« Home | மாவிலாறு நீர்முடக்கமும் சிங்களத்தின் படையெடுப்பும் » | மொட்டவிழ்ந்த கனவுகள் » | படையினரின் வலிந்து தாக்குதல் போருக்கான ஒரு அழைப்பா? » | ஒட்டுக்குழு அரசியலுக்கு வாகனேரியில் முற்றுப்புள்ளி » | தனியரசு அமைப்போம் - புலிகள் அறிவிப்பு » | தர்முசிவராம் (பிரமிள்) பற்றி » | இஸ்ரேலின் அடாவடியும் படிக்க வேண்டி பாடங்களும் » | பொஸ்பரஸ் தொடங்கி ஒற்றைத் துப்பாக்கி வரை... » | இந்து சமுத்திரத்தின திறவுகோல் யாருக்கு? » | கேணல் இறமணன் »

சிங்கள ஊடகங்களின் நடுநிலைமை

மறுபக்கம் - கோகர்ணன்

20.7.2006 டெய்லி மிரர் தலையங்கத்தைப் பார்த்தேன். லெபனானில் இஸ்ரேலிய விமானங்கள் நடத்துகிற படுமோசமான குண்டு வீச்சைப் பற்றி எழுதியிருந்தது. லெபனானில் இஸ்ரேல் நடத்துகிற தாக்குதலுடன் ஒப்பிட்டால், இலங்கை அரசாங்கம் மிகவும் பொறுமையுடன் நடந்து கொள்வதாக அரசாங்கத்தை மெச்சி எழுதியிருந்தது. டெய்லி நியூஸை விடக் கொஞ்சம் நிதானமும் ஐலன்டை விடச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பற்றிய சகிப்பும் பொறுப்புணர்வும் கொண்டதும் கொஞ்சம் வாசிக்கக் கூடியதுமான ஏடாகவே டெய்லி மிரரைப் பார்த்திருக்கிறேன். அதன் பின்னணியில் உள்ள பதிப்பீட்டு நிறுவனத்தின் பேரினவாத அரசியல் பற்றி நான் அறியாதவனல்ல. எனினும், டெய்லி மிரர் பேரினவாதத்துக்கு ஊறின்யங்கம் அந்தக் கவனமான தோற்றத்தைக் களைந்து பத்திரிகை நிறுவனத்தின் உண்மையான முகத்தை அல்லது அதன் ஒரு சிறு பகுதியை நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷவோ, அவரது தலைமையின் கீழுள்ள ஆயுதப்படைகளோ இப்போது ஆயுதப்படையினர் மீது தொடுக்கப்படுகிற தாக்குதல்கட்குப் பதிலடி கொடுக்காமல் இருக்கிறதாகச் சொன்னால் அது முற்றிலும் உண்மையல்ல. அவர்களால் யாரை எளிதாக அடிக்க இயலுமோ அவர்கள், அதாவது அப்பாவித் தமிழர்கள், அடிக்கப்படுகிறார்கள். சாதாரணமான தமிழ் மக்கள் துன்புறுத்தலுக்கும் சாவுக்கும் அஞ்சி இருப்பிடங்களை விட்டு ஓடுகிறார்கள். அச்சத்தை நிரந்தரமானதாக்குவதற்காக, எழுந்தமான முறையில் கொலைகள் நடந்தபடியேயுள்ளன. இரு தரப்பிலும் சீண்டல் தொடருகிறது என்பதே உண்மை. எனினும், ஒரு பக்கம் மட்டுமே போர் நிறுத்த மீறலாகவும் விஷமத்தனமாகவும் தெரிகிறது.

இராணுவ உயரதிகாரியான பாரமி குலதுங்கவின் படுகொலைக்குப் பதிலடியாக, அரசாங்கப் படைகள் எதையுஞ் செய்யவில்லை என்பதுடன் அதற்குப் பின்னர் ஏற்பட்ட இழப்புக்களால் விளைந்த முக முறிவைச் சமாளிக்கவும் எதையுமே செய்யவில்லை. ஆயினும் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல்கள் ஓயவில்லை. வாகனேரிப் பகுதியில் இரண்டு உயர் அதிகாரிகள் உட்படப் பதின்மூன்று பேர் கொல்லப்பட்டதற்கு விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த மீறல் காரணமல்ல என்று ஏற்கிற அளவுக்கு மேற் பேரினவாத ஊடகங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது நியாயமில்லை.

வங்காலைப் பகுதியில் கடற்படையினர் நடத்திய தாக்குதலின் கோரத்தை மன்னார் பேராயர் வத்திக்கானுக்கு அறிவித்ததன் விளைவாகவே அது பற்றிய வழமையான கண்துடைப்பான விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணை பிறப்பித்தார். தாக்கப்படக் கூடிய கத்தோலிக்கரல்லாதோருக்காக யாரிடம் முறையிடலாம்? சங்கர மடத்திடமா, சாயிபாபாவின் பிரஷாந்தி நிலையத்திடமா? அப்படி யாராவது பரிந்து பேசினாலும் இன்னொரு விசாரணைக் குழுவை நியமிப்பதற்கும் மேலாக என்ன நடக்கும்?

