« Home | கேணல் இறமணன் » | இரத்தம் தோய்ந்த நாளொன்றின் நினைவுகள். » | பிபிசி, உலகநாடுகளைப் புரிந்து கொள்வோம். » | திருகோணமலை வெறியாட்டம் -படங்கள் » | வாளைக் கைவிடாத சிங்கம். » | யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம். » | சிங்களப் பேரினவாத ஊடகங்கள். » | தாக்குதலில் 2 புலிகள் கொலை. » | சு.ப.தமிழ்ச் செல்வனின் உரை. » | ஜெனீவாப் பேச்சுப் பற்றி தமிழ்ச்செல்வன் »

இந்து சமுத்திரத்தின திறவுகோல் யாருக்கு?

திருகோணமலையும் அதன் அரசியலும்.
-இராச மைந்தன்.

மாகாரின் மின்கொடி மடக்கின ரடுக்கி
மீகார மெங்கணும் நறுந்துகள் விளக்கி
ஆகாய கங்கையை யங்கையி லள்ளிப்
பாகாய செஞ்சொலவர் வீசுபடு காரம்

- கம்பர்

வான்மீகி தன் புகழ்பெற்ற இலக்கியத்தை அமைக்கும்போது திருகோணமலையைப் பற்றிச் சொல்லுவதே அந்த நகரைப்பற்றி நம்மால் பெறக்கூடிய மிகப் பழைய செய்தியாக அமைகிறது. அதன் மாடிகளை ஒளியூட்டி நறுமணம் இடுவது பற்றிக் கம்பர் வருணிக்கிறார். கி.மு. 3ம் நூற்றாண்டின் பட்டினப்பாலையில் சொல்லப்படுகின்ற தானிய ஏற்றுமதியும் திருமலைத் துறைமுகத்தினூடாகவே நிகழ்ந்திருக்கும். பொன் விளைக்கும் தமிழர் தாயகப் பிரதேசத்தின் உட்புற ஆற்றுச்சாலையும் வெளிவாயிலான இயற்கைத் துறைமுகமும் அதைக்காவல் செய்வதற்காக அலைதழுவும் மலையின் மேல் அமைக்கப்பட்ட விற்கோபுரங்களும் அந்நாட்களில் சுறுசுறுப்பாக இயங்குவதைக் கற்பனைசெய்துபார்க்கும் எந்தவொரு தமிழருக்கும் நாம் எதையெல்லாம் பறிகொடுத்திருக்கிறோம் என்ற ஏக்கம் எழவே செய்யும். அதன்பின் ஆறாம் நூற்றாண்டில் பாடல்பெற்றபோதும் சோழர் கடலாண்ட காலத்தின் பரபரப்பான கடற்போர்கள் மற்றும் தரையிறக்கங்களின் போதும் திருமலையின் ஆன்மா அதன் உச்சத்தில் இருந்ததெனலாம். அதற்கும் பிறகான நான்கு நூற்றாண்டுகால ஐரோப்பிய ஆதிக்கத்தின் போது தமிழர் தாயகத்தின் விளைநிலங்கள் காடுகளாகிப் பாசனங்கள் தூர்ந்து நெல் வெளியேறிய வாசல்களால் கோதுமை உள்ளே வரத்தொடங்கிய போதும் திருமலையின் முக்கியத்துவத்திற்குக் குறைவேதும் இருக்கவில்லை."திருகோணமலையை வைத்திருப்பவர் இந்து சமுத்திரத்தின் திறவுகோலை வைத்திருக்கிறார்" என்று 19ம் நூற்றாண்டிலே பிரித்தானியாவின் பிரதமராகவிருந்த வெலிங்டன் பிரபு சொல்லியிருக்கிறார்.அங்கு அமைக்கப்பட்ட எண்ணைக் குதங்களும், விமானத்தளமும், அயலிலமைந்துவிட்ட இல்மனைற் படுகையும் அதன் முக்கியத்துவத்தை மென்மேலும் அதிகரிக்கவே செய்தன.

தமிழர் தாயகத் தரைத்தோற்ற்றத்த்தில் மிகவொடுங்கிய பகுதியான திருமலையை சிங்கள மயமாக்குவதன் மூலம் தென்பகுதியைத் துண்டாடி, தாயகக் கோட்பாட்டிற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தலாம் என்பதே சிங்களத்த்தின் கணிப்பு.

