« Home | ஆனையிறவும் அந்த நாட்களும்... » | மன்னார் மீனவரின் துயரம் » | சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள் » | கௌசல்யன் மருத்துவமனையின் பணி » | வணக்கம். »

அமைதியை நோக்கிய சூடான் மக்களின் பயணம்.

ஒரு சிறப்புப் பார்வை.

நிம்மதிப் பெருமூச்சை சூடான்மக்கள் விடத்தொடங்கியிருக்கிறார்கள். ஆபிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடு சூடான்தான். 4000 மைல்கள் அலைந்துகொண்டு வரும் நைல் நதியால் அதன் நிலப்பரப்புக்கள் வளம் கொழிக்கின்றன. தென்சூடானில் ‘கறுப்புத் தங்கம்' அதாவது எண்ணெய்வளம் உள்ளது. மனித நாகரீகத்தின் தொட்டில் என்று வர்ணிக்கப்படுவதற்கு இயூபறேற்ஸைவிட சூடானே மிகப் பொருத்தமானது எனக்கூறும் அளவுக்கு புராதனமான வரலாற்றைக் கொண்டது. சூடானினுடைய வரலாறு எவ்வளவுக்குப் புராதனமானதோ அந்த அளவுக்கு அதன் துன்பங்களும் புராதனமானவைதான்.

17ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வடக்கே எகிப்திலிருந்து வந்த அரபு முஸ்லிம்கள் சூடானைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அதற்கு முன்பே கிறிஸ்தவ சமயம் சூடானில் பரவியிருந்தது. பல ஆதிவாசி அரசுகள் இப்படி கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றப்பட்டிருந்தனர்.
வடக்கே காட்டூமைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த முஸ்லிம் பெரும்பான்மை அரசுகள் தெற்கை அடிமை நாடாகவே பார்த்தன. அடிமைகளை பிடிக்கும் களமாகவே பார்த்தன. 18ம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் பிரித்தானியா 'காட்டூமை'க் கைப்பற்றியது. 1899ம் ஆண்டில் சூடானை கூட்டாக ஆட்சி செய்வதற்கென பிரித்தானியாவும் எகிப்தும் செய்துகொண்ட ஒப்பந்தம் சூடான் தேசியவாதிகளின் கடும் எதிர்ப்புக்குள்ளானது.


1945ம் ஆண்டளவில் எகிப்தோடு சூடான் இணையவேண்டும் என்று கோரும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியும் (NUP) நிபந்தனையற்ற சுதந்திரத்தைக் கோரும் உம்மா கட்சி (UP) சூடானில் உருவாகியிருந்தன.

அரபு முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடசூடானில் 22 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். ஆபிரிக்கக் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென்சூடானில் 8 மில்லியன் மக்கள் உள்ளனர். பிரித்தானிய ஏகாதிபத்தியம் வடக்கு, தெற்குச் சூடான்களை வேறுவேறாகவே ஆண்டுவந்தது. அவர்களது வசைப்புகழ் பெற்ற 1920ம் ஆண்டின் "மூடப்பட்ட மாவட்ட" ஆட்சிமுறையின் கீழ் தென்சூடான் மக்கள் வடசூடானோடு எந்தத் தொடர்புமற்று நுகர்வோராக இருக்க ஊக்கப்படுத்தப்பட்டார்கள். இந்த மக்கள் பிரித்தானிய கிழக்காபிரிக்காவிலேயே தங்கள் உயர்கல்வியைப் பெற்றார்கள்.

வட, தென் சூடான்களிடையேயான பயணத்துக்கு கடவுச்சீட்டுக்கள் அவசியமாக இருக்கும் அளவுக்கு இந்தப் 'பிரிதாளும் கொள்கை' நடைமுறைப்படுத்தப்பட்டது. சூடானுக்கு சுதந்திரம்வழங்க முன்னதாக தென்சூடானை என்னசெய்வது என்ற பிரச்சினை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் முன் எழுந்தது. அதற்கு சூடானில் நிலவிய பல்பரிமாண முரண்பாடுகளே காரணமாய் அமைந்தன.