அரசாங்கம் அமைதி காக்கிறது என்ற தோற்றம் பேணப்படுகிறது என்றால், அது அமைதி காக்க வேண்டும் என்ற முடிவை ஆழ யோசித்து வந்தடைந்துள்ளது என்பதாலல்ல. என்ன காரணங் கொண்டு சர்வகட்சி மாநாடு நடத்தப்படுகிறதோ, என்ன காரணங்கொண்டு தீர்வு பற்றிய ஆலோசனைகள் முன்வைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதோ அந்த நேர்மையற்ற காரணத்திற்காகவே அமைதி பேணுகிற தோற்றமுங் காட்டப்படுகிறது.
இதையெல்லாம் நம்பி ஏமாறுகிற அளவுக்குச் `சர்வதேச சமூகம்' எனப்படுகிற முதலாளிய நாடுகளும் பலவேறு `உதவி' வழங்கும் அமைப்புக்களும், கண்காணிப்பாளர்களும் இன்னும் பிறரும் முட்டாள்களில்லை. ஆனால், வேண்டுமான போது ஏமாறுகிறது போல தோற்றங்காட்டுகிற கெட்டித்தனம் அவர்களிடம் உண்டு. அவர்கள் இந்த நாட்டில் யாரையும் நம்பவில்லை, யாரையும் நேசிக்கவில்லை, யாருக்காகவும் எதையும் செய்யப் போவதில்லை. எனினும், அவர்களது எதிரிகள் யார் என்று அவர்கட்டுத் தெளிவாகத் தெரியும். எனவே தான் அதற்கேற்ப அவர்களால் வியூகங்களை வகிக்க இயலுகிறது.

ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளின் அபத்தமான முடிவையடுத்து விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவினர் தமிழ் மக்கள் மீதான பாரபட்சத்தின் விபரங்கள் உட்பட விரிவான ஒரு அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டனர். அதிற் பேரினவாதஆட்சியாளர் பற்றி கூறப்பட்ட எதுவும் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்த அரசாங்கம் எதுவும் அறியாததல்ல. தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன என்று அவர்கட்குத் தெரியும் என்று எங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்கு அவர்கள் கொஞ்சம் முயற்சி எடுக்கிறார்களே ஒழிய, அதற்கு மேலாக ஒரு துரும்பையும் அவர்கள் எடுத்துப் போடப்போவதில்லை. இலங்கை அரசாங்கத்துக்கு அது தெரியும்.

விடுதலைப் புலிகள் மீது பழியைப் போடக்கூடியவிதமாக ஒரு போரைத் தொடங்கலாமென்றால்,போரை நடத்திக் கொண்டே அமைதி பற்றிப் பேசலாமென்றால் அவர்கள் எல்லோருக்கும் அது போதுமானதாயிருக்கும். ஆனால், அதுதான் நாட்டு மக்களுக்குத் தேவையானதா? நாட்டு மக்கள் பற்றி அக்கறையுள்ள யாரும் இந்த நாட்டை ஆண்டதாகச் சொல்வது கடினம். அதைவிட நாட்டு மக்களுக்குத் துரோகஞ் செய்கிறவர்களே நாட்டை ஆள முடியும் என்கிற ஒரு சூழ்நிலை ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது. அதற்கு இசைவாகவே நாட்டின் பிரதான அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் செயற்பட்டு வருகின்றன.

மக்கள் நம்ப மறுக்கும் ஒரு அரசியற் கட்டமைப்பைப் போல, அந்நிய மேலாதிக்கவாதிகட்கு வசதியான ஒன்று அமைவது அரிது. அவர்கள் ஊழல் மிக்க ஆட்சியாளர்களை நேசிக்கிறார்கள். மக்களைப் பிளவுபடுத்தி மோதவிடுகிற அரசியலை நேசிக்கிறார்கள். இனப் பகைமையையும் வெறுப்பையும் போதிக்கிற பத்திரிகையாளர்களையும் ஒலி - ஒளிபரப்பாளர்களையும் நேசிக்கிறார்கள். இத்தகைய குழப்பமான சூழலின் மூலமே அரசியலை நிராகரிக்கிற அரசியலை அவர்களால் முன்னெடுக்க இயலும். மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசாங்கங்களால் நிறைவு செய்ய இயலாத போது தான் தனியார் கல்வி, தனியார் மருத்துவம், தனியார் போக்குவரத்து, தனியார் தொலைத்தொடர்பாடல், தனியார் மின் விநியோகம், தனியார் நீர்வழங்கல் என்றவாறு சமூகமொன்றின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் மக்களிடமிருந்து பராதீனப்படுத்தி வசதி படைத்தவர்களுக்கு ஒரு வகையான நாடாகவும் வசதியற்றவர்கட்கு இன்னொரு நாடாகவும் இந்த நாட்டை மாற்ற முடியும். தங்களது உரிமை என்று மக்கள் அனுபவித்த ஒவ்வொன்றையும் யாரோ மனமிரங்கித் தருகிற தருமமாகவும் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் போது எளிதாக மறுக்கக் கூடியதாகவும் மாற்றுகிற விதமாகவே அரசாங்கத்தின் பொறுப்புக்கள் அந்நிய ஆதிக்கத்திற்குட்பட்ட என்.ஜீ.ஓ.க்களிடம் கைமாறுகின்றன.

