Thursday, January 25, 2007

இந்தியா பிச்சை போடுமா?

மறுபக்கம் - கோகர்ணன்

டிசம்பர் முற்பகுதியில் தமிழர் தேசியக் கூட்டணித் தலைவர் இரா. சம்பந்தன் எழுதிய கட்டுரை ஒன்றில் தமிழக முதல்வர், இலங்கைத் தமிழரின் பிரச்சினைகள் பற்றி இந்தியப் பிரதமருக்குத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறாரென்றும் இந்தியப் பிரதமருடன் தமது பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவையாய் அமைந்தனவென்றும் சொல்லியிருந்ததோடு, இந்தியா தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று உறுதிப்படுத்தும் என்றும் நம்மை நம்பவைக்க மிகவும் கடுமையாக முயன்றுள்ளார். சில மாதங்கள் முன்பு தங்களைக் காக்க வைத்து இரண்டு முறை ஏய்ததற்கான விளக்கங்களையும் வெகு சிரமப்பட்டு நம் முன்வைத்துள்ளார்.
இந்திய ஆட்சியாளர்களும் தமிழக முதல்வரும் யார் எசமான் என்பதை நமது தமிழ்த் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர். அவர்கள் திரும்பி வருவதற்கு முன்பே இந்திய ஆட்சியாளர் தங்களது நோக்கங்கள் என்னவென்று தெளிவு படுத்தி விட்டனர். திருகோணமலை மீது இந்தியாவின் பிடியை மேலும் வலுப்படுத்துகிற நோக்கத்துடன் திருகோணமலைத் துறைமுகத்தை அண்டிய பகுதியில் அனல் மின் நிலையத்தை நிறுவுவது பற்றி இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் ஒப்பமிட்டுள்ளது. விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட சம்பூரிலா, ஏற்கனவே சிங்கள மயமாக்கப்பட்ட சீனன் குடாவிலா என்ற விவாதம் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. சம்பூரில் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டாலும் படாவிட்டாலும் தமிழ் மக்கள் அங்கே போய் மீளக் குடியேற இயலாத விதமாக பாதுகாப்புக் காரணங்கள் கற்பிக்கப்படும் என்பது பற்றி நமக்கு ஐயங்கள் வேண்டாம்.

எனவே, தமிழ்த் தலைவர்கள் சம்பூரில் வேண்டாம் என்பதுடன் நிற்காமல் திருகோணமலையில் வேண்டாம் என்பது பற்றி உறுதியாக நிற்க வேண்டும். அல்லாது போனால் ,அது மின்சார நாற்காலிக்கும் தூக்கு மேடைக்கும் இடையிலான தெரிவு மாதிரியான ஒரு தெரிவாகவே இருக்கும். சம்பந்தனுக்கும் உள்ள வில்லங்கம் எப்படி ஏக காலத்தில் இந்திய மேலாதிக்க வாதிகட்கும் விடுதலைப் புலிகட்கும் அல்லலுறும் தமிழ் மக்களுக்குமிடையில் அரசியல் சம நிலை காணுவது என்பதாக இருக்களாம். ஆனால் அது நமது தமிழ் ஊடகங்களின் தலைவிதியாக இருக்க வேண்டியதில்லையே.

