் சனாதிபதிக்கு ஏற்புடைய பல்வேறு கருத்துகள் இருக்குமென நம்பலாம்.

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பலவும் வடக்குக் கிழக்கில் மட்டுமன்றித் தெற்கிலும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. ஆட்கடத்தல், கப்பம், கொலைகள், மிரட்டல்கள் போன்றவை பலரும் முன்பு சந்தித்திராத பிரச்சினைகள். இவற்றைப் பற்றி நடவடிக்கை எடுப்பதற்குப் பொலிஸ் துறை எவ்வளவு ஆயத்தமாக உள்ளது என்று சொல்வது கடினம். ஆயத்தமாக இருக்கிற ஒவ்வொரு தருணத்திலும் மேலிடத்து அரசியற் குறுக்கீடு குற்றவாளிகளுக்கு உதவிக்கு வந்துவிடுகிறது. இந்த நிலைமையைச் சமாளிக்க இயலாத ஒரு அரசாங்கம், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று நடைமுறைப்படுத்தப்படுமாயின், அதற்குத் தடையாக எழுகிற தீய சக்திகளை எப்படிக் கையாளும் என்று எனக்குத் தெரியவில்லை. அதிலும் முக்கியமாக, குடாநாட்டுக்கும் வாகரைக்கும் உணவை அனுப்பி வைப்பதற்கே தயக்கங்காட்டுகிற ஒரு அரசாங்கத்திடம் நாம் எதை எதிர்பார்க்க இயலும்?

மனிதரைத் துன்புறுத்தியும் பட்டினியிட்டும் பணிய வைக்கிற உபாயத்தைக் கையாள்வதில் இலங்கை அரசு அமெரிக்காவையும் அதிலுஞ் சிறப்பாக அமெரிக்காவின் செல்லப்பிள்ளையும் குண்டனுமான இஸ்ரேலையும் முழுமையாகப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. அதனாலேதானோ என்னவோ இலங்கை தனது அயல் விவகார அலுவல்களில் முதல் முறையாக, இஸ்ரேலின் அத்து மீறல்களைக் கண்டித்து ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டது. இதைக் கண்டித்துப் பேரினவாத ஏடான சண்டே ரைம்ஸ் கூட எழுதியிருந்தது. இதில் விசேடம் ஏதெனில், ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சியின் கீழ் இலங்கையும் இஸ்ரேலும் மிக நெருக்கமான உறவைப் பேணிய காலத்திற் கூட இலங்கை ஐ.நா. பொதுச்சபையில் இஸ்ரேலிய அத்துமீறல்களைக் கண்டித்து வாக்களிக்கத் தவறியதில்லை. இது வரப்போகிற அரசியற் போக்குகட்குக் கட்டியங்கூறுகிற ஒரு நிகழ்வா என்பதை வாசகர்கள் ஊகித்துக் கொள்ளலாம்.

இந்த நாட்டின் பேரினவாதத் தலைமைகட்கு இந்த நாட்டின் மீது பற்றோ அதன் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையோ இருப்பதாக நான் நம்பவில்லை. பேரினவாதத்திற்கு ஆதரவான பெரிய முதலாளிய நிறுவனங்கள் கூடத் தமது மூலதனத்தின் பெரும் பகுதியை அந்நிய நாடுகளிலேயே வைத்துள்ளனர். மிகுதியான "தேசப்பற்றுடன்" பேரினவாதத்தைப் போதிக்கிறவர்கள் பலர் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் பிரசைகளாகி இலங்கையில் உள்ள தமது சொத்துகள், வருமானங்கள் என்பன மீதான வரிகளைக் குறைக்கவும் நிபந்தனையில்லாமல் இங்கே தொழில் பார்க்கவும் பணம் சம்பாதிக்கவும் வந்து போக வசதியாக இலங்கையிலும் பிரசைகளாகப் பதிவு செய்துகொண்டுள்ளனர். இதை, இலங்கையின் வளத்துக்காகத் தங்களை ஓடாகத் தேய்த்து அழித்தும், இலங்கையின் பிரசாவுரிமை மறுக்கப்பட்ட மலையகத் தமிழரின் கதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பயனிருக்கும்.

சனாதிபதி ராஜபக்ஷவின் ஆலோசகர்களாக இங்கு வந்து சேர்ந்திருக்கிற அவரது சகோதரர்கள் இருவர், மிலிந்த மொறகொட போல அமெரிக்க - இலங்கை இரட்டைப் பிரசைகள். எந்த இரட்டைப் பிரசையும் இந்த நாட்டுக்கு என்ன துரோகம் செய்தாலும், இந்த நாட்டைக் குட்டிச் சுவராக்கத் தம்மாலான எல்லாவற்றையும் செய்தாலும், அவருக்கு எதுவும் ஆகாது. அவரது இலங்கைக் குடியுரிமை மறுதலிக்கப்படாது. மாறாக, அமெரிக்க நலன்கட்கு விரோதமாக அவர் எதையேனும் செய்தால் அமெரிக்க அதிகார நிறுவனம் அவரை விட்டு வைக்கமாட்டாது.

இலங்கையின் ஆட்சி முறையின் சீரழிவும் இலங்கை அரசின் பேரினவாத இன ஒழிப்பும் பற்றி இந்தியாவோ, மேலை நாடுகளோ திருப்தியுடன் இல்லை. ஏனெனில், அது அவர்களது முதலீடுகட்கு நல்லதல்ல. அவர்கள் எதிர்பார்ப்பது இலங்கை மீதான பொருளியல் அரசியல், இராணுவ ஆதிக்கம். இலங்கை அரசாங்கம் அதற்குத் தடையாக இல்லாதளவில் அவை இலங்கையில் குறுக்கிடப் போவதில்லை. ஏனெனில், இலங்கையில் பேரினவாத ஒடுக்கலிலிருந்து விடுதலை பெறவும் நாட்டில் உண்மையான சனநாயகத்துக்காகவும் போராடுகிற சக்திகள் அந்நிய மேலாதிக்கவாதிகளுக்கு நம்பகமானவையாக இருக்க முடியாது. அவர்களைப் பொறுத்தளவில், விடுதலை உணர்வு ஆபத்தானது, விடுதலைப் போராட்டம் பயங்கரமானது.

_____________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 17, 2006

_____________________________________________

Labels:


Get your own calendar

Links