« Home | தாக்குதலில் 2 புலிகள் கொலை. » | சு.ப.தமிழ்ச் செல்வனின் உரை. » | ஜெனீவாப் பேச்சுப் பற்றி தமிழ்ச்செல்வன் » | திருமாவளவனின் உரை » | ஹமாஸ் வெற்றி பற்றி விடுதலைப்புலிகள் » | போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார்?: » | மறுபக்கம். » | தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்! » | மாமனிதர் ஞானரதன் » | தாமோதரம்பிள்ளை நினைவுக்கட்டுரை. »

சிங்களப் பேரினவாத ஊடகங்கள்.

மறுபக்கம்
கோகர்ணன் எழுதியது.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள இரவுச் செய்தியினை இடையிடை கேட்கிற வாய்ப்புண்டு. உண்மையில் தமிழ்ச் செய்திகளை விட அதிக விடயங்கள் அதில் உள்ளன. பிரசாரத்தை பொறுத்தவரை செய்திக்கும் பிரசாரத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்களே செய்திகட்டுப் பொறுப்பாக உள்ளனர் என்பது நமது ஊடகத்துறைகட்குப் பொதுவாகவும் அரசாங்க ஊடகத்துறைகட்குச் சிறப்பாகவும் பொருந்தும். இதன் விளைவாக நமது செய்தி ஒலி, ஒளிபரப்புகள் தகவல் பரிமாற்றத்தின் மிகத் தாழ்ந்த மட்டங்களில் சஞ்சரிக்க வேண்டியுள்ளது. என்றாலும் அதிகாரிகள் எள் என்று சொல்ல முதலே எண்ணெய் வழியக்கூடியவர்கள் தமது ஊடகங்களின் நம்பகத் தன்மையைக் கற்பனை உலகிற்குமப்பால் கொண்டு போகக் கூடியவர்களாக விளங்குகிறார்கள்.

சென்ற சனாதிபதித் தேர்தலின் போது ரூபவாஹினியின் சிங்களச் செய்தி ஒளிபரப்புக்கான நேரம் கால் மணி நேரத்தாற் கூட்டப்பட்டது. சில காலமாகவே செய்தியின் பின்னர் ஸோதிஸி எனும் `செய்தி ஆய்வு' நிகழ்ச்சி நடைபெறும். இவற்றிலெல்லாம் செய்தி என்ற பேரில் மகிந்த ராஜபக்‌ஷவுக்கான தேர்தல் விளம்பரங்கள் ஆதிக்கஞ் செலுத்தின. தேர்தல் முடிந்த பின்பு, பேரினவாத பிரசாரம் செய்திக்குப் பிந்திய நேர இடைவெளிகளைப் பிடித்துள்ளது. சிங்களப் பத்திரிகைகளின் ஆசிரியர் தலையங்கங்கள் அந்த நேரத்தில் வாசிக்கப்படுகின்றன. சிங்கள விஷமத்தனத்தின் குரலான திவயின எனும் நாளேட்டின் ஆசிரிய தலையங்கங்களை இரண்டு தடவை கேட்டேன். இம்மாத நடுப்பகுதியில் லங்காதீப தலையங்கமொன்றைக் கேட்டேன்.

இவற்றின் முக்கியத்துவமென்ன? இவற்றுக்கான தேவை என்ன? இந்த ஏடுகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தினமினவை விட வித்தியாசமானவை, தினமின சிங்களப் பேரினவாத நிலைப்பாட்டை உடையது என்பது உண்மை. எனினும், பத்திரிகை என்ற முறையில், பேரினவாத இனவெறியைத் தூண்டுகிற நோக்கில் அது திட்டமிட்டு இயங்குவதில்லை. அதன் பேரினவாதம், அரசாங்கத்தின் பேரினவாதம் போலவே, தன்னை வெறித்தனமாக வெளிப்படுத்திக் கொள்ளுவதில்லை. அப்படியானால் இன்னொரு அரசாங்க ஊடகமான ரூபவாஹினி ஏன் தீவிரமான சிங்கள இனவெறியைப் பரப்புகிற சிங்கள ஏடுகளின் ஆசிரிய தலையங்கங்கட்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்?