(01) உண்மையைச் சொல்லப்போனால் வடசூடானில் வாழும் அரபு முஸ்லிம்களிடையே முரண்பாடுகள் உள்ளன. உதாரணமாக NUPக்கும் UPக்கும் இடையேயான முரண்பாடுகள் உள்ளன.

(02) தெற்கில் வாழும் ஆபிரிக்க கிறிஸ்தவர்களிடையே முரண்பாடுகள் இருக்கின்றன. எனினும் இந்த வேறுபாடுகள் முக்கியத்துவம் பெறாத அளவுக்கு காட்டூமின் அரபு மேலாண்மை அரசுக்கு எதிராக தெற்கின் SPLM இயக்கம் மேஜர் ஜெனரல் ஜோண் கறாஸ் தலைமையில் நடத்திய போராட்டம் அமைந்தது. இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் அரசின் முயற்சியில் 1983-1995 காலப்பகுதியில் மட்டும் 1.6 மில்லியன் தென்சூடான் மக்கள் கொன்றழிக்கப்பட்டனர். தென்சூடானின் வளங்களை முடிந்தளவு சுரண்டுவதற்குக் காட்டூம் அரசு முழுமுயற்சிசெய்கிறது.

(03) சூடானிய இராணுவத்தின் முதுநிலை அதிகாரிகளான கபிரியல் தஸ்கின்யா (GAB-RIRL TANGHINYA) போளினோ மாற்றிப் (PAULINO MATIB) ஆகிய இருவரும் மேல் நைல்நதிப் பிராந்தியங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே SPLN மீது வெறுப்புக் கொண்டவர்கள் என்பது வெளிப்படையான விடயம்.

(04) சஹாரா பாலைவனம் தங்கள் மேய்ச்சல் நிலங்களைக் காவுகொண்டதைத் தொடர்ந்து சூடானின் மேற்குப் பிராந்தியமான டார்பருக்குள் புலம்பெயர்ந்த அரபு நாடோடிகளுக்கும் அந்த மண்ணின் மைந்தர்களான ஆபிரிக்கர்களுக்கும் இடையேயான முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாட்டைத் தீர்க்கும் வழியாக காட்டூம் அரசு ஜஞ்ஞாவிட் துணை இராணுவப் படையைப் பயன்படுத்தியதில் ஏற்பட்ட வன்முறைகளில் 400,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் ஆகக் குறைந்தது 150,000 பேராவது காட்டூம் அரசு ஆதரவிலான ஜஞ்ஞாவிட்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அல்லது காணாமற் போயிருககிறார்கள். வல்லுறவுக் கொடுமைகளுக்கு பல ஆயிரம்பெண்கள் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். வல்லுறவு என்பது மக்களின் உளவுரணை உடைப்பதற்கான ஒரு போராயுதமாகவே அங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தங்கள் வாழ்விடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு பல நூறாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர அவர்களின் வாழ்விடங்களை ஜஞ்ஞாவிட்கள் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அவர்களது 'கலாச்சாரம் சேதப்பட்டிருக்கிறது' என்று வோஷிங்ரனில் இருந்து செயற்படும் நீதிக்கான சர்வதேச இயக்கம் (INTERNATIONAL JUSTICE) கூறியுள்ளது.

(05) இவை எவற்றுள்ளும் சேராமல் மத்திய சூடான் பகுதிகளிலும் பதட்டம் நிலவுகிறது. பிரித்தானியர் சூடானுக்குச் சுதந்திரம் வழங்கிய 1956ம் ஆண்டு காலப்பகுதியில் தெற்கில் அரசியற் கட்சிகள் எதுவும் உருவாகியிருக்காத்தைச் சாட்டாக வைத்து சுயநிர்ணயச் செயற்பாட்டில் தெற்கு மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். 'தென் சூடான் கொள்கையைக் கைவிட்ட பிரித்தானியர்கள்' இரு சூடான்களையும் அரபு மேலாண்மைக் காட்டூம் அரசிடம் கையளிப்பதை அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது என்று தெரிந்து கொண்டே செய்ததன்மூலம் தெற்கு மக்களின் முதுகில் குத்தினார்கள். சுதந்திரம் கிடைத்ததைத் தொடர்ந்து சமஷ்டி அரசு அமைப்பதான வாக்குறுதியை காட்டூம் அரசு காற்றில் பறக்கவிட்டது. இதை எதிர்த்தே SPLM இன் போராட்டம் ஆரம்பமானது. 1991இல் இருந்து அண்ணளவாக இரண்டு வருடங்களுக்கொருமுறை என இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 2002, யூலையில் மக்காகொஸ் ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன.