ஐரோப்பியருக்கு முந்தைய ஐந்நூறு ஆண்டுகால தமிழர் இராட்சிய காலத்தின் போதே சிங்கள இராட்சியமானது, வளமிக்க இந்த மண்ணிலும் பாதுகாப்பரனோடு கூடிய துறைமுகத்திலும் ஒரு "கண்" வைத்திருந்ததை திரு வி. நவரத்தினம் (தமிழ்த் தேசியத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும்) குறிப்பிடுகிறார். பிரித்தானியர் வெளியேறிய கையோடு தீவின் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட சிங்களவர், கனிகையை நாடும் காமுகரின் வெறியோடும் மூர்க்கத் தோடும் திருமலையை வசப்படுத்துவதற்கான எத்தனங்களில் இறங்கினர். அதன் விளைவுகளே இன்றைய திருமலையின் நிகழ்வுகள். பொதுநலவாய அமைப்பின் உதவியோடமைந்த ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி மற்றும் குடியேற்றத் திட்டங்கள் சிங்கள நிலப்பறிப்புத் திட்டங்களாக அமைக்கப்பட்டன. பதவியா என்ற படுவில்லிலும் கந்தளாயிலும் இருக்கும் விளைநிலங்களில் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையருக்கு, தமிழருக்கு எதிரான கலவரங்களில் பயன்படுத்துவதற்கான டைனமைற் குச்சிகளை குடியேற்றத்திற்குப் பொறுப்பான சிங்கள அமைச்சர் சி.பி.டி. சில்வா விநியோகித்தார் என்று அப்போதைய வவுனியா பா.உ சுந்தரலிங்கம் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். திருமலைத் துறைமுகம் தேசிய மயமாக்கப்பட்டதன் விளைவாகத் தமிழர்கள் அதன் உரிமையை முற்றாக இழந்தனர் எனலாம். தமிழர் தரப்பினரிடம் நிரந்தரமான படைக்கட்டுமானம் அமைந்தபின் கண்மூடித்தனமான குடியேற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. திருமலை பறிபோகிறது என்ற சங்கதி உறைக்கத் தொடங்கியதே தமிழரின் ஆயுதப் போராட்டம் தலைப்பட்ட பின்பு தான். எழிலும் வளமும் மிக்க மலைப்பட்டணம் தமிழர் தாயகத்தின் தலைநகராகத் தேசியத் தலைமையால் தெரிவு செய்யப்பட்தற்கான காரணங்கள் சாதாரணமானதாக இருந்திருக்க முடியாது. இருப்பினும் திருமலையின் மீதான சிங்களக் காமம் இன்னமும் தீரவில்லை என்பது கண்கூடு. அது திடீரென முனைப்புப் பெற்றதுபோலத் தோன்றுவதற்கான பின்புலங்கள் ஆய்விற்குரியவை. தமிழர் தாயகக் கருத்துக்கள் அரசியல் வகையில் முனைப்புப் பெற்றபோது, தமது இயல்பின்படி பிரச்சினைகளின் அடிவேர் களைப் பாராது அடக்கும் வழியையே தேடிய சிங்களம், பெருமெடுப்பிலான வன்முறைப் பிரயோகம், கருத்து முறியடிப்பு, மற்றும் நடைமுறைத் தடங்கல்களை ஏற்படுத்தல் என்னும் மும்முனைச் செயற்பாட்டில் இறங்கியது.

தாயகக் கோட்பாட்டுக் கருத்தைத் தெரிவிப்பதையும் செயல்களால் நாடுவதையும் தண்டனைக்குரிய குற்றமாக்கும் புதிய அடக்குமுறைச் சட்டங்களை அமைத்தல், தாயகநிலப்பரப்பை நிருவாகம், போக்குவரத்து மற்றும் தொழில் முறையில் ஒன்றிலொன்று சார்ந்திரா வண்ணம் அல்லது தொடர்புறாவண்ணம் துண்டாடுதல், உட்பிரிவினைகளை ஏற்படுத்தித் தூண்டுதல் என்பன முக்கியமான தடங்கல்கள்.

