« Home | சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள் » | கௌசல்யன் மருத்துவமனையின் பணி » | வணக்கம். »

மன்னார் மீனவரின் துயரம்

மன்னார், தமிழர்களின் வரலாற்றோடு மிக நெருங்கிய தொடர்புடைய எமது தாயகத்தின் பழம்பெரும் மாவட்டம். இம் மாவட்டத்திற்கென்றே சில தனிப்பண்புகள் இருக்கின்றன. அதாவது மன்னாருக்கே உரித்தான மண் வாசனையாகச் சேர்ந்து வருகின்ற கருவாட்டு வாசனையும் நாட்டு நடப்புக்களைக் கூடிக்கதைப்பது போன்று ஆங்காங்கே சேர்ந்து நிற்கின்ற கழுதைக் கூட்டங்கள் என மன்னாரை பற்றி நிறையவே கூறலாம். அதிலும் தலை மன்னாரைப் பற்றி இன்னும் கூறலாம்.

இலங்கைத்தீவின் ஓர் எல்லைப் பிரதேசம் அது. அழகாக வளர்ந்தும் வளைந்தும் நிற்கின்ற தென்னை மரங்கள் அதன் கீற்றுகளை வருடிச்செல்கின்ற உப்புக்காற்று சுடுவெயிலிலும் எம்மையும் வருடிச்சென்ற போது இதமாகவே இருந்தது. மேலும் தமிழர்களின் வீரத்தினை பறைசாற்றுவதுபோல் நிமிர்ந்து நிற்கின்ற பனை மரங்கள், மீன்களுடனும், மீன்வலைகளுடனும் கண்ணாடி இழை படகுகளின் இயந்திரங்களுடனும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்ற மக்கள் கூட்டம். மீன்களை கொள்வனவு செய்வதற்கென அடிக்கடி வந்து போகும் குளிரூட்டப்பட்ட தென் னிலங்கை வாகனங்கள், அக்கிரா மத்துக்கு அழகு சேர்க்கவென அமைதியாகக் காட்சி தருகின்ற பெரிய கிறிஸ்தவ ஆலயம் ஒன்று என தலை மன்னாரின் மேற்குப் பகுதியின் அழகை பார்த்துக் கொண்டே சென்ற எமக்கு கொமாண்டோ முட்கம்பிச் சுருள்களும், பச்சை மண் மூடைகளுமாக அமைக்கப் பட்டிருந்த கடற்படை முகாம் அந்தக் கிராமத்தின் அழகினையே கெடுத்து நிற்கிறது. திருஸ்டி கழிப்பதற்காக வைக்கப்படும் உருவம் போன்றே அழகான தலைமன்னார் மேற்குப் பகுதியின் அழகை நாசமாக்கியபடி இருந்தது அந்த சிறிலங்கா கடற்படை முகாம். தனியே அழகினை மட்டும் ரசித்து மகிழ்வுடன் இருந்த எம் மனங்களில் இப்போது சிறு அச்சம் எழவே நாம் வந்த நோக்கத்தினை நிறைவு செய்வதற்காக மீனவர்களை நோக்கிச் சென்றோம்.

அண்மைக்காலமாக ஊடகங்களில் அடிக்கடி பேசப்படுகின்ற விடயமாக தலைமன்னார் மீனவர்களும் இந்திய றோலர்களும் அமைந்திருந்தன. இன்றும் இந்தப் பிரச்சினை தொடர்கதையாகவே உள்ளது. 435 குடும்பங்களைச் சேர்ந்த 1571 பேர்கள் வாழ்கின்ற தலை மன்னார் மேற்குப் பகுதியில் 350 குடும்பங்கள் மீனவத் தொழிலையும் 35 குடும்பங்கள் அரச உத்தியோகத்தர்களாகவும் 30 குடும்பங்கள் கூலித்தொழிலையும் 20குடும்பங்கள் சீவல் தொழிலையும் மேற்கொள்கின்றன. இதில் 350 மீனவத்தொழில் செய்கின்ற குடும்பங்களில் 65 பேரிடம் மட்டுமே கண்ணாடி இழைப்படகுகள் உண்டு. மேலும் 50 பேரிடம் கட்டுமரங்கள் காணப்படுகின்றன. ஏனையோர்கள் கூலிக்கே மற்றவர்களின் படகுகளை பயன்படுத்துகின்றனர். அதாவது வாடகைப் படகு மூலம் மீன் பிடிக்கச் சென்று உதாரணமாக 100 கிலோக்கிராம் மீன் பிடிபட்டால் படகுச் சொந்தக்காரருக்கு 50 கிலோ கொடுக்கவேண்டும். அதாவது பிடிபடுகின்ற மீன்களில் அரைவாசிப் பகுதி படகு உரிமையாளருக்கு வழங்கப்படுதல் வேண்டும். சிலவேளைகளில் மீன் பிடிபடாமல் போனால் தாங்கள் கடன்காரர்களாக மாறவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனர் சில மீனவர்கள்.