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் இந்தியாவின் குறுக்கீட்டின் நோக்கங்கள் பற்றியும் அது நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் பற்றியும் நமக்குள் குழப்பங்கள் இருக்க நியாயமில்லை என்றே இதுவரை நினைத்து வந்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய ஆட்சியாளர்களை மறுத்து வாய்திறக்க இயலாத நிலையில் பல தமிழ்த் தலைவர்களும் பிரமுகர்களும் இருந்து வருகிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமாக அவர்கள் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நாளிலிருந்து அவர்கள் இந்தியத் தூதரக வாயிலாகப் பல்வேறு நெருக்குவாரங்கட்குட்பட்டனர்.பின்பு அவர்களை ஓரங்கட்டுகின்ற முறையிலும் சில போட்டி இயக்கங்களை ஊக்குவிக்கின்ற விதமாகவும் இந்திய அதிகார நிறுவனம் நடந்து கொண்டதன் உச்சக் கட்டத்தை இரண்டு மாதங்களின் முன்பு கண்டோம். அதற்கு முன்பும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழிக்கப்பட்டனர். எனினும் முகத்திற் பூசப்பட்ட கரியை முழுதாகத் துடைக்காமலே இந்தியா எமது தாய் நாடு, எங்களுக்கு என்றும் இந்தியா துரோகம் செய்யாது" என்று பழைய பாடத்தை ஒப்பித்தனர். இம் முறை நடந்த சந்திப்பிலும் யார் தமிழர் தேசியக் கூட்டணியின் சார்பில் பங்குபற்றலாம் என்பதற்கான முன் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன என அறிகிறேன். அதை உறுதிப்படுத்துகிற முறையிலேயே பங்கு பற்றினோரில் ஒருவர் தவிர மற்ற எல்லாரும் இந்திய அதிகார நிறுவனத்தின் செல்லப் பிள்ளைகளாக எப்போதோ இருந்து வந்தனர் என்ற விடயமும் அமைந்திருந்தது.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க, இந்திய விடுதலைப் புலிகள் மீதான தடையைப் பல ஆட்சி மாற்றங்களினூடாகவும் பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்தும் கடைப்பிடிக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் தண்டனைக்குரிய குற்றவாளியாக இந்தியாவால் வேண்டப்படுகிற ஒருவராக இருக்கிறார். இலங்கையில் அவர் தண்டனைக்குரிய குற்றவாளியாக இருக்கின்ற காரணத்தால் அவரை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பாகக் கருத்து வேறுபாட்டுக்கு இடமுண்டு. அது அவர் பிடிபடக் கூடிய ஒரு சூழல் வருகின்ற வரையும் ஒரு பிரச்சினையாக அமையாது. எனினும் இந்தியா இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு உதவும் ஒரு நாடு நிலையான சக்தியாகச் செயற்பட இயலுமா என்ற கேள்விக்கான விடையின் முக்கியமான ஒரு பகுதி, முற் குறிப்பிட்ட, விடுதலைப் புலிகள் தொடர்பான பிரச்சினைகளில் தங்கியுள்ளது.

இந்தியா எந்த வகையில் குறுக்கிட வேண்டுமென்று தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்க்கின்றனர்? உண்மையாகவே இந்தியா அப்படிக் குறுக்கிடுமென்று அவர்கள் எதிர்பார்ககின்றார்களா? அப்படிக் குறிக்கிடாதெனின் எப்படி குறுக்கிடுமென எதிர்பார்க்கின்றார்கள்? இவற்றையெல்லாம் தமிழ் மக்கள் அறிய வேண்டாமா? அதற்கான உரிமை அவர்கட்கு இல்லையா? அல்லது இவை எல்லாம் பரம இரகசியங்களா? அவை அப்படிப்பட்ட இரகசியங்கள் என்றால் இந்தியா குறுக்கிடும் என்றோ எந்த நோக்கத்திற்காக என்றோ உறுதிப்படுத்தி குட்டை உடைப்பது இந்தியாவின் திட்டங்களில் மண்ணை அள்ளிக் கொட்டுகிற காரியமாகாதா?

உண்மை என்ன வென்றால் எல்லோரும் ஒரே விளையாட்டைத் தான் விளையாடுகிறார்கள். அதன் பேர் "காதில் பூச் சுற்றல்" அதன் முன்னேறிய வடிவங்களைத் "தலையில் மிளகாய் அரைத்தல்" என்றும் வேறு பேர்கள் கொண்டும் அழைப்பார்கள். எனினும் இது ஒரு தளத்தில் போட்டியின்றி விளையாடப்படுகிற விளையாட்டு. நமது தலைவர்கள் நம் காதில் பூச் சுற்றபவரா. மன்மோகன் சிங் முழு இந்திய மக்கள் காதிலும் பூச்சு சுற்றவார். ஜோர்ஜ் புஷ்....

என்றாலும் இன்னொரு தளத்தில் போட்டி உண்டு. கோபால சாமிக்கும் கருணாநிதிக்கும் உள்ள போட்டியில் ஈழத் தமிழர் பிரச்சினை பூச் சுற்றலுக்கு ஒரு முக்கியமான பங்குண்டு. இப்போதைக்குத் தமது காதில் கருணாநிதி பூச் சுற்றுவதையே தமிழர் தேசியக் கூட்டணியினர் விரும்புகிறார்கள். அது தமது தமிழ் ஊடகத் துறையினருக்கும் விருப்பமான ஒரு முடிவு போலவே தெரிகிறது. எனவே தான் கருணாநிதியின் திரு விளையாடல்கள் பற்றி மிகவும் அடக்கியே வாசிக்கப்படுகிறது.

