« Home | பொஸ்பரஸ் தொடங்கி ஒற்றைத் துப்பாக்கி வரை... » | சேது சமுத்திரம் கால்வாய்த்திட்டம் » | அமைதியை நோக்கிய சூடான் மக்களின் பயணம். » | ஆனையிறவும் அந்த நாட்களும்... » | மன்னார் மீனவரின் துயரம் » | சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள் » | கௌசல்யன் மருத்துவமனையின் பணி » | வணக்கம். »

புதிய தரிசனம் -ஓர் அறிமுகம்.

சிறு பத்திரிகையின் வரலாறு என்பது தமிழ் பத்திரிகை உலகில் "நம்பர் வண்" என மகுடமிட்டு வீரக்கதைகள் கதைக்கும் விடயம் அல்ல.
இரவுத் திருவிழா பார்க்க பௌடர் பூசி சிங்காரமாக அலங்கரித்துப் புறப்பட்டு பாதி இரவில் படுத்துறங்கும் சிறுபிள்ளை போல பல்வேறு சிறு பத்திரிகைகள் தொடங்கி, சரிந்து, அழிந்து போன தடங்கள் பல எம் மண்ணில் உண்டு.

எனினும் பல விடாக்கண்டர்கள் தொடர்ந்தும் சிறு சஞ்சிகை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அவ்வாறான அவர்களது விடாமுயற்சியின் காரணமாக அற்ப ஆயுளில் மறைந்தாலும் பல நல்ல சிற்றேடுகளும் அவற்றின் படைப்புக்களும் இன்றும் பலராலும் பேசப்பட்டே வருகின்றன.

எனினும் சிலர் இத்தகைய சிறு பத்திரிகைகளை அல்லது சிறு வெளியீடுகளை தமது மன அரிப்புக்களைத் தீர்த்துக்கொள்வதற்காகப் பயன்படுத்தி வருவதையும் நாம் அவதானிக்கலாம். என்றாலும் கூட இவ்வாறான ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால் சிறு பத்திரிகைகளில் வரவும்,வளர்ச்சியும் காணப்படுகின்றன.

"ஒவ்வொரு சிறு பத்திரிகையின் முதலாவது இதழும் வெளியிடுகின்ற அறிவிப்பு எவ்வளவு நம்பிக்கையை, எவ்வளவு ஆசைக் கனவுகளை, எதிர்பார்ப்புக்களை எல்லாம் முழக்கமிடுகிறது. ஆனால் அவை பொய்த்துப் போகும்படி காலம் விளையாடி விடுகிறது. தன்னம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் உழைக்க முனைந்தவர்களின் செயற்பாடுகள் பலவும் மறதிப் பாழில் மங்கிப்போகின்றன. அது நியாயமில்லை. ஏதோ ஒரு உத்வேகத்தில் பணிபுரியத் துணிந்தவர்களின் சோதனைகள், சாதனைகள் குறித்து அவர்களுக்குப் பின் வருகிறவர்கள் அதே பாதையில் நடைபோட வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்"
என்று தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற நூலில் வல்லிக்கண்ணன் அவர்கள் குறிப்பிடுகிறார்.
"இதற்கு இலக்கிய வீதியின் வழி பயணிக்கும் ஆரம்பப் பயணிகளாகிய நாம் உங்கள் கரங்களில் ஐந்தாவது இதழை ஆண்டு மலராய்ச் சேர்ப்பிக்கிறோம்" என்ற ஆசிரியரின் கருத்துடன் "புதியதரி சனம் மே, யூன் 2005" இதழ் வெளியாகியுள்ளது. "தோற்பன தொடரேல்" என்று ஒளவையார் கூறினாலும் எமது இப்பயணத்தில் சில தோல்விகளும் இடையூறுகளும் தழுவினாலும் அவற்றை விலக்கி வீறு கொள்கிறது எமது பயணம். இடைவெளிகள் இருப்பினும் எமது இதழின் இருப்பைத் தக்க வைத்தே தீருவோம்" என மேலும் ஆசிரியர் கூறுகிறார்.

இந்த நம்பிக்கையும், உணர்வும் மிகவும் அவசியமானது. அந்த வகையில் புதிய தரிசனம் தொடர்ந்து தன் செயற்பாட்டினை விரித்து இலக்கிய வான்வெளியில் பறக்க இலக்கிய ஆர்வலர்கள் உதவவேண்டியது அவசியம்.