முன்னரெல்லாம் வரும்
05 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 1260ரூபா பெறுமதியான நிவாரணமும்,
04உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 1008ரூபா பெறுமதி யான நிவாரணமும்,
03உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 840ரூபா பெறுமதியான நிவாரணமும்,
02உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 614ரூபா பெறுமதியான நிவாரணமும்,
01உறுப்பினரைக் கொண்ட குடும்பத்திற்கு 338ரூபா பெறுமதியான நிவாரணமும் வழங்கப்பட்டு வந்ததா கவும் தற்போது அதனையும் நிறுத்தி விட்டதாகவும் இதனால் தாம் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதைவிட தலைமன்னார் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற மிகப் பிரதான பிரச்சினைகள் இந்திய றோலர்களின் பிரச்சினை. அதாவது தங்களின் கடற்பரப்பிற்குள் இந்திய றோலர்கள் அத்துமீறி வந்து மீன்பிடித்துச்செல்கின்ற துயரம் தொடர்கதையாய் தொடர்கிறது. இது தொடர்பாக தலைமன்னார் கடற்கரையில் ஒரு மீனவருடன் கதைத்துக்கொண்டிருந்தபோது அவர் சொல்கிறார் "தம்பி இன்னும் கொஞ்ச நேரம் நில்லுங்கோ இந்தியறோலர்கள் வரும் காட்டுறன்"

இவரின் வார்த்தையில் வேதனை தெரிந்தது. அதைவிட ஆச்சரியமான விடயம் தலைமன்னார் கடற்கரையில் இருந்து ஓரிரு கடல்மைல் வரை இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்கின்றமை. இதனால் செய்வதறியாது தவிக்கும் தலைமன்னார் மீனவர்களின் நிலை. இந்திய மீனவர்களின் றோலர்கள் வருகையால் தங்களின் வலைகள் அறுக்கப்பட்டு நாசமாக்கப்படுவதாகவும், பவளப்பாறைகள் உடைந்து அழிந்து போவதாலும், கடல்கீழ் தரைமட்டம் சமனிலை ஆக்கப்படுவதாலும் மீன்கள் வாழக்கூடிய இடங்கள் அசாதாரணமாக்கப்பட்டு அவை இடம்பெயர்ந்து போவதோடு இனப் பெருக்கம் செய்யக்கூடிய ஏது நிலையும் றோலர்களால் குழப்பம் அடைவதாலும் மீன்வளம் அருகிப் போவதாக கவலையுடன் சொல்கிறார்கள் தலைமன்னார் மீனவர்கள்.

அண்மையில் கூட தலைமன்னார் மீனவர் ஒருவர் ஒருலட்சம் ரூபா கடன் வாங்கி வலை ஒன்றினை கொள்வனவுசெய்து தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை இந்திய றோலர்களினால் அவரது வலை முற்றாக அழிக்கப்பட்டு மீளப் பயன்படுத்தமுடியாத நிலையில் போனதால் விரக்தி அடைந்த அம் மீனவர் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் பின்னர் உறவினர்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. ஆனால், தற்போதும் அவர் கடனாளியாகவே உள்ளார்.