இந்த நாட்டின் உண்மையான எதிரிகள் யாரென்று எங்கள் ஊடக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அறியும். ஆனாலும், பயங்கரவாதமும் விடுதலைப் புலிகளும் வசதியான எதிரிகள். மற்ற எதிரிகளுடன் பகைக்க நமது ஊடகங்கள் ஆயத்தமாக இல்லை. பெரிய ஊடக நிறுவனங்கள் பலவற்றின் அதிகாரம் இந்த நாட்டின் எதிரிகளுடன் சமரசம் செய்து இந்த நாட்டை முற்று முழுதாக அந்நியரிடம் கையளிக்கத் துடிக்கிறவர்களது கைகளிலேயே உள்ளது. எனவே தான், டெய்லி மிரரின் உண்மையான முகம் நமக்கு வியப்பளிக்கக் கூடாத ஒன்றாக உள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற கருத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் உறுதியாக நிற்பதாகவும் அவற்றுடன் ஒத்துழைக்க உலகின் அனைத்து நாடுகளும் ஆயத்தமாக இருப்பது போலவும் அந்த அணியில் நிற்பது போலக் காட்டிக் கொண்டால் நமக்கு (உண்மையில் இந்த நாட்டின் அதிகாரவர்க்கத்துக்கு) நன்மை கிடைக்கும் என்று நம்புவதற்கு நமது ஊடகங்களின் எசமானர்கள் முட்டாள்களல்ல.

"விடுதலைப் புலிகள் வேறு தமிழர் வேறு" என்று பல அமைச்சர்கள் இப்போது கண்டறிந்து சொல்கிறார்கள். பத்திரிகைகளும் தலையங்கங்கள் தீட்டுகின்றன. எனக்கும் அக் கருத்து உடன்பாடானதுதான். ஆனால், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திலிருந்து பிரிக்க இயலாதுள்ளதே! அது பற்றி இவர்கள் யாராவது சிந்தித்திருக்கிறார்களா? விடுதலைப் புலிகளும் பிற போராளிக் குழுக்களும் தோன்றக் காரணமாக இருந்த நியாயமான பிரச்சினைகளில் எந்த ஒன்றைத் தீர்ப்பது பற்றித்தான் இவர்கள் அக்கறை காட்டியிருக்கிறார்கள்?

"தமிழிற் கடிதம் எழுதினால் சிங்களத்தில் பதில் வருகிறது என்பது போல, வடக்கு, கிழக்கில் சிங்களத்தில் எழுதினால் தமிழில் பதில் வருகிறது" என்று கூசாமற் திரிப்பில் இறங்குகிற டியூ குணசேகர போன்றவர்கள் தமிழருக்கு இரங்குவது போலத்தான் டெய்லி மிரர் போன்ற ஏடுகளது நடு நிலைப் பம்மாத்தும் உள்ளது. பேரினவாதத்தால் இந்த நாட்டு மக்களைப் பிளவுபடுத்தியவர்களில் இந்த நடுநிலை ஊடகக்காரர்களும் அடங்குவர்.
சிங்கள, ஆங்கில ஊடகங்களை விடத் தமிழ் ஊடகங்கள் அதிகம் யோக்கியம் என்பது என் கருத்தல்ல. பல்வேறு தில்லுமுல்லுகளையும் என்னை விட நன்கு அறிந்தவர்கள் உள்ளனர். அதேவேளை, ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பான குரலாகத் தமிழ் ஊடகங்களில் ஒரு பகுதி பயன்படுகிறது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆயினும் அது போதுமானதல்ல.
பத்திரிகை சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் பற்றிப் பேசுகிறோம். ஆனால், நமது பத்திரிகைகள் சமூகப் பொறுப்பாக நடந்து கொள்கின்றனவா என்பது பற்றி நாம் பேசுகிறோமா? பத்திரிகைகள் ஆட்சியாளருக்கு மாறாகப் பேசும் போது மட்டும் ஆட்சியாளர்களது சார்பில் பத்திரிகைகளது பொறுப்பு பற்றி பேசப்படுகிறது. மக்களைக் குழப்புகிற விதமாகவும் உண்மைகளைத் திரிக்கிற விதமாகவும் இந்த நாட்டை நாசம் செய்கிற நடவடிக்கைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கீகரிக்கிற விதமாகவும் ஊடகங்கள் நடந்து கொள்ளுவது கருத்துச் சுதந்திரம் தொடர்பானதல்ல, அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பானது.

இஸ்ரேலிய அரசைவிட இலங்கை அரசு பரவாயில்லை என்பது இலங்கை அரசுக்கான நற்சான்றில்லை. ஐலன்ட்டை விட டெய்லி மிரர் பரவாயில்லை என்பது டெய்லி மிரருக்கு நற்சான்றில்லை.
_____________________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் Sunday, July 30, 2006

Labels:


Get your own calendar

Links