இந்த 7 அம்ச ஏற்பாடுகளில் முக்கியமான அம்சங்களாக, தென்சூடானுக்கு 6 வருட இடைக்கால சுயாட்சியை வழங்குவதும் ஆறுவருட முடிவில் காட்டூம் அரசினால் தொடர்ந்து ஆளப்படுவதா அல்லது பிரிந்து செல்வதா? என்று தென்சூடான் மக்களிடையே கருத்துக்கணிப்பு இடம்பெறும் என்பதும் இருக்கின்றன. பேசித் தீர்மானிக்க வேண்டிய விடயங்களில் முக்கியமானவையாக வளப்பகிர்வும் அதிகாரப் பகிர்வும் எப்படி அமைய வேண்டும் என்பது இருக்கின்றது.



(2002 வரையான சூடான் மற்றும் டார்பர் பிரச்சினைகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு ‘விடுதலைப் புலிகள்' இதழின் தை, 2004 இதழிலுள்ள “ஆக்கிரமிப்பிலிருந்து மீளும் தென்சூடான்" மற்றும் ஆவணி, 2004 இதழிலுள்ள “சர்வதேச மயமாகும் டார்பர்பிரச்சினை" ஆகிய கட்டுரைகளைப் பார்க்கவும்.)

மக்காகொஸ் ஏற்பாடுகளைத் தொடர்ந்து 30 மாதங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 2005, ஜனவரி 9ஆம் திகதி ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் தென்புலத்தவர்கட்குப் பெரும் வெற்றி என்று ஆய்வாளர்கள் வர்ணித்திருக்கின்றார்கள். இந்த ஒப்பந்தம் பல்வேறு விதங்களில் ஒரு வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படுகிறது.

* முதலாவதாக, ஆபிரிக்காவின் மிக நீண்ட போரை அது முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. 1983இல் அடிஸ் அபாபாவில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைக் காட்டூம் அரசு ஒருதலைப்பட்சமாகக் கைவிட்டதால் தூண்டிவிடப்பட்டதாக இந்த நீண்டபோர் இருக்கிறது.

** இரண்டாவதாக, தென்சூடானியர்களின் உண்மையான துன்பங்களுக்குத் தீர்வு காண்பதன்மூலம் முரண்பாட்டை நியாயமான முறையில் தீர்ப்பதற்கு அது வழிவகுத்திருக்கிறது.

*** மூன்றாவதாக, கடந்த 15வருட காலமாக நாட்டை ஆட்சிசெய்யும் சர்வாதிகாரப் போக்கான ஆட்சிமுறைக்குப் படிப்படியாக முடிவு கட்டும் விதத்தில் ஆட்சித்துறையில் உணரப்படக்கூடிய சனநாயக ரீதியான மாற்றங்களை அது எதிர்வு கூறியிருக்கிறது. சூடானை மீள்கட்டமைப்புச் செய்வதற்கான ஓர் ஆரம்பப்புள்ளியாக அது அமைகிறதெனினும் மாற்றத்துக்கான ஊக்கியாகவும் அது காணப்படுகிறது.

இந்த ஒப்பந்தமானது முன்னெப்போதுமில்லாத அளவுக்குத் தென்புலத்தின்மீது பிரமாண்டமான அதிகாரங்களை SPLM இற்கு வழங்குகிறது. இதற்கு அந்த அமைப்பு தனது ஒருமைப்பாட்டைப் பேணுவதோடு தன்னை ஒரு அரசியல் கட்சியாக மாற்றிக்கொண்டு சனநாயக ஆட்சிமுறை பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டும். டிங்கா இனத்தவர்கள் மேலாண்மை கொண்டுள்ள SPLM ஆனது சூடானிய இராணுவத்தோடு சமாந்தரமாகச் செயற்படும் என்பதோடு ஏனைய துணைப்படைகள் மற்றும் ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் முதலியவை காட்டூமில் தேசிய அரசு ஏற்படுத்தப்பட்டு 12 மாதங்களினுள் ஒன்றில் SPLM உடன் அல்லது சூடானிய இராணுவத்துடன் இணைந்துகொள்ள வேண்டும்.

