« Home | தர்முசிவராம் (பிரமிள்) பற்றி » | இஸ்ரேலின் அடாவடியும் படிக்க வேண்டி பாடங்களும் » | பொஸ்பரஸ் தொடங்கி ஒற்றைத் துப்பாக்கி வரை... » | இந்து சமுத்திரத்தின திறவுகோல் யாருக்கு? » | கேணல் இறமணன் » | இரத்தம் தோய்ந்த நாளொன்றின் நினைவுகள். » | பிபிசி, உலகநாடுகளைப் புரிந்து கொள்வோம். » | திருகோணமலை வெறியாட்டம் -படங்கள் » | வாளைக் கைவிடாத சிங்கம். » | யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம். »

தனியரசு அமைப்போம் - புலிகள் அறிவிப்பு

ஒற்றையாட்சிக்குள் தீர்வென்றால் தனியரசு அமைக்க முயற்சிப்போம்.
விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப்புலிகள்' ஏட்டின் தலையங்கம்.

இலங்கைத் தீவின் தமிழ்-சிங்கள இனப்பிரச்சினை வரலாற்றில் 'அனைத்துக்கட்சி மாநாடு' என்ற அரசியல் நிகழ்ச்சியை சிங்கள அரசு காலத்துக்குக் காலம் அரகேற்றி வருகிறது. ஒவ்வொரு 'அனைத்துக் கட்சி" மாநாடும் நடாத்தப்பட்ட வேளைகளிலிருந்த அரசியற் புறச்சூழல்களை ஆராய்ந்து பார்ததால் ஒரு அரசியல் உண்மை புலப்படும். அது சிங்கள ஆட்சியாளர்களின் இனவாத முகத்தையும் ஏமாற்று அரசியலையும் அம்பலப்படுதிக் காட்டும். திம்புப் போச்சுவார்த்தைகளில் தமிழர்தரப்பு வைத்த அரசியற் கோரிகைகைகளைப் பரிசீலிக்கவே மறுத்த சிங்கள அரசு, பேச்சுக்களை முறித்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து அன்றைய ஜே.ஆர் அரசாங்கம் 'அனைத்துக்கட்சி மாநாடு' என்ற அழகிய பெயரில் சிங்களக் கட்சிகளை ஒன்றுகூட்டியது. தாயகம்-தேசியம்-தன்னாட்சி என்று தமிழர்தரப்பு திம்புவில் வைத்த அரசியல் கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு 'மாவட்ட சபை' என்ற் எலும்புத்துண்டை மேலும் எவ்வாறு அழகுபடுத்தலாமென்று சிங்களக் கட்சிகளுடன் கூடிக்கதைத்து மாநாட்டை முடித்துக் கொண்டது.