இப்படித்தான் இன்று தலை மன்னாரில் பல மீனவர்களின் கதை தொடர்கிறது. தாங்கள் சில வேளைகளில் இந்திய கடல் எல்லைக்குள் சென்றுவிட்டால் இந்திய கடற்படையினர் தங்களை உடனே கைதுசெய்துவிடுவதாகவும் ஆனால் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அவ்வாறு கைது செய்வது இல்லை. ஒருசில தடவைகள் கைது செய்துள்ளதாகவும் பெரும்பாலான தடவைகள் இந்திய மீனவர்களிடம் இறால் போன்றவற்றை பெற்றுவிட்டு அவர்களை அப்படியே விட்டுவிடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால்தான் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்கின்ற தாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இந்திய கடல் எல்லைக்கு அருகில் தனது கண்ணாடி இழைப் படகுமூலம் சென்று இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டு மதுரைச் சிறையில் தண்டனை அனுபவித்து திரும்பிய தலை மன்னாரைச் சேர்ந்த ஸ்ரீபன் கொஸ்தா இவ்வாறு கூறுகின்றார். "ஐயோ தம்பி அடியென்ரா ஒங்க வீட்டு எங்க வீட்டு அடியில்ல செம்ம அடிபோட்டிட்டாங்க ஏழரை லட்சம் ரூபா கட்டினா வெளியில விடுறதா சொன்னாங்க. எங்களிட்ட எங்க காசு இருந்திச்சு அதால தண்டனையை அனுபவிச்சிட்டு வந்ததுதான். ஆனா இந்திய மீனவர்கள் வந்தா அங்க கொண்டுபோவாங்க இங்ககொண்டு போவாங்க பெறவு பாத்தா இரண்டுநாளையால அனுப்பிருவாங்க" என்றார் ஸ்ரீபன் கொஸ்தா. இந்திய மீனவர்களின் இயந்திரப் படகுகளோடு தங்களது கண்ணாடி இழைப் படகுகள் போட்டிபோட முடியாது எனவும் தாங்கள் பல முறை பலரிடம் முறையிட்டுப் பலன் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கூறுகின்றார். மீனவ சங்கத் தலைவர் அ.ஞானப்பிரகாசம் அவர்கள்.

இதைவிட கடலையே நம்பி இருக்கின்ற இந்த அப்பாவி மீனவர்கள் அறியாத ஆபத்து ஒன்று அவர்களை நோக்கி காத்திருக்கிறது. அதுதான் சேது சமுத்திர திட்டம். இதனால் இலங்கையில் பாதிக்கப்படப் போவது மன்னார் மீனவர்களே. தனியே இந்திய அரசு தனது எதிர்கால அரசியல், பொருளாதார, இராணுவ நலன்களை கவனத்தில்கொண்டு நடை முறைப்படுத்தப்போகும் இத்திட்டத்தால் பாதிக்கப்படுவது அப்பாவி மீனவர்கள் மட்டுமே. இந்தியா கடலில் கிண்டப்போகின்ற குழி இலங்கை குறிப்பாக மன்னார், இந்தியாவினுடைய சில கரையோரப் பிரதேச மீனவர்களின் வாழ்க்கை அதில் மூழ்கப்போகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மையே. சேது சமுத்திர திட்டத்தால் மீன்வளம் வெகுவாகக்குறைய மேலும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தலைமன்னார் கடற்பகுதியில் அதிகரிக்க போகின்றது. இதனால் ஏற்கனவே உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டு இருந்த மன்னார் மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படப்போகிறார்கள். பெருமளவான இந்திய மீனவர்கள் இயந்திரப்படகுகளை பாவிப்பதால் இந்தியக் கடற்பரப்பில் மீன்வளம் குறைந்து போயுள்ளது. இதனால் தற்போது அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து அத்துமீறி மீன்பிடித்துச் செல்கின்றனர். இந்நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தால் மேலும் கடல் சூழல் அசாதாரணமாக்கப்படுவதால் மீன்வளம் மேலும் குறைவடையப்போகிறது. இதன் விளைவு பெருமளவான இந்திய மீனவர்கள் மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறப் போகிறார்கள். அதனால் மன்னார் மீனவர்களின் இந்தத் துயரம் தொடர்கதையாய் அமையப்போகிறது.

நன்றி:- ஈழநாதம்.

Labels: , ,