இந்த ஒப்பந்தப்படி காட்டூம் அரசும் SPLM உம் எண்ணெய்வள வருமானத்தை 50:50 அடிப்படையில் பகிர்ந்துகொள்வார்கள். தேசிய ஒருமைப்பாட்டு அரசு காட்டூமில் உருவாக்கப்பட்டதும் தொடங்கும் இடைக்கால ஆட்சியில் SPLM இன் தலைவர் மேஜர் ஜெனரல் ஜோண் கறாங் முதலாவது உப ஜனாதிபதியாகப் பதவி ஏற்பார். கென்யாவின் முன்னாள் ஜனாதிபதியான டானியல் அறாப் மொய் (DANIEL ARAP MOI) உருவாக்கிய மொய் ஆபிரிக்கா மையத்தின் ஏற்பாட்டில் நைரோபியில் இடம்பெற்ற தெற்கு - தெற்கு ஒப்புரவு மகாநாட்டில் தெற்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்களுக்கு கறாங் ஒலிவ் கிளையை நீட்டியிருக்கின்றார்.

"இங்கு பிரசன்னமாயிராத ஆயுதம் தரித்த குழுக்களை இணைவுக்கென வரவேற்க SPLM காத்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். இந்த ஒப்பந்தத்தில் யார் கையெழுத்திட்டார்கள், யார் அதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள் என்பதெல்லாம் முக்கியமல்ல. இது உங்களுடைய சமாதானம் இந்தப் பேச்சுவார்த்தைகளை எங்களுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து மீள ஒப்புரவாகி ஒருவரை ஒருவர் மன்னித்து எமது பிணைப்பை வலுப்படுத்திக்கொள்வோம்"
என்று அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஆறுவருட இடைக்கால ஆட்சியின் பின் தென்புல மக்கள் ஒருகருத்துக் கணிப்பு மூலம் சூடானின் ஒரு பகுதியாகத் தொடர்ந்தும் இருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்று தீர்மானிப்பார்கள். தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் 60 உறுப்பினர் கொண்ட தேசிய அரசியலமைப்பு மீளாய்வு ஆணைக்குழுவில் ஜனாதிபதி ஓமார் அல் பெசீரின் தேசிய காங்கிரஸ் (NC) கட்சிக்கு 52 ஆசனங்களும் மேஜர் ஜெனரல் கறாங் தலைமையிலான SPLM இற்கு 28 ஆசனங்களும் ஏனைய தரப்பினர் களுக்கு 20 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த 20 பிரதிநிதிகளுக்கு முடிவுகளைத் தடைசெய்யும் அதிகாரம் இருக்காது. இந்த ஒதுக்கீடுகள் குறித்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன. ஆசனங்கள் வடக்குத் தெற்குக்கென ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமேயொழிய அரசியல் கட்சிகளுக்கு அல்ல என்று சனநாயக முறையில் இறுதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதி பதியான சாதில் அல் மாஹ்தி கூறியிருக்கிறார்.



ஏனைய தரப்புக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் போதாது. மீள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்று ஆயுதம் தாங்கிப் போரிட்ட ஏனைய குழுக்கள் கோரியுள்ளன. சிறையிடப்பட்ட ஹஸன்-அல்-துராபி (HASSAN-AL-TURABI) தலைமையிலான மக்கள் காங்கிரஸ் போன்ற சில அமைப்புக்கள் இவ்வொதுக்கீட்டில் திருப்தியில்லாத போதிலும் அரசியலமைப்புச் செயற்பாட்டில் பங்கெடுக்கப்போவதாக அறிவித்துள்ளன. இதற்கிடையே டார்பரில் போர்க் குற்றங்கள் புரிந்தவர்களை ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1593ம் இலக்க தீர்மானம் இந்தப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட ஆபிரிக்க யூனியன் எடுக்கும் முயற்சிகளைக் கணக்கிலெடுக்காததாக இருக்கிறது என சூடான் முறைப்பட்டுள்ளது.