லங்காதீப தலையங்கம் மிகவும் அருவருப்பூட்டுவதாக இருந்தது. அதில், தமிழ்ப் பாராளுமன்ற அரசியல் தலைவர்கள் அண்மைக் காலங்களில் தமிழ் மக்கள், ஆயுதப்படையினராலும் அதிரடிப்படையினராலும் ஆயுதப்படையினரது பாதுகாப்பில் இயங்கும் கூலிப் படையினராலும் கொல்லப்படுவதைக் கண்டிப்பதையிட்டுக் கோபம் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீலன் திருச்செல்வம் முதல் கதிர்காமர் வரையிலானவர்களைக் கொன்ற விடுதலைப் புலிகளைக் கண்டிக்காதவர்கள் என்று அவர்கள் கடுமையாக நிந்திக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளைக் கண்டிப்பதற்கும் ஒரு கொலையைக் கண்டிப்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்குறிப்பிட்ட கொலைகளை நியாயப்படுத்தியதாக நினைவில்லை. அவற்றையிட்டுத் தமது மனவருத்தத்தையாவது தெரிவித்தனர். நிச்சயமாகச் சிங்களப் பேரினவாத ஊடகங்கள் எதிர்பார்க்கிற விதமாக அவர்கள் கண்டனப் பிரசாரத்தில் இறங்கவில்லை.

நம் முன்னாலுள்ள பிரச்சினை, சாதாரண மக்கள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள ஆயுதபாணிகள் அம் மக்கள் இது மூர்க்கத் தனமான தாக்குதல்களைத் தொடுப்பது பற்றியது; ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக எந்த விதமான அடிப்படையோ ஆதாரமோ இல்லாமல் தேடுதலுக்கும் சுற்றி வளைப்புக்கும் ஆளாக்கப்படுவதும் அல்லற்படுத்தப்படுவதும் பற்றியது; ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகக் காரணமின்றிச் சிறைபிடிக்கப்பட்டு விசாரணையின்றி மறித்து வைக்கப்பட்டிருப்பது பற்றியது; ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தோர் என்பதால் இடப்பெயர்வுக்குட்படுவது பற்றியது.

இந்நாட்டின் வரலாற்றை இருபத்தைந்து நூற்றாண்டுகள் முன்பு நாடுகடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு இளவரசனின் வருகையிலிருந்து தொடங்குகிறவர்களுக்கு இலங்கையின் பேரினவாதத்தின் வரலாற்றை ஏன் அதன் தொடக்கப் புள்ளிகளினின்று பார்க்க இயலாமலுள்ளது? இலங்கையின் முதலாளி வர்க்கத்தின் எழுச்சியையொட்டியே நவீன சிங்களப் பேரினவாதம் உருப்பெற்றது. அந்த வர்க்கத்தின் நலனுக்காகவே தொண்ணூறு ஆண்டுகள் முன்னம் முஸ்லிம்கள் மீது கடுமையான காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதைக் கண்டுக் காணாமல் இருக்கவிரும்பிய பொன்னம்பலம் இராமநாதன் போன்றவர்களது வர்க்க நலன்கள் பேணப்பட்டன. ஆனால் சிங்களப் பேரினவாதம் தன் முதலாளிய அரசியல் அதிகாரத்தில் அவர்களுக்குச் சரியாசனம் வழங்க ஆயத்தமாக இருக்கவில்லை. இன்றுவரை இதுதான் நமது தமிழ்ச் சான்றோரின் ஆதங்கம். அது பல வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், கடைந்தெடுத்த சிங்களப் பேரினவாதிகள் அவர்களைக் குறுகிய தமிழ்த் தேசிய வாதிகளாகவும் தமிழரின் பிரிவினைவாதத்திற்கு வித்திட்டவர்கள் என்றும் கூசாமல் குற்றஞ்சாட்டுகிறது. உண்மையில் தமிழ் மக்களின் தமிழீழ கோரிக்கை அடுக்கடுக்கான ஒடுக்குமுறைகளதும் பாரபட்சத்தினதும், பின்னர், குறிப்பாக, அரசாங்கப் படைகள் வடக்கிலும், கிழக்கிலும் வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் அன்றாட வாழ்வுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்த சூழ்நிலையிலேயே ஒரு வலுவான வடிவம் பெற்றது.