சி.கதிர்காமநாதன், தாட்சாயினி, ஞானரதன், வனஜா நடராஜா ஆகியோர் எழுதிய சிறுகதைகளும் கலாநிதி செ.யோகராசா, பேராசிரியர் செ.கிஸ்ணராஜா, கலாநிதி இ.முருகையன் போன்றோரின் கட்டுரைகளும் , துவாரகன் குறிஞ்சி, இளந்தென்றல் கி.அ.தில்லைதாசன், க.சாரங்கன், கு.வினோதரன், சண்முகன், இளங்கோ முதலியோர் எழுதிய கவிதைகளும் இந்த மலரில் உள்ளன.

இது தவிர சமீபகாலமாக இலக்கிய உலகம் பறிகொடுத்த புலோலியூர் க. சதாசிவம், ஏ.பி.வி. லேமன், மருதூர்கனி, தில்லைச்சிவா, புத்தொனி ந.சிவபாதம், கே.வி நடராஜன் , சொக்கன் போன்ற படைப்பாளிகள் தொடர்பான அஞ்சலிக் குறிப்புக்களும் மலரில் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் அ.குணேஸ்வரன் அவர்களின் "காலம் ஆகிவந்த கதை" தொடர்பான அறிமுகக் குறிப்பும் கூட இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மலரின் பிரதான அம்சமும் சிறப்பான விடயமும் ஓவியர் கோ.கைலாசநாதன் அவர்களின் நேர்காணல் ஆகும். மலரின் அட்டை ஓவியம் கூட கோ.கைலாசநாதன் அவர்களால் வரையப்பட்டிருந்தாலும் கூட அட்டையின் அமைப்பும் அச்சும் அவருடைய ஓவியத்துக்கு உயிர்ப்பையும் சிறப்பையும் கொடுக்கவில்லை என்பது இங்கு வருத்தத்திற்குரிய விடயமாகும்.

இனி நேர்காணலுக்கு வருவோம். ஈழத்தில் அகவெளிப்பாட்டாளர்களில் கோ.கைலாசநாதன் முக்கியமானவர். "ஒரு தனித்துவ மான அகவெளிப்பாட்டு வெளியில் இவர் தொடர்ந்தியங்கி வருவது கவனத்திற்குரியது" எனக் குறிப்பிடும் நேர்காணலைச் செய்தவர், "ஈழத்தின் முக்கியமான அகவெளிப்பாட்டாளன் என்ற அடிப்படையிற் கேட்கிறேன், அகவெளிப் பாட்டுக்கு முறையான பயிற்றுவித்தல் அவசியமானதா?" எனக் கேள்வி கேட்கிறார். இதற்கு கோ.கைலாசநாதன் அவர்கள் கூறும் பதில் மிகவும் சிறப்பானது. கைலாசநாதன் அவர்கள் கூறுகின்றார்:

"பயிற்சி காரணமாகத் 'திறன்' வருகிறது. ஆனால் பயிற்சி காரணமாக 'கலை' என்பது வருமென்று கூறமுடியாது. வெறும் பயிற்சி மட்டும் இருந்து விட்டால் நல்ல படைப்புக்களைப் படைக்கலாம் எனக் கூறமுடியாது. படைப்பாற்றலுக்கும் படைப்புக்களைப் புரிந்துகொள் வதற்கும் மூன்றாவது கண் என்பது அவசியமாகின்றது. நாள் முழுவதும் தாமரைமலர் மேல் தவளை இருந்தாலும் அம்மலரின் அழகையும் அதில் இருக்கும் தேனையும் அதனால் நுகர்ந்துகொள்ளமுடியாது. ஆனால் எங்கிருந்தோ வரும் தேனீ இரண்டையும் நுகர்ந்துகொள்வதுடன் பறந்து விடுகின்றது. முறையான பயிற்சி அல்லது பயிற்றுவித்தல் என்பது ஒரு எல்லையுடன் நின்று விடக்கூடியது. தரிசனப் புலத்துக்குள் இவை பெருஞ் செல்வாக்குச் செலுத்தா" என்கிறார்.