கருணாநிதி ஐம்பது வருடங்களுக்கு முன் தண்ட வாளத்தில் தலையை வைத்த கதையைச் சொல்லியே வெகு தூரம் அரசியற் பயணம் நடத்தியவர். இன்று தமிழக ஊடகத்துறையில் ஒரு ஏகபோக நிறுவனமாக முனையும் அவருடைய குடும்பத்துக்குரிய `சன்' நிறுவனம் பத்திரிகைத் துறையிலும் தன்னை விஸ்தரித்து வருகிறது. அதன் அரசியல் நோக்கங்கள் தமிழகத்திற்குள் ஆதிக்கம் செலுத்தினாலும் பிற மாநிலங்களில் அது வணிக நோக்கிலேயே இயங்கி வந்துள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி அவர் ஈழத் தமிழர் பிரச்சினையில் ஏன் அரைமனதுடன் செயற்படுகிறாரென்று கேட்கப்பட்ட ஒரு கேள்வியை, மறுக்காமல் ஆட்சியில் உள்ள ஒரு தலைவர் என்ற வகையில் அவருக்குள்ள பிரச்சினைகள் பல என்ற விதமாகச் சமாதானம் சொல்லியிருக்கிறார். எதிர்க் கட்சியில் இருந்த போதும் அப்படித்தானே இருந்தார் என்று பதிற் கேள்வி கேட்கிறதற்கு ஏனோ பத்திரிகைகாரருக்குத் தோன்றவில்லை.

கருணாநிதியின் அரசியலை மட்டுமல்ல, தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என்று தமது தலைவர்களும் சில ஊடகத் துறையினரும் வற்புறுத்துகிற ஒவ்வொரு தலைவரது அரசியலையும் நமது ஊடகங்களில் பொறுப்பான இடங்களில் உள்ளவர்கள் கவனமாக ஆராய வேண்டும். அவர்களது ஊழல்கள், மோசடிகள் போன்றவற்றையும் தமிழ் வாசகர்கள் அறியத்தர வேண்டும். இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே திராவிட இயக்கம் பற்றிய ஒரு பற்றுக்குப் பல தோற்று வாய்கள் உள்ளன. அவற்றுட் பெறுமதி வாய்ந்த ஒன்று ஈ.வெ.ரா. (பெரியார்) தொடர்பானது. அவரது சுயமரியாதைச் சிந்தனைகள், பகுத்தறிவு, சாதிய எதிர்ப்பு, ஏன் பெண் சமத்துவம் போன்றவற்றால் கவரப்பட்டோர் பலர் இடது சாரிகளாகினர். சிலர் தமிழ்த் தேசியத்தின் பக்கம் திரும்பினர். திராவிட முன்னேற்றக் கழகம் அரசியலை விட முக்கியமாகச் சினிமா மூலம் தன்னை வளர்த்துக் கொண்ட ஒரு காலமும் இருந்தது. கவர்ச்சிகரமான ஆனால் விஷயமில்லாத அடுக்கு மொழி மேடைப் பேச்சு, சினிமா மூலமான கவர்ச்சி, தமிழ்த் தேசிய வாதம் என்பன மூலமான கவர்ச்சியாலேயே நடிக்கத் தெரியாத போதும் புரட்சி நடிகராக கொண்டாடப்பட்ட எம்.ஜி. இராமச்சந்திரன் போக, அண்ணரை ,கண்ணதாசன் ஆகியோரும் அறிஞர், கலைஞர், கவிஞர் என்று சிறப்பிக்கப்பட்டனர். இவர்களில் பலருக்கும் திராவிட நாடு பற்றியும் அக்கறையிருக்கவில்லை; தமிழ் நாடு பற்றிய தேசிய உணர்வும் இருக்கவில்லை. அண்ணா துரை காமராஜ ரோடு ஒப்பிடத்தக்களவு நாணயமானவர் எனலாம். ஆனால் தமிழக அரசியலுக்கு தமிழ் மொழிப் பற்றுக்கும் இனப் பற்றுக்கும் ஒரு தொடர்புமில்லை.