சிங்களப் பேரின வாதிகள், வசதி கருதி, இடைக்கிடை 1983 வன்முறைக்காக ஜயவர்த்தன ஆட்சியை விமர்சிக்கலாம், யூ.என்.பி.யினராயின் அதை மழுப்பலாம். ஆனால் உண்மையிலேயே அவர்களில் எவரும் நாட்டில் ஒரு பாரிய தேசிய இனப்பிரச்சினை இருக்கிறதாக நம்ப விரும்பவில்லை. ஏனெனில் அந்த அணுகுமுறை அவர்கள் விரும்பாத ஒரு தீர்வை நோக்கி இந்த நாட்டை நகர்த்தக் கூடும். எனவே, அவர்கள் நாட்டில் தேசிய இனப் பிரச்சினையை ஒரு பயங்கரவாதப் பிரச்சினையாக விடுதலைப் புலிகள் பற்றிய பிரச்சினையாக காணவே விரும்புகிறார்கள். அதன் விளைவாகவே, தமிழ் மக்களைப் பாதிக்கிற எந்த விடயமாயினும் அது விடுதலைப் புலிகளையோ `நாட்டின் பாதுகாப்பையோ' எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு அப்பால் அவர்களது கணிப்புகள் போகத் தவறி விடுகின்றன.

தமிழ் மக்கள் முன்னெப்போதும் இல்லாதளவு புறக்கணிப்புக்கு முகங்கொடுத்து வருகின்றனர். போர் நிறுத்தமும் புரிந்துணர்வு உடன்படிக்கையும் சில வணிக நலன்கட்டு உதவியுள்ளவுக்கும் அந்த வணிக நலன்களின் மூலம் குடாநாட்டில் ஒரு சமூகச் சீரழிவை ஏற்படுத்தியுள்ளவுக்கும் தமிழ் மக்களுக்கு இவ்வளவு காலமாக மறுக்கப்பட்ட சமூகத் தேவைகளில் எதையுமே நிறைவு செய்யவில்லை கல்வி, தொழில்வாய்ப்பு, பண்பாட்டு விருத்தி, தொழில் விருத்தி போன்ற ஒவ்வொரு துறையிலும் தமிழ் மக்கள் கடுமையான புறக்கணிப்புக்குட்படுகின்றனர். தமிழிலே செயற்பட வேண்டிய இடங்களிலெல்லாம் ஆட் பற்றாக்குறை நிலவுகிறது. நியமனங்களில் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் அடையாளங்கள் மூலம் சிறுபான்மைத் தேசிய இனத்தவரிடையே பிளவுகளைப் புகுத்தி அரசியல் சில்லறை வியாபாரிகள் ஆதாயந் தேடுகின்றனர்.

ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் 1983 வன்முறையின் பின்பு மிகக் கேவலமாக நடந்து கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு மாறாக அவ்வன்முறையைச் சிங்கள மக்களின் நியாயமான கோபம் என்று விளக்கிப் பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முற்பட்ட ஜனாதிபதினதும் முக்கிய அமைச்சர்களதும் உரைகள் ஒளிபரப்பப்பட்டன. மாற்றுக் கருத்து எதற்குமே இடமிருக்கவில்லை. சில காலமாக ரூபவாஹினியின் நடத்தையை நோக்கும் போது இந்த இருபது சொச்சம் ஆண்டுகளில் எதுவுமே திருந்தியுள்ளதாக தெரியவில்லை.

அடியாழத்தில் உள்ள வன்மம் காலத்துக்கு காலம் வெளியே விஷமாகக் கக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் தமது கருத்தாகச் சொல்லத் திராணி இல்லாத செய்தி ஆசிரியர்கள், வசதியாக திவயினதும், லங்காதீபவினதும் கஞ்சல் தொட்டிகளிலிருந்து எதையெதையோ கொண்டு வந்து காண்போர் முன் படைக்கிறார்கள். இதுவரை, அரை நூற்றாண்டுக்கு மேலாக சிங்கள மக்களுக்கு ஊட்டப்பட்டு வந்த நஞ்சின் காரணமாகவே இந்த நாடு பிளவு பட்டுக்கிடக்கிறது என்ற உண்மையையும் அதில் சிங்கள பேரினவாத ஊடகங்களின் பங்கு கணிசமானது என்ற உண்மையும் இந்த ஊடகப் பேரினவாதிகட்கு விளங்காது.