புதிய தரிசனம் பகுதியில் பிரசுரமான ஒரு வாசகர் கடிதமும் கருத்தைக் கவருகின்றது. கிளிநொச்சியைச் சேர்ந்த த. சீர்மாறன் என்பவர் எழுதிய கடிதம் அது. அக்கடிதம் பின்வருமாறு அமைகிறது. தங்களின் புதிய தரிசனம் இதழ் பார்த்தேன். ஏனைய மூன்று இதழ்களைவிட இவ் இதழ் நேர்த்தி. கவிதைகளில் உயிர்ப்பில்லை. சிறுகதை "மூடுபெட்டி"யில் வீடு பாவனை வீடாகக் காட்டப்படுகிறது. சிலந்தி இல்லை. கறையான் இல்லை.வினோ வருவான் என்றும் சொல்லப்படுகிறது. பின் பிரேதமிருப்பதாகவும் அதை மறைப்பதற்கு ஏதோ அச்சத்தில் அடுக்கியிருந்த புத்தகங்கள், சஞ்சிகைகளைக் கொண்டு பிரேதத்தை மூடி ஊதுவர்த்தி கொளுத்தல் ஆனது பாழடைந்த அல்லது இடிந்த வீடாகச் சித்தரிக்கப்படுகிறது. இந்திரனின் நூதனச்சிறுகதைகளிலும் தெளிவிருக்கிறது. மனதில் எழுந்த விடயங்கள் எல்லாம் சிறுகதைகள் அல்ல. மையம் நோக்கிய குவிவு மல்ல சிறுகதை. தாட்சாயினியின் "ஒரு உரலின் வெட்டு முகம்" கதையிலும் "முடக்கு" என்றும் இடம், ஆட்கள் நடமாடும் இடம் (நடமாடாத இடம் எனக் காட்டப்படவில்லை) தெருவுக்கருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மிக அருகுப் பற்றையில் சிறுமி மீது பாலியல் வன்புணர்வில் ஒருவன் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது. யதார்த்தமா? சிலவேளை அந்த இளைஞன் புத்தி சுவாதீனமற்றவன் எனச் சொல்லியிருந்தால் சாத்தியமாகும். "போடா வெளியில்"எனும் வார்த்தைகளை வைத்துக்கொண்டு செய்யப்பட்ட கதை போலத் தெரிகிறது. சிறு கதை என்பது புரிவதல்ல விளக்குவது. இந்தப் பலவீனம் தாட்சாயினி ராகவன் போன்றவர்களின் கதைகளில் பொதுவாகத் தெரியும் ஒன்று. அடுத்து ராகவன் "எதிர்ப் பிலக்கியம் ஒரு கலாசார ஆயுதம்" என்ற நூல் விமர்சனத்தில் எதிர்ப்பிலக்கியப் போலி எழுத்தாளர்கள் என ச.முருகானந்தன், வளவை வளவன், யோ.கர்ணன் என்பவர்களைக் குறிப்பிடுகிறார். ராகவன் விடுவிக்கப்படாத பிரதேசத்தில் வாழ்பவர். அப்படிப்பட்டவருக்கு விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழ்பவர்கள் படைப்பாளர்கள், படைப் புக்கள் பற்றிய முழுமைகள் தெரியாதவர் ஓரிரு கதைகளைப் படித்துவிட்டு அவர்களை வகைப்படுத்தலானது நகைப்புக்குரியது. குறிப்பிட்டவர்களில் ஒருவர் நீண்டகாலம் போராளியாகச் செயற்பட்டு ஒரு காலையும் இந்த மண்ணுக்குக் கொடுத்தவர். அவரின் கள அனுபவங்கள் எத்தனையோ கதைகளில் புலப்பட்டிருக்கின்றன. விமர்சனம் அல்லது ஆய்வுகளுக்கு பரந்த வாசிப்பும் தேடலும் அவசியம். புதிய தரிசனம் சில போலிகளை இனங்கண்டு அவைகளைத் தவிர்த்து ஒரு நேர்வழியில் பயணிக்க வேண்டும் என எனது மடலை முடிக்கிறேன்" எனத்த.சீர்மாறன் குறிப்பிட்டுள்ளார்.

இணுவையூர் சிதம்பரச்திருச்செந்திநாதன்
நன்றி- வெள்ளிநாதம். கிளிநொச்சி.

Labels: