« Home | தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்! » | மாமனிதர் ஞானரதன் » | தாமோதரம்பிள்ளை நினைவுக்கட்டுரை. » | மூதூரில் தமிழ்த் தேசியப்பிரகடனம் » | ஜே.வி.பி கட்சியும் அதன் தலைமையும். » | இலங்கையில் இந்தியத் தூதுவராலயம் » | பெண் புலிகள் பற்றி றொய்ட்டர் » | வை.கோ. ஆற்றிய உரையின் ஒலிவடிவம். » | தந்தை பார்த்திருக்க மகனைக்கொன்றனர் படையினர். » | வீரமணி, வை.கோவின் உரைகள் ஒலிவடிவம் »

மறுபக்கம்.

கடந்த ஞாயிற்றுத் தினக்குரலில் வெளிவந்த கோகர்ணனின் மறுபக்கம் பத்தி.

போர்கள் படையினரை மட்டுமே பாதித்த ஒரு காலம் என்றுமே இருந்ததாக நான் நம்பவில்லை. ஏனெனின் போர்கள் வெறும் வீர விளையாட்டுகளல்ல. விவாதங்களும் விளையாட்டுப் போட்டிகளும் கூடப் போட்டியிடுகின்றவர்களை மட்டுமே பாதிக்கிற விடயங்களாக இருந்ததாகக் கூற முடியாது. எத்தனையோ விளையாட்டுப் போட்டிகள் பல பார்வையாளர்களது சாவுக்குக் காரணமாகியுள்ளன. போர்களில் மோதுகின்ற படையினரை விட மற்றவர்கட்கும் கேடு தவிர்க்கப்பட வேண்டும் என்பது பேச்சளவில் நின்று விடுகிறது. ஒவ்வொரு போரிலும் ஆயுதந்தரித்தோரை விட அதிகளவில் ஆயுதந் தரியாதோரே இறந்துள்ளனர். பல சமயங்களில் வேண்டுமென்றே இவ்வாறான கொலைகள் செய்யப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது, குண்டு வீச்சு விமானங்கள் நகரங்களை அழித்துள்ளன. ஹிரோஷிமா பற்றியும் நாகசாகி பற்றியும் நாம் அறியக் காரணம் அங்கு அணு ஆயுதங்கள் ஏற்படுத்திய பேரழிவு. அதற்கு முன்பு யப்பானும் ஜேர்மனியும் பிரித்தனியாவின் மீதும் அதன் கொலனிகள் மீதும் நடத்திய தாக்குதல்களில் பல நகரங்கள் அழிந்துள்ளன. போரில் ஜேர்மனி சரணடைந்த பின்பும் பிரித்தானிய விமானங்கள் ட்றெஸ்டென், ஹம்பர்க் ஆகிய ஜேர்மன் நகரங்கள் மீது குண்டு வீசிப் பேரழிவை ஏற்படுத்தின.

போர்களில் நாகரிகமான போர்என எதுவுமே கிடையாது. விடுதலைப் போராட்டங்களை விட்டால், தொடுக்கப்படும் எல்லாப் போர்களும் அதிகாரத்தைப் பேணுவதற்கான அடக்குமுறை பற்றியனவே. எனவேதான், போர்கள் முடிந்த பின்பு, போர்க்காலத்தில் நடந்ததைவிடக் கொடிய செயல்கள் நிகழ்ந்திருக்கின்றன.

வன்முறை விரும்பத்தகாதது. எனினும், அது நம்மிடையே இருக்கிறது. அது நம்மீது திணிக்கப்படுகிறது. எனவே, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நாம் வன்முறைக்குள் இ ழுக்கப்படுகிறோம். வன்முறை இல்லாமல் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளிலெல்லாம் வன்முறை வலிந்து நுழைக்கப்பட்டுள்ளது. இல்லாதுபோனால் , இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை ஒரு போராக விருத்தியடைந்திருக்கத் தேவையில்லை.

போர் மூலம் தீர்க்க இயலாத பிரச்சினையைப் போர் இல்லாமல் தீர்க்க இயலாத ஒரு நிலைமைக்குத் தள்ளிவிட்டதில் பேரினவாதிகட்கு மட்டுமன்றி, இலங்கையில் குட்டையைச் குழப்பி மீன்பிடிக்க முயன்று ஓரளவு வெற்றியுங் கண்ட அந்நிய சக்திகட்கும் பெரிய பங்குள்ளது. அதே சக்திகள், இன்று, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வு ஒன்றை ஆதரிப்பதாகப் பேசிக் கொண்டு, தாங்கள் விரும்புகிற ஒரு `சமாதானம்' தவிர்ந்த வேறெந்தச் சமாதானமும் ஏற்படாதபடி கவனித்துக் கொள்ளுகின்றன.

அமைதிப் பேச்சுவார்த்தைகளின்போது விடுதலைப் புலிகளிடையே பிளவை ஏற்படுத்தியதில் யூ.என்.பி. பிரமுகரான மிலிந்த மொறகொடவுக்கு ஒரு முக்கிய பங்கிருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது அமெரிக்க விசுவாசம் பற்றி எவருக்கும் ஐயம் வேண்டியதில்லை. அவர் கையில் ஒரு அமெரிக்கக் கடவுச் சீட்டு உள்ளது. விடுதலைப் புலிகளைப் பலவீனப் படுத்தித் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதும் முறியடிப்பதும் யூ.என்.பி.யின் பேரினவாத அரசியலின் தேவை மட்டுமல்ல, அது யூ.என்.பி. யின் நேரடியான எசமானனான அமெரிக்காவின் தேவையுங்கூட. அமெரிக்காவுக்கு விசுவாசமான யூ.என்.பி. அதிகாரத்துக்கு வருவதற்காக சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது அமெரிக்கா கடுமையாக முயன்றது. அதன் கணக்குப் பிழையாகி விட்டது. எனவே தமிழர்கள் மீது அமெரிக்காவின் அதிகார வர்க்கத்திற்கு கொஞ்சம் கடுப்புக் கூடியுள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷ எந்த வகையிலும் அமெரிக்காவுக்கு எதிராக எதையுமே செய்யக் கூடிய ஒருவராக இருக்கமாட்டார். இந்தியாவின் தயவை அவர் அதிகம் நாடினாலும் அமெரிக்காவுக்கு அது மிரட்சியை ஏற்படுத்துமளவுக்கு போக அவர் துணியமாட்டார். அதேவேளை, இந்தியாவுக்குள்ளேயும் அமெரிக்க சார்புச் சித்தனையுடைய ஒரு பிரிவினரது ஆதிக்கம் வலுவாகவே உள்ளதனால், அமெரிக்க நெருக்குவாரங்களினின்று அவர் தப்புவது இலகுவானதல்ல. அவரது பாதுகாப்பு ஆலோசகரான அவரது சகோதரருக்கும் அமெரிக்கக் கடவுச் சீட்டு இருப்பது, `மஹிந்த சிந்தனைக்குள்' வேறு இரகசியமான சிந்தனைகளும் அடங்கி இருப்பதன் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

எனவேதான், தமிழ் மக்கள் சென்ற ஜனாதிபதி தேர்தலின் போது மிகவும் தெளிவான, சரியான நிதானமான ஒரு முடிவை எடுத்தனர் என்று மீண்டும் கூறுகிறேன். ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்திருந்தால் இப்போது ஏற்பட்டுள்ள ஒரு போர் அபாயச் சூழல் ஏற்பட்டிராது என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ரணில் விக்கிரமசிங்க எந்த விதமான போர் நிறுத்தத்திற்கும் அமைதிப் பேச்சுக்கும் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கும் ஆயத்தமாகவிருந்தார் என்பதைச், சொற்களை வைத்து மதிப்பிடுவதைவிடச், செயல்களையும், அதைவிட முக்கியமாகச் செயலின்மையையும் வைத்து மதிப்பிடுவது மதியூகமானது. ரணில் விக்கிரமசிங்கவிடம் அதிகாரம் போயிருந்தால், அமெரிக்கா மூலம் தமிழ் மக்கள் மீது கடுமையான நெருக்குவாரங்கள் செலுத்தப்பட்டிருக்கும். அதன் விளைவுகள் நம்மை எங்கே போய்ச் சேர்த்திருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உலக மேலாதிக்கவாதிகள் போரை விரும்பினாலும் அமைதியை விரும்பினாலும், அது மக்களின் நன்மை தொடர்பான ஒரு தெரிவல்ல. அவர்கள் தமது நாட்டு மக்களைப் பற்றியும் அக்கறையற்றவர்கள் என்பதை அண்மைக்கால இயற்கைச் சீற்றங்களின் பின்பு நாம் கண்டுள்ளோம். எனவே, நாம் அந்நிய வல்லரசுகளது ஆதரவு, நல்லெண்ணம், தலையீடு என்பன பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தியா இலங்கையில் தமிழ் மக்கள் சார்பாக குறுக்கிட வேண்டும் என்று மலையகத் தலைவர் ஒருவர் அண்மையில் வை. கோபாலசாமியிடம் கேட்டுக் கொண்டார். சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்பார்கள் அரசியல் தலைவர்கள் சுரனை கெட்டிருக்கலாம். என்றாலும் தமிழ் மக்கள் அந்தளவுக்கு முட்டாள்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கிறது அதற்கு அப்பால் போகிறது.

போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்படுவது பற்றியும் உலக நாடுகளின் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாகவே போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்படுகிறது. மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்த உடன்படிக்கையில் எழுதப்பட்டவை மீறப்படுவது பற்றியே பலரது கவலைகள் உள்ளன. அண்மைக் கால வன்முறைகட்குப் பலியான வர்களிற் பெரும்பாலானவர்கள் ஆயுதப் படையினரோ விடுதலைப் புலிகளின் போராளிளோ அல்லர்.

உரிமை கோரப்படாத, சட்டவிரோதமான, முற்றிலும் நியாயமற்ற வன்செயல்கள் இன்று தமிழ்ச் சமூகத்தின்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அவற்றைத் தடுத்து நிறுத்தும் வல்லமை ஜனாதிபதிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதைவிடக் கவலை தரக்கூடிய விதமாக அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற அக்கறைகூட அவரிடம் இல்லையே என்ற ஐயம் என்னிடம் தோன்றியுள்ளது. பொதுமக்கள் மீது ஆயுதப்படையினர் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையில் திருகோணமலையில் ஐந்து இளைஞர்கள் பலியானதற்கு ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சில வாரங்கள் முன்பு யாழ்ப்பாணத்தில் நடந்தவை பற்றியும் விசாரணை நடத்தப்போவதாக ஜனாதிபதி சொன்னார்.

என்னுடைய அனுபவத்தில் எதையும் செய்யாமல் பின் போடுவதற்கு மிக வசதியான வழி, ஒரு குழுவை நியமிப்பதுதான் .ஒரு குழுவின் அளவு பெரிதாகிக் கொண்டு போனால், அதன் செயல் திறன் அதைவிட வேகமாக வீழ்ச்சியடையும். ஒரு விசாரணைக் குழு தட்டுத்தடுமாறி ஒரு முடிவை வந்தடைந்தால் அந்த முடிவை நடைமுறைப் படுத்தாமலிருக்க இன்னொரு குழுவை நியமிக்கலாம். இது ஜனாதிபதிக்குத் தெரியும். விசாரணைக் குழுக்கள் பற்றி எதையும் அறிந்த எல்லாருக்கும் தெரியும். பொதுமக்கள் மீதான வன்முறை தொடரும் என்பது பற்றியும் ஜனாதிபதிக்குத் தெரியும். அதை நிறுத்துவதற்கு அவர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் அவருக்குத் தெரியும். எனினும், அவற்றை எடுக்கத் தடையாக உள்ளவற்றை அவர் நீக்க ஆயத்தமாக இல்லை. நீக்க முயன்றால் ஒருவேளை அவரால் பதவியில் நிலைக்க இயலாது போகலாம். இது எல்லா ஜனாதிபதிகளதும் இக்கட்டான நிலையாக இருந்துள்ளது.

எனவேதான், போர் நிறுத்த மீறல்கள் பற்றிய குற்றாச்சாட்டுக்களைப் பரிமாறுவதைத் தவிர்த்து அரசியல் படுகொலைகளை உடனடியாகவே முடிவுக்குக் கொண்டுவரவும் அதை விட முக்கியமாகப் போருடன் நேரடித் தொடர்பற்ற பொதுமக்கள் தாக்கப்படுவதை முற்றாக நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை மக்கள் போராட்டத்தின் மூலமே செய்விக்க இயலும்.

போர் நிறுத்தத்தின் அதிமுக்கியமான பரிமாணம், ஆயுதந்தரித்தோரின் உயிர்களைக் காப்பதல்ல ஆயுதந் தரியாதவர்களது உயிரையும் உடைமைகளையும் காப்பதுதான்.

நன்றி: தினக்குரல்

Labels:


Get your own calendar

Links