இந்த நாட்டைப் பிரிக்கும் படி தமிழ்ப் பாராளுமன்றக் கட்சிகள் கேட்டது உண்மை. போராளி இயக்கங்கள் ஆயுதமேந்தியதும் உண்மை. பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட ஆயத்தமாகி விடுதலைப் புலிகள் பேச முன்வந்ததும் பின்பும், அந்த வாய்ப்பைக் கைநழுவ விட்டதில் அரசியல் தலைவர்களினளவுக்குச் சிங்கள ஊகடத் துறையினருக்கும் ஒரு பெரும் பங்குண்டு. அரசியல் வாதிகள் வாக்குகளைப் பெறவும் ஊடகவியலாளர்கள் வாசகர்களைக் கவரவும் பயன்படுத்துகிற மலிவான ஆயுதங்களிற் பேரினவாதமும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இது அரசியற் கள்ளச்சந்தை வணிகர்கட்கு ஏற்றது என்றாலும் அரசாங்கம் என்ற பொறுப்பில் அமர்ந்து கொண்டு கொஞ்சம் நிதானமாக நடக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியர்கட்கு மட்டுமல்ல, அவர்களது பேரில் அலுவல் பார்க்கிறவர்கட்கும் உண்டு.

திவயின, ஐலண்ட் போல ஏடுகளின் அளவுக்குத் தாழ்ந்து போக ரூபவாஹினிக்கு என்ன கட்டாயம்? ஒரு ஊடகம் தனது மரியாதையை இழக்க சில சமயம் ஒரேயொரு செய்தியறிக்கையே கூடப் போதுமானதாயிருக்கலாம். இழந்ததை மீட்க பல ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டும். இது தெரியாதவர்கள் ஊடகத்துறையில் பொறுப்புகளிலிருந்து வருவதாலேயே எங்கள் ஊடகங்களின் தரம் பாதாளத்திலிருந்து அதலபாதாளத்திற்கு பாய்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நாடு மீண்டும் ஒரு முறை இரத்தக் களரியானாலோ, இரண்டாகவோ பலவாகவோ பிளவுண்டாலோ பேரினவாதிகளும் பழி சொல்ல நிறையப் பேர் உள்ளனர் - உண்மையான குற்றவாளிகளைத் தவிர.

உண்மையைச் சொல்ல விரும்பாதது போக உண்மையைச் சொல்லுபவர்கள் மீது எகிறி விழுமளவிற்கு அரசாங்க ஊடகமொன்று தீவிரமாக இயங்குகிறது என்றால், அதற்கான பொறுப்பு முழு அரசாங்கத்தினதும் தான். முதலில் அரசாங்கம் தனது பொய்களையே தனது ஆகாரமாக்கி கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுவரை அதனால் எதையும் சரிவர வழிநடத்த முடியாது.

*********************
நன்றி: தினக்குரல்.

Labels:

ajjo, singala uulakankalai patti neenkal pesuvathatku entha thakuthijum ellai. pengalai vipachatikalakavum mata manitharkalai thutokikalakavum kadukinra ungaluku otu jokijathajum ellai.unkaludaja thamil uudagangal sejkinra thutokathai vida mvarkal patavajillai.thoo,mutuhelumpullavarkal enral unmaikalai eluthunkal parpoom.ungaluku savaal vidukiren.

எழுதிக்கொள்வது: vathani

இதில் உள்ள அதிக விடயங்கள் புலிக்கும் சரியாகஅமையமுடியும்.-

9.22 7.3.2006

ஐயா அநாமதேயம்,
உங்கள் கருத்துக்கள் பேராசிரியர் சிவசேகரத்துக்குப் போகக்கடவது. முடிந்தால் உங்கள் சவாலையும் அவருக்கு அனுப்ப முயற்சிக்கிறேன்.
குறைந்த பட்சம் ஒரு புனைபெயராவது போட்டு எழுதினால் என்னவாம்? இல்லையென்றால் உங்களின் சவாலை எப்படி எதிர்கொள்வது என்று அவர் கேட்டால் நானென்ன செய்ய?

நீங்கள் ஈழத்தைச் சேர்ந்தவரென்று தெரிகிறது. "தூ" வெண்டு துப்பாதையுங்கோ. உங்கட கணிணியெல்லோ பழுதாப்போடும்?

Post a Comment