இவ்வாறு சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கென 50 பேரின் பெயர்கொண்ட பட்டியல் ஒன்றை ஐ.நாவின் சிறப்புக் குழுவொன்று தயாரித்துள்ளது. தெற்கில் ஏற்பட்ட போருக்கு தென்புல மக்களை காட்டூம் அரசு கவனிக்காமல் விட்டதே காரணமாக அமைந்தது. கென்யா- உகண்டா - றுவாண்டா ஆகிய நாடுகளின் மொத்தப் பரப்பளவினதான தென்சூடானில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நகர மான ஜுபாவில் 12 கிலோமீற்றர் தூர வீதிக்கு மட்டும் தார் போடப்பட்டிருக்கிறது என்பதை வைத்து தென்சூடானின் அபிவிருத்தி எந்த அளவுக்கு அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். திருச்சபையும் அரசசார்பற்ற நிறுவனங்களும் உருவாக்க முயன்றுகொண்டிருப்பவை தவிர வேறு பாடசாலைகளோ அல்லது மருத்துவமனைகளோ அங்கு இல்லை.

‘சர்வதேச சமூகம் உண்மையி லேயேசூடானின் ஒருமைப்பாட்டை முன்னெடுக்கவும் அதற்கு அனுசரணையாக தென்சூடான் மக்களை 2011ம் ஆண்டில் வாக்களிக்க ஊக்கப்படுத்தவும் விரும்பினால் முதலில் அது இந்த ஒப்பந்தத்தை (வலுமிக்க ஐ.நா படை போன்ற பாதுகாப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் பொறியமைப்பு மூலம்) நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துவதோடு தென்புலத்தில் நிலவும் அபிவிருத்திக் குறைபாட்டை நிரவிக்கொள்ள (மத்திய ஆட்சி மட்டத்தில் தென்புலத்தோரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான மேலதிக முயற்சிகள் உள்ளிட்ட) உதவிகளை தென்சூடானிய மக்களுக்கு அளிக்கவும் வேண்டும். இப்படிச் செய்யும்போது தெற்கில் சனநாயக ஆட்சிமுறைக்கான தேவை மற்றும் தென் சூடானின் விருப்பை மதித்து பிரிவினை ஏதுநிலையை நடைமுறைப்படுத்தவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.'
என்று கிளிஞ்ஜென்டேல் முரண்பாட்டு ஆய்வுகள் பிரிவின் (CLINGENDAEL CONFLICT RESEARCH UNIT) முதுநிலை ஆய்வாள ரான கலாநிதி எமறிக் றோஜியர் (Dr. EMERIC ROGIER) கூறியுள்ளார்.

ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால் மேற்படி அமைதி முயற்சிகள் வெற்றி பெறுவதற்குள்ள தடைகள் நீக்கப்பட்டு தென்சூடானின் பல நூற்றாண்டுகால அடிமைத் தளைகள் களையப்பட்டு தற்போதைய நிம்மதிப் பெருமூச்சுகள் நிரந்தரமானவையாக ஆகவேண்டும். அந்த ஏதுநிலைக்கு வாய்ப்பில்லாது போனால் கலாநிதி எமறிக் றோஜியர் சொல்வதுபோல் பிரிவினை ஏதுநிலையை சர்வதேச சமூகம் உறுதியாக நடைமுறைப்படுத்துவதன் மூலமாவது இந்த நிம்மதிப் பெருமூச்சுக்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும்.

-வி. அருளாளன்.-
நன்றி:
விடுதலைப் புலிகள் -குரல் 123.

Labels: , ,

எனக்கு ஜமால் அப்துல் நாசர் என்றொரு சூடான் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் மூலம் சூடானைப் பற்றி தெரிந்திருந்தாலும் இவ்வள்வு விரிவாகத் தெரியச் செய்தமைக்கு நன்றி., அரபி தெரிந்திருக்கும் என் நண்பனுக்கு தமிழ் தெரிந்திருந்தால் இப்பதிவிற்காக உருகி இருப்பார். Jamal 'தாலகொய்' and Read this., It's about yr. place. I am remembering yr. words "EAST OR WEST SUDAN IS BEST".

இப்பதிவிற்கு நன்றி.

Post a Comment