தமிழக அரசியலில் சினிமா உண்டு, சாதி உண்டு, இப்போது மதமும் உண்டு. தமிழ் கிடையாது .இடையிடை கிளறிவிடப்படுகிற மூர்க்கத்தனமான தமிழ் வெறி கூட மூன்று மாதத்துக்கு மேல் தாக்குப் பிடித்ததாகக் கூற முடியாது. என்ன இல்லா விட்டாலும் பயங்கரமான பண மோசடியும் ஊழலும் உண்டு. அதனாலே தான் கருணாநிதியை இந்திரா காந்தியால் ஆட்டிப் படைக்க முடிந்தது. எம்.ஜி.ராமச்சந்திரன் லஞ்சம் வாங்கியதாகக் கதையில்லாவிட்டாலும் சினிமா கறுப்புப் பணமும் வருமான வரி ஏய்ப்பும் பற்றிய விசாரணைகள் நடந்திருக்கின்றன.

தமிழக மக்கள் எல்லாவற்றையும் ஓரளவேனும் அறிவார்கள். ஆனால் முன் தெரிவுகள் இல்லை ஒரு உருப்படியான மாற்று அரசியல் இல்லாத வரை அவர்கள் தலித்தியங் கூட, சாதிக அரசியலை வளர்த்துள்ளதே ஒழிய விடுதலைக்கான அரசியலையல்ல. இலங்கை வாழ் தமிழ் மக்கள் இந்தியா பற்றியும் தமிழகம் பற்றியும் அறியாமல் ஏமாறுவதற்கு நமது ஊடகங்கள் துணை போகக் கூடாது.

சினிமா நடிக நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைத் துருவித் துருவி ஆராய்கிற அளவு அக்கறை கூட, தாம் அறிய வேண்டிய அரசியல் தலைமைகள் பற்றி விசாரிப்பதற்கு இல்லை என்றால், நமது எதிர்காலத்திற்கு நமது ஏடுகள் வழங்கவுள்ளதுதான் என்ன?

__________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் January 21, 2007

Labels:

Thursday, January 18, 2007

அன்னியசக்திகளை ஈழத்தமிழர் நம்பலாமா?

மறுபக்கம் - கோகர்ணன

இந்த அரசாங்கம் விடுதலைப் புலிகட்கோ `பயங்கரவாதத்துக்கோ' எதிரான ஒரு போரை நடத்துவதாக நான் நம்பவில்லை. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளல்ல என்று சொல்லிக் கொள்கிற அரசாங்கம் இன்று எல்லாத் தமிழ் மக்களையும் சந்தேக நபர்களாகவே நோக்குகிறது. மன்னார், முல்லைத் தீவு, வாகரைப் பகுதிகளில் நடத்திய குண்டு வீச்சுகள் எல்லாமே சாதாரணக் குடி மக்களையே தாக்கிக் கொன்றும் படுகாயப்படுத்தியுமுள்ளன. இவையெல்லாம் கவனமாகக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்று அரசாங்கம் சொல்வதை நாம் நம்பலாம். ஆனால் எதைக் குறிவைத்தார்கள் என்று அரசாங்கம் சொல்வதை நாம் நம்புவது கொஞ்சங் கடினம். எல்லாத் தாக்குதல்களின் பின்பும், பொது மக்களின் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியவுடன் விடுதலைப் புலிகள் பொது மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு அரசாங்கத்தின் பதிலாக வழங்கப்படுகிறது. இந்த வாதம் காசைச் சுண்டிப் போட்டு விட்டுத், "தலை விழுந்தால் எனக்கு வெற்றி, பூ விழுந்தால் உனக்குத் தோல்வி" என்று சொல்லுகிற மாதிரி, தோற்கடிக்க முடியாத ஒரு வாதம்.
அரசாங்கப் படைகள் அண்மைக் காலங்களில் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட எந்தத் தமிழர் பற்றியும் அரசாங்கம் எவ்விதமான அனுதாபமும் தெரிவிக்கவில்லை. எந்த உயிரிழப்பிற்கும் பொருட் சேதத்திற்கும் உடற்சேதத்திற்கும் நட்ட ஈடு வழங்க முன் வரவில்லை. இதை விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்கானவர்கள் என்று நம்பப்படுகிற சிங்கள மக்களுக்கோ படையினருக்கோ காட்டப்படுகிற பிரிவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பயனுள்ளது. அரசாங்கப் படைகள் இலக்கு வைப்பதாகக் கூறுகிற எந்த விடுதலைப் புலிகளின் தளமும் தாக்கப்படுவதற்கான விளக்கங்கள் அத் தாக்குதல்கள் போர் நிறுத்த உடன்படிக்கையின் மீறல்களல்ல என்று நியாயப்படுத்த போதாதவை.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழு, அண்மைக் காலங்களில் அரசாங்கத் தரப்பையே அதிகளவில் குற்றஞ்சாட்டி வந்துள்ளது. அரசாங்கத்திடமிருந்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு போதியளவு ஒத்துழைப்பைப் பெறவில்லை என்பதும் ஒரு முக்கியமான விடயம். போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பற்றிய அதிருப்தியை அரசாங்கம் தெரிவித்து வந்துள்ளதோடு, தாங்கள் போர் என்று சொல்லாமலே கண்காணிப்புக் குழுவினர் தாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டாத விருந்தாளிகள் என உணர்ந்து வெளியேறச் செய்கிற விதமாகவே அரசாங்கப் பேச்சாளர்களது கருத்துகள் அமைந்துள்ளன.

ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுவினரும் பதவியிலிருந்த செயலாளர் நாயகமான கோஃபி அனானும் இலங்கை நிலைவரம் பற்றி அண்மைக் காலங்களில் மிகுந்த கவலை தெரிவித்துள்ளார். கவலை தெரிவித்திருக்க வேண்டிய காலங்களில் எல்லாம் கையைக் கட்டிக் கொண்டிருந்தவர்கள் பலர் காலங் கடந்து கவலை தெரிவிக்கின்றனர். கண்டனம் தெரிவிக்க வேண்டிய இடங்களிலெல்லாம் கவலை தெரிவிப்பதும் அரசாங்கத்தைக் குற்றங் கூறுவதைத் தவிர்க்கு முகமாக இரு தரப்பினரையும் குற்றங் கூறிப் பேச்சுவார்த்தைகளில் இறங்குமாறு வற்புறுத்தி அறிக்கை விடுவதும் பயனற்ற செய்கைகள் மட்டுமல்ல, அவை எல்லாமே வெறும் மாய்மாலம் தான்.

ெகாஃபி அனான் போல வெட்கக் கேடான ஒரு ஐ.நா. பொதுச் செயலாளர் இருந்திருக்க இயலாது என்று பல முறை நினைத்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நண்பர்களிடம் சொல்லியுமிருக்கிறேன். இன்னொரு புறம் யோசித்துப் பார்த்தால், ஐ.நா. சபை அண்மைக் காலத்தில் மிகவும் வெட்கக்கேடான ஒரு நிலைக்குத் தன்னைக் கீழிறக்கியுள்ளது என்கிற நிலையில், அந்தப் பதவிக்கு ஒருவர் வருவதனால் தனது நேர்மை, சுய மரியாதை, பெருமிதம் போன்ற விலைமதிப்பற்ற உடைமைகளை எல்லாம் தியாகம் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் மிகவும் அவமதிக்கப்படவும் பலவிதமான குற்றச் சாட்டுக்கட்சிக்கு உள்ளாகவும் பதவியை இழக்கவும் நேரலாம். கோஃபி அனான், ஈராக் போர் தொடர்பாக, அமெரிக்காவுக்கு அதிருப்தி ஏற்படுத்துகிற விதமாக இரண்டு ஆண்டுகள் முன்பு எதையோ சாடைமாடையாகச் சொன்ன பின்பு, அவர் தொடர்பாக நிதி மோசடி பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதை நாம் நினைவு கூர்வது நல்லது.