தமிழர் தாயகத் தரைத்தோற்றத்தில் மிகவொடுங்கிய பகுதியான திருமலையை சிங்களமயமாக்குவதன் மூலம் தென்பகுதியைத் துண்டாடி, தாயகக் கோட்பாட்டிற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தலாம் என்பதே சிங்களத்தின் கணிப்பு. தமிழர் தாயகத்தின் கீழைக்கரையோரமாக காங்கேசன்துறையில் இருந்து பூமுனை வரை செல்லும் நெடுஞ்சாலை யைச் செயலிழக்க வைத்ததுடன் திருத்து வதற்கான வாய்ப்புக்களையும் உதாசீனம் செய்து நேரடியாக இன்னுமொரு தமிழ்ப் பிரதே சத்திற்குள் நுழைய முடியாதபடி திருமலையைப் போக்குவரத்து அளவில் தனிமைப் படுத்தியதில் சிங்களம் ஒரளவு வெற்றியைக் கண்டிருக்கிறது. இப்போது அரச நிருவாகத்திலும் சமயம் மற்றும் சேவைக் கட்டுமானங்களிலும் சிங்கள மேலாளர்களை நிறுத்துவதன் மூலமும் திருமலையின் ஒட்டுமொத்த இயக்கத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முனைகிறது. அதற்குத் தடையாக இருக்கும் கருத்தாளர்கள் கொல்லப்படுகிறார்கள். முக்கிய இடங்களில் இருக்கும் தமிழர்களை இனக்கலவரங்கள், படையினரின் படுகொலைகள் மற்றும் அடாவடிகள் போன்றவற்றால் இடம்பெயர்க்கும் முயற்சிகள் நிகழ்கின்றன. அவ்வகைக் கலவரங்களை உண்டாக்குவதற்கான செயலாகவே புத்தர்சிலை விடயத்தையும் நாம் பார்க்க வேண்டும். இப்போது கலவரங்களால் இடம் பெயர்ந்தவர்களுக்கு நன்மை செய்வது போல வேறு இடங்களில் தங்குமிட ஏற்பாடுகள் செய்து நிரந்தரமாகவே வெளியேற்றி விடவோ அல்லது தமிழர் குடிப்பரம்பலை ஐதாக்கவோ முயற்சிகள் நிகழலாம். இதன் வெளிநீட்டங்களே திருமலையின் கலவரங்கள். ஆனால் சம்பூர் மீதான விமானத் தாக்குதலுக்கு இந்த நாட்டம் மட்டுமே காரணமாயிருப்பதாகத் தெரியவில்லை. வேட்டையாடும் மிருகத்திற்கு வேட்டைப் பொருளின் தசைபற்றிய பிரக்ஞை மட்டுமே இருப்பதைப் போல உலக இராச தந்திரிகளுக்கும் ஒரு தரைப்பிரதேசத்தின் பொருளாதார மற்றும் பாதுகாப்புப் பெறுமானமே கருத்திற்குரியது. அந்தவகையில் தமிழீழத்தின் உற்பத்திப் புலங்கள் போக, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வகையில் முக்கியம் பெறுவது மூன்று புள்ளிகள். அவை காங்கேசன்துறை, ஆனையிறவு மற்றும் திருகோணமலை. அவற்றில் சேது சமுத்திர முக்கியத்துவம் ஏற்பட்டாலே தவிர காங்கேசன் துறைக்குப் பாதுகாப்புப் பரிமாணம் மட்டுமே தற்போதைக்கு உண்டு. ஆக, சம காலத்தில் அதிமுக்கியம் பெறுபவை ஆனையிறவும் திருகோணமலையுமே.