பின்னர் சமாதானத் தேவதைபோலத் தன்னை உருவகித்த சந்திரிகா அம்மையார் பதவிக்கு வந்ததும் புலிகள் இயக்கத்துடன் ஒரு சமரசப்பேச்சிற்கு வந்திருந்தார். யாழ்ப்பாணப் பேச்சுவார்த்தை என்று அழைக்கப்படும் அந்தச் சமாதான முயற்சியும் சந்திரிகா அம்மையாரின் இராணுவத் திமிர்த்தனத்தால் முறிவடைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அம்மையாரும் ஒரு அனைத்துக்கட்சி மாநாட்டைக் கூட்டியிருந்தார். முடிவில் அரைகுறைத் தீர்வுப்பொதி ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இப்போது நோர்வே அனுசரணையுடன் சர்வதேச அரங்கில் கடந்த நான்கரை வருடகாலமாக நடந்துவந்த பேச்சுவார்த்தையும் சிங்கள ஆட்சியாளர்களின் கடும்போக்கு மற்றும் சமாதான விரோதச் செயற்பாடுகளால் செயலற்றுப்போயுள்ளது. இந்தப் புறச்சூழலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஒரு அனைத்துக்கட்சி மாநாட்டைக் கூட்டியுள்ளார். பேச்சுவார்த்தைகளின் போது தமிழர் தரப்பு முன்வைக்கும் அரசியற் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாது அல்லது நடைமுறைப்படுத்தாதிருந்து பேச்சைக் குழப்பியடித்துவிட்டு பின்னர், அனைத்துக்கட்சி மாநாடு என்றுகூறி, சிங்களக் கட்சிகளை ஒருங்கிணைத்து சிங்களதேசம் சமாதானத் தீர்வொன்றைக் காணும் விருப்புடனேயே உள்ளது. என்றுகாட்டி சர்வதேச சமூகத்தையும் தமிழ்மக்களையும் ஏமாற்றவுமே அனைத்துக்கட்சி மாநாடு என்ற அரசியல் நாடகத்தை சிங்கள ஆட்சியாளர்கள் அடுத்தடுத்து அரங்கேற்றி வருகின்றனர். அமைதிவழியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணல் என்ற அரசியல் நடைமுறையின் உச்சக்கட்டமான சர்வதேச மயப்பட்ட பேச்சுவார்த்தை வாயிலாக தமிழரின் விடுதலைப்போராட்டம், இப்போது சர்வதேச அரசியலாகிவிட்டது. இந்தச் சர்வதேச அரசியல் களத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுமுயற்சி என்பது சர்வதேசச் சட்டங்கள், நியமங்கள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையிலேயே அணுகப்படவேண்டிய நிலையும் எழுந்துள்ளது. இது சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு ஏற்புடையவிடயமாக இருக்கவில்லை. எனவேதான், சர்வதேசமயப்பட்டுவிட்ட தமிழரின் போராட்ட அரசியலை மீண்டும் உள்நாட்டுப் பிரச்சினையாகத் தரம் இறக்கி - அனைத்துக்கட்சி மாநாட்டின் தீர்மானம் என்றுகூறி அரைகுறைத் தீர்வொன்றைத் திணித்து - அதை விடுதலைப்புலிகள் நிராகரிக்கும்போது அதைச் சாட்டாகவைத்து - தமிழ்மக்கள் மீது இராணுவத் தீர்வொன்றைத் திணிக்கும் நோக்குடன் மகிந்த அரசு காய்களை நகர்த்துகின்றது.

இந்த அனைத்துக்கட்சி மாநாட்டின் துவக்க நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்தரின் கருத்துக்கள் தமிழரின் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அவரது அரசு எங்கே நிற்கின்றது என்பதை தெளிவாக்கியுள்ளன. ஒற்றை ஆட்சிக்குள் - சிங்கள மக்களின் சம்மதத்துடன் - உள்ளகத் தீர்வொன்று எட்டப்படவேண்டும் என்பதே மகிந்தரது உரை வெளிப்படுத்தும் சாராம்சங்களாகும். அவரது உரையில் தமிழரின் அரசியல் அபிலாசைகள் கருத்தில் எடுக்கப்படவேயில்லை. அவர்கூட்டிய அனைத்துக்கட்சி மாநாட்டில் தமிழரின் நடாளுமன்றப் பிரதிநிதிகளும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

மொத்தத்தில் ஜே.ஆரின் அரசைப்போல -பிரேமதாசாவின் அரசைப்போல - சந்திரிக்காவின் அரசைப்போல மகிந்தர் அரசும் தமிழரின் இனப்பிரச்சினை தொடர்பாக கடுமையான பேரினவாத நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. புலிகள் இயக்கம் பேச்சுமேசைக்கு வரமறுக்கின்றது! புலிகள் இல்லாமலே அரசியற்தீர்வு காணப்படும்! புலிகள் வேறு மக்கள் வேறு என்று புளித்துப்போன பழைய பல்லவிகளையே மகிந்தரும் தனது உரையில் ஒப்புவிக்க முனைந்துள்ளார். கடந்த 30வருடகால ஆயுதப்போராட்ட அரசியலில் சிங்கள அரசுடன் ஐந்து தடவைகள் புலிகள் இயக்கம் நேரடியாகப் பேசியுள்ளது. இந்த ஐந்து பேச்சு முயற்சிகளும் சிங்கள ஆட்சியாளர்களின் கடும்போக்கு நிலைப்பாடுகளாலும் -இராணுவத் திமிர்த்தனங்களினாலும் தோல்விகளையே சந்தித்துள்ளன.

நோர்வே அனுசரணையுடன் நடந்த பிந்திய சமாதான முயற்சியின்போது இருதரப்பிற்குமிடையே ஒரு போர்நிறுத்த உடன்பாடு காணப்பட்டு - அதன் அடிப்படையில் சில இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருந்தன. ஆனால், இவற்றிற்கு மதிப்பளித்து - நடைமுறைப்படுத்தி சமாதான முயற்சிக்கு உரமூட்ட சிங்கள அரசு தவறியதால் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை என்று புலிகள் இயக்கம் நிலைப்பாடெடுத்திருந்தது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும்படியும் ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களைக் களைந்து பேச்சு முயற்சிக்குப் புத்துயிர் ஊட்டும்படியும் மகிந்த அரசை பல தடவைகள் புலிகள் இயக்கம் கேட்டிருந்தது. ஆனால், ஒட்டுக்குழுக்களது கொலைச்செயல்களை உற்சாகப்படுத்தியும் - ஆழ ஊடுருவும் படைகளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அனுப்பி புலிகளையும் மக்களையும் படுகொலை செய்ய அனுமதித்தும் - தமிழர் தாயகத்தில் இராணுவ அட்டூழியங்களை அதிகப்படுத்தியும் அமைதிச்சு10ழலை மகிந்த அரசே போட்டுடைத்துள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு புலிகளுடன் நேரடியாகப்
பேசியே காணப்படமுடியும் என்பதே சர்வதேச நாடுகளின் நிலைப்பாடுமாகும். புலிகளைப் புறந்தள்ளிவிட்டு எந்த ஒரு அரசியற் தீர்வையும் மகிந்த அரசால் காண முடியாது. இத்தகைய குருட்டுத்தனமான முயற்சிகளை முன்னர் சந்திரிகா அம்மையாரும் மேற்கொண்டு படுதோல்வி கண்டதுடன் - இனப்பிரச்சினையை மேன்மேலும் சிக்கலாக்கியுள்ளார் என்ற உண்மையையும் மகிந்த ராஜபக்ச உணரவேண்டும். ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற
மகிந்தரின் சிந்தனை வெறும் கற்பனைக்கதையாகும். தமிழ்மக்களுக்கு எத்தகைய தீர்வை வழங்குவதென்று, தமிழர் தரப்பை ஒதுக்கிவிட்டு, சிங்களக் கட்சிகள் மட்டுமே ஒன்றுகூடித் தீர்மானிப்பது என்பதும் ஒரு கேலிக்கூத்தான செயலாகும். ஒற்றை ஆட்சி என்ற குண்டுச் சட்டிக்குள் சிங்களப் பேரினவாதிகள் விரும்பியபடி குதிரையோட்ட புலிகள் இயக்கம் என்றைக்கும் உடன்படமாட்டாது.

சமாதானம் - மனிதாபிமானம் -விழுமியங்கள் என்று சந்திரிகா அம்மையாரைப்போல மகிந்தரும் முதலைக்கண்ணீர் வடித்து உரையாற்றுவதால் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை. தமிழரின் இனப்பிரச்சனைக்கு அமைதிவழியில் அரசியற் தீர்வு காணவேண்டும் என்று மகிந்த அரசு உண்மையாகவே விரும்பினால் ஏற்கனவே உள்ள போர்நிறுத்த உடன்பாட்டிற்கு அவரது அரசு புத்துயிர் அளிக்க முன்வரவேண்டும். அதன்பின்னர், புலிகள் இயக்கம் சிங்கள அரசிடம் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையை அடிப்படையாகக் கொண்டு அரசியற் பேச்சுக்கு முன்வரவேண்டும். அவ்விதம் மகிந்தரின் அரசு முன்வந்தால் அவர்களுடன் பேச புலிகள் இயக்கம் தயாராக உள்ளது. புலிகளின் இந்த அரசியல் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து தம்வழி செல்ல மகிந்த அரசு முயற்சித்தால் புலிகள் இயக்கமும் தனிவழிசென்று தமிழரின் அரசியல் விடுதலையை வென்றெடுக்கப் பாடுபடும்.
_________________________________________
நன்றி: விடுதலைப்புலிகள் ஏடு -ஆனி, ஆடி 2006.

Labels: ,


Get your own calendar

Links