அவருக்கு முன்பு பதவியிலிருந்த பூட்ரஸ் பூட்ரஸ் காலி தனது முதலாவது தவணை முடியுமுன்பே அமெரிக்காவின் ஆணைக்குக் கீழ்ப் படியாத விதமாகச் சிறிது பேசியதால், அவருக்கு இரண்டாவது தவணை மறுக்கப்பட்டது. கோஃபி அனான் சூடு கண்ட பூனையைப் பார்த்துப் பாடங்கற்ற பூனை என்பதாலேயே இரண்டாவது தவணையைப் பெற்றார். அதற்கு மேல் பதவி நீடிப்பு இல்லை என்ற தைரியத்தில் அவர் ஒரு வேளை வாய்திறந்திருக்கலாம். அமெரிக்காவா, கொக்கா? கோஃபி அனானை எங்கே எப்படி அமுக்குவது என்றெல்லாம் முன் கூட்டியே தெரியாமலா அவர் ஐ.நா. பொதுச் செயலாளராக அனுமதித்தார்கள். ஐ.நா. எப்படியோ, அதன் செயலாளரும் அப்படியே!

தமிழ் மக்களுடைய நிலை 1983 ஆம் ஆண்டு இன வெறியாட்டத்தின் பின்பு இருந்ததை விட மோசமாக உள்ளது. சர்வதேச சமூகம் என்பது பிரச்சினையை விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கும் அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைக்கும் இடையிலான மோதல் பற்றிய ஒன்றாகத் தான் இன்னமும் காணுகின்றன. இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கான பேச்சுகளைக் குழப்புவதிலும் கிழக்கில் தமிழ்- முஸ்லிம் முறுகலுக்குத் தூண்டுகோலாகவும் இருந்த நாடு எது என்பதையும் நாம் மறந்திருக்க மாட்டோம். பிரச்சினையின் தீர்வைச் சிக்கலாக்குவதில் பேரினவாத ஆட்சியாளர்கள் தமது முழு ஈடுபாட்டையும் காட்டி உழைத்து வந்துள்ளனர்.

அமைதிப் பேச்சுகள் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைச் சென்றடையாமல் தடுப்பதற்கு யார் எல்லாரும் எவ்வாறு பங்களித்தனர் என்பதைக் கவனிப்போமானால், அவர்களில் எவரும் அமைதியை நிலைநாட்டுகின்ற பேரில் இந்த நாட்டின் உள் விவகாரங்களில் குறுக்கிடுவது பற்றி நாம் மிகவும் கவனமாக இருப்போம். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? இந்திய மேலாதிக்கவாதிகளின் குறுக்கீட்டைத் தமிழ்த் தலைவர்களும் ஜாதிக ஹெல உறுமயவும் ஏக காலத்தில் வரவேற்கின்றனரென்றால் இந்தியா இரு தரப்புகளிலும் ஒரு தரப்பையாவது முட்டாளாக்கியிருக்கிறது அல்லது இரண்டு தரப்புகளையுமே முட்டாள்களாக்கியிருக்கிறது என்று தான் நாம் விளங்கிக் கொள்ள இயலும். அநேகமாக இந்தியா இரண்டு தரப்புகளையும் இலங்கை அரசாங்கத்தையும் முழு நாட்டையும் சேர்த்து முட்டாளாக்குகிற பணியிலே தனது கவனத்தைக் குவித்துள்ளது. விடுதலைப் புலிகளை முட்டாள்களாக்குகிறதற்கும் அவர்கள் தம்மாலானதைச் செய்வார்கள் என்பதை நாம் மறக்கலாகாது. யாரும் முட்டாளாக்கப்படுவது முக்கியமாக அவர்களது அறிவுபூர்வமான தெரிவின் பேரிலேயேதான்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை ஜேர்மனிக்குரியதாகியுள்ளதால், ஏற்கனவே இலங்கைக்கான நிவாரண உதவிகளை நிறுத்தியுள்ள ஜேர்மனி, விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையை நீக்க வழி செய்வர் என்று ஒரு கதை தமிழ் ஊடகங்களில் பரப்பப்பட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத் தடைக்குப் பின்னாலிருந்து செயற்பட்ட சக்தி அமெரிக்கா. அமெரிக்காவின் சார்பாக அதை வற்புறுத்திய பெருமை பிரித்தானியாவுக்குரியது. அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்து நிற்க இயலுமான நாடு எதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இப்போதைக்கு இல்லை. அப்படி அமெரிக்காவுக்கு எதிராக உறுதியாக நிற்பதானாலும் அது விடுதலைப் புலிகட்காகவோ இலங்கைத் தமிழர்கட்காகவோ அல்ல. ஈராக் விடயத்திலேயே பணிந்து போன நாடுகளிடம் தமிழர் எதை எதிர்பார்க்க இருக்கிறது?

தமிழ் மக்கள் `பயங்கரவாதத்தை' அதாவது ஆயுதமேந்திய அரச பயங்கரவாதத்திற்கெதிரான ஆயுதமேந்திய உரிமைப் போராட்டத்தை, நிராகரிக்கும் வரை அமெரிக்கா தமிழ் மக்களுக்கு எதிராகவே நிற்கும் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுள்ளது. அதில் மாற்றம் நிகழப்போவதில்லை. தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டால் அவர்களது உரிமைகளைப் பெற அமெரிக்கா எவ்வாறு உதவும் என்பதற்கு எதுவிதமான உத்தரவாதமும் உண்டா? உரிமைகள் கிடைப்பது போகட்டும், அரச படைகள் வடக்கு, கிழக்கில் நடத்துகிற அட்டூழியங்கள் முடிவுக்கு வரும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு? இற்றைவரையிலான தேசிய இனப் பிரச்சினையின் வரலாறு தமிழ் மக்களுக்கு என்ன பாடங்களைப் கற்பித்துள்ளது? தமிழ் மக்கள் எவ்வளவு கற்றுள்ளனர்?

கற்ற பாடங்களையே மாற்றி எழுதுவதற்குத் தான் எங்களுக்குத் தலைமைகள் உள்ளன என்றால் அந்தத் தலைமைகளைக் கைகழுவிவிட்டு மக்கள் தமக்குள்ளேயே தமது தலைமைத்துவத்தை உருவாக்கிப் பேண வேண்டிய காலம் வந்து விட்டது என்றுதான் பொருள்.

ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதோ, ஆயுதங்களைக் கீழே வைப்பதோ எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நியாயமான உணர்வுள்ள எவரும் பரிந்துரைக்கக் கூடிய ஆலோசனைகளல்ல. அவற்றுக்கான சூழ்நிலையை உருவாக்க உதவாமல் ஒடுக்கப்பட்ட மக்களை நிராயுதபாணிகளாக்குவது அவர்களது அடிமை நிலையை உருவாக்க உதவாமல் உதவும். எனவே, சர்வதேச சமூகத்தின் கனிவான ஆலோசனைகளையும் கட்டாயங்களையும் புறக்கணித்தே ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற இயலும் என்பதை நாம் மறக்கலாகாது.

இப்போது கருணாநிதியின் ஆதரவு பற்றி நமது தமிழ் தலைவர்களும் தமிழ் ஊடகங்களும் நெகிழ்ந்து போயுள்ளன. சிலபேருக்கு கோபாலசாமி பற்றிய நினைவுகள் மீது தூசு படிந்து போகிற அளவுக்கு தமிழக அரசியல்வாதிகள் போல இங்குள்ளவர்களும் நடந்து கொள்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள் அந்நிய அரசியல் மாயமான்களைத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கக் கூடாது. தமக்கு என்ன நடக்கிறது என்பதை அவர்கள் தெளிவாக உணராத வரை விடுதலைக்கு வழி ஏற்படாது. அவர்களிடமிருந்து அது பற்றிய உண்மைகளை மறைப்பது பாரதூரமான துரோகச் செயலாகும்.

________________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் January 14, 2007

Labels:


Get your own calendar

  • வன்னியன் commented:
    நாணயமானவரே,கவ்விப் பிடிச்சியள் பாருங்கோ ஒரு பிடி.பேராசிரியர் சொல்கிற அரசியல், ஊழல் ஆராயப...

    Anonymous commented:
    எழுதிக்கொள்வது: நாணயமானவர்//கருணாநிதியின் அரசியலை மட்டுமல்ல, தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என...

    வெற்றி commented:
    வன்னி,பதிவுக்கு மிக்க நன்றி.

    Anonymous commented:
    //1930 களில் ஜேர்மனியில் உருவான யூத இனவிரோதம் பின்பு கம்யூனிச/ இடதுசாரி விரோதமாகி இறுதியில...

    வன்னியன் commented:
    வருகை தந்து கருத்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி.

    Anonymous commented:
    வைகோ பிர்பாகரனின் தமிழக கொள்கை பரப்பு செயளாளர், வைக்கோ அவரின் கடைமை செய்கிறார், தமிழகத்தில...

    Anonymous commented:
    நல்ல கட்டுரை.பதிந்ததற்கு நன்றி.

Links