இப்போது பன்னாட்டுப் பிரதிநிதிகள் இலங்கையிலே தமிழருக்குச் சரியாசனம் தருவதற்கான முக்கிய காரணிகளில் முதலாவது, சிறிலங்காவின் எந்தவொரு பொருளாதார இலக்குகள் மீதும் செல்வாக்குச் செலுத்தும் திறனைப் புலிகள் ஒன்றுக்கு மேற்பட்ட தருணங்களில் நிரூபித்திருப்பது. இரண்டாவது, துறைமுகம், விமானத்தளம், தொழிற்சாலை, மீன்பிடிமற்றும் மனிதவளம் போன்ற செல்வங் களைக்கொண்டுள்ள குடாநாட்டின் வாசலும் பாதுகாப்பரணுமான ஆனையிறவு புலிகளின் கையில் இருப்பது. மூன்றாவது, திருமலைத் துறைமுகத்தின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் படை வீச்செல்லைக்குள் புலிகள் நிலைகொண்டிருப்பது. தமிழரின் பேரம் பேசும் பலம் என்ன என்ற உலக இராசதந்திரக் கேள்விக்கு மேற்கூறிய விடயங்களின் அடிப்படையிலேயே பதில் அமைய முடியும். அந்த அழுத்தங்களின் விளைவே தென்னை மரத்தில் தேள்கொட்டியதற்குப் பனை மரத்தில் நெறிகட்டியது போல படைத்தளபதி தாக்கப்பட்டதற்குப் பதிலாக சம்பூர் சாடப்பட்டது. சிறிலங்கா அரசின் அண்மைக்காலப் போராயுதக் கொள்வனவை நோக்கும் போது அதிலும் ஒரு கோலம் புலப்படுகிறது. அவற்றில், தரைக்கண்காணிப்பு ராடர்கள், கவசத்துருப்புக்காவிகள், கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனம், மிலான் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை பொருத்திய ஜீப், பல்குழல் ஏவுகணை செலுத்திகள் T-55 டாங்கிகள் என்பனவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அவை வேக நகர்வையும் திறந்தவெளிச் செயற்பாட்டையும் கோடிகாட்டுகின்றன. இவையனைத்தும் வான் வழியாக நகர்த்தப்படக் கூடியவை என்பதும்,இவையனைத்திற்குமாகத் தரையைத் தொடாமலேயே வினியோகிக்கும் ஆற்றல் உள்ள ஹேர்குலிஸ் C-130 விமானத்தையும் சிறிலங்கா கொள்வனவு செய்கின்றது என்பதும் கவனிப்பிற்குரியவை. தரையில் வேகம் குறைவான பெரிய ஆர்டிலறிகள் தவிர்க்கப்பட்டிருப்பதைப் போலவே கடலிலும் தரையிறங்குகலங்கள் இம்முறை நாடப்படவில்லை. மாறாக,
கடற்கலங்களில் இருந்து ஏவக்கூடிய மோட்டார்களும், வேகத்தாக்குதற் கலங்களும், கடற்கண்ணிகளும் கோரப்பட்டிருக்கின்றன. கடலிலிருந்து ஆதரவு தரக்கூடியதும் கோடை காலத்தில் திடமான தரையாக இருப்பதுமான ஆனையிறவை அண்டிய பெருவெளிகள் போன்ற இடங்களில் மேற்கூறிய படைக்கலங்கள் தொகுப்பாகப் பயன்படுத்தபடக் கூடியவை.

வரலாற்றின் வழித்தடத்தில் திருமலை என்பது தமிழர்தாயக உணர்வுமையமாகவே இருந்து வந்திருக்கிறது. உன்னதமான பல போராளிகளையும் அவர்களைப் பெற்ற தாய்ச்சமூகத்தையும் உடைய திருமலையின் ஆன்மா உள்ளூறக் குமுறிக்கொண்டிருக்கிறது. எழுச்சிப் பேரணிகளிலும், உணர்வுக் கூட்டங்களிலும், போர்ப் பங்களிப்பிலும், அண்மைத் தேர்தலிலும் அதன் உணர்வுக் குமுறலின் ஒலி கேட்கவே செய்தது. அதன் வேதனையை பேச்சுவார்த்தைகள் தீர்த்து வைக்கவில்லை என்பது வெளிப்படை. இந்த நாட்டில் இரத்தம் சிந்துதலைத் தவிர்க்க விரும்புபவர்கள் சிங்கள மக்களுக்கு மூன்று உண்மைகளைக் கற்றுத்தர வேண்டும். முதலாவது, தமிழர் தரப்பு சிங்களப் படைதரப்பைத் தாக்குவது ஒரு குற்றமல்ல. அது உயிர் பிழைப்பதற்கான ஒரு உத்தி. இரண்டாவது தமிழர் நாட்டைப் புதிதாகப் பிரிக்க நினைக்கவில்லை. ஐரோப்பியரின் நிருவாக வசதிகருதிய கோர்ப்பின் விளைவாக நிருவாகத்தால் மட்டும் ஒன்றிணைந்த இரு தேசங்களில் ஒன்று தனது விருப்பிற்கமையப் பிரிந்து செல்லநினைப்பதே தமிழரின் போராட்டச்செய்தி. அது சிங்களவர்களுக்கு எதிரான யுத்தமல்ல. மூன்றாவது, தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு அங்குலத்திற்குமாகப் போராடுவது அந்த மண்ணின் மைந்தர்கள். அதை எதிர்த்து நிற்கும் உங்கள் வீரர்கள் அந்நியர்கள். இந்த உண்மைகளைத் துணிந்து சொல்லும் வீரம் சிங்களத் தலைவர்களில் எவருக்கும் இருந்ததில்லை. மகிந்தரும் அதற்கு விதிவிலக்கானவர் அல்லர்.



நன்றி: விடுதலைப்புலிகள். சித்திரை-வைகாசி ஏடு.

